Showing posts with label Jorge Luis Borges. Show all posts
Showing posts with label Jorge Luis Borges. Show all posts

Sunday, August 21, 2011

வட்டச் சிதைவுகள் - ஜார்ஜ் லூயி போர்ஹே தமிழில் - பிரமிள்

தமிழில் - பிரமிள்

அந்த ஏகோபித்த இரவில் அவன் தரையிலிறங்கியதை யாரும் காணவில்லை. அவனது மூங்கில் படகு அங்கே அப்புனிதச் சேற்றில் புதைந்ததையும் யாரும் காணவில்லை. ஆனால் ஒரு சில நாட்களில், பேச்சு வார்த்தைக்கு இடம் கொடுக்காத இந்த மனிதன் தெற்கிலிருந்து வந்திருக்கிறான் என்பதையோ, நதி வரும் வழியில், மேலே, மலையின் பிளந்த பகுதியில் கிரீக் மொழியினால் ஜென்ட் மொழி பாதிப்படையாமலும் குஷ்டரோகம் அடிக்கடி வராமலும் உள்ள எண்ணற்ற borges கிராமங்களுள் ஒன்று அவனது ஊர் என்பதையோ அறியாதவர் யாருமில்லை.

அந்தப் புகைநிற மனிதன் குனிந்து சேற்றை முத்தமிட்டான் என்பதும், தசையைக் கிழிக்கும் கூரிய இலைகளை (உணராததால் என) ஒதுக்காமலே கரையேறினான் என்பதும், அருவருப்புடனும் ரத்தக் கறையுடனும் தவழ்ந்தபடி எப்போதோ அக்னி நிறமாயிருந்து இப்போது சாம்பல் நிறமாகிவிட்ட ஒரு புலியினதோ குதிரையினதோ சிலை கிரீடமாக நிற்கும் ஒரு வட்ட அடைப்பை நோக்கி ஏறினான் என்பதும் தான் மிக நிச்சயமானது. புராதன அக்னி ஒன்றினால் விழுங்கப்பட்டு, விஷப்புகை போன்ற கானகத்தினால் புனிதத்துவத்தை இழந்து, அதன் கடவுளும் மனித வழிபாட்டை இழந்துவிட்ட ஒரு கோவில்தான் இந்த வட்டம்.

அவன் சிலையின் பீடத்தடியில் உடலை நீட்டிப் படுத்துக் கொண்டான். உச்சிச் சூரியன் அவனை விழிப்படையச் செய்தது. தனது காயங்கள் ஆறிவிட்டதில் அவன் வியப்புறவில்லை. சோகை படிந்த கண்களை மூடி அவன் துயின்றான். - உடலின் பலவீனத்தால் அல்ல, மனசின் தீர்மானத்தால். இந்தக் கோயில்தான் தனது மாற்ற முடியாத தீர்மானத்திற்குத் தகுந்த இடம் என்று அவனுக்குத் தெரியும். கீழ் நதிப்புறத்தில் இப்போது எரிந்து இறந்துவிட்ட கடவுள்களின் இன்னொரு ஆலயம் ஓயாது வளரும் மரங்களினால் மூழ்கடிக்கப்படாமல் தப்பித்து இருக்கிறது என்று அவனுக்குத் தெரியும்.

காலையளவில் ஒரு பறவையின் ஆறுதல்படுத்த முடியாத அலறலில் அவன் கண் விழித்தான். பாதரட்சையற்ற காற் சுவடுகளும், உணவுக்கு சில ஃபிக் இலைகளும், ஒரு கூஜாவும், அவனிடமிருந்து பாதுகாப்பை வேண்டியோ, அவனது மந்திர சக்திக்கு அஞ்சியோ, அந்தப் பிரதேசத்து மனிதர்கள் அவனது நித்திரையை ஒற்றுப் பார்த்திருக்கிறார்களென எச்சரித்தன. பயத்தின் குளிரில் அவன் கல்லறை போன்ற ஒரு வெடிப்பை அங்கே சிதைந்த ஒரு சுவரில் தேடிப் பழக்கமில்லாத இலைகளினுள்ளே மறைந்து கொண்டான்.

அவனை வழி நடத்திய நோக்கம் இயற்கையை மீறிய ஒன்றாயினும் சாதிக்க முடியாததல்ல. ஒரு மனிதனைக் கனவு கொள்ள அவன் விரும்பினான். அம்மனிதனை அவனது சிறு சிறு நுட்பங்களில் பரிபூரணமாகக் கனவு கண்டு அவனை நிதர்சன உலகிலே எழச் செய்ய அவன் விரும்பினான். இந்த மாந்திரீக முயற்சி அவனது மனப்பரப்பு முழுவதையும் வரளச் செய்து விட்டது. யாராவது அவனது பெயரை அல்லது அவனது முன் வாழ்வில் ஒரு நிகழ்ச்சியைப் பற்றிக் கேட்டிருந்தால் அவனால் பதில் தந்திருக்க முடியாது.

இந்த சிதைந்த கானகக் கோயில் அவனது தேவைக்குப் பொருந்தியிருந்தது. ஏனெனில் அவனது குறைந்தபட்ச அளவு காட்சியுலகு அது. தொழிலாளர்கள் சமீபத்திருப்பதுகூட அவனுக்குப் பொருந்தியிருந்தது. ஏனெனில் அவனது எளிய தேவைகளை நிரப்ப அவர்கள் தாங்களே பொறுப்பெடுத்துக் கொண்டார்கள். அவர்கள் அவனுக்குக் கொண்டு வந்த அரிசி உணவும் பழமும் நித்திரைக் கனவு என்ற ஒரே முயற்சிக்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்த அவனது சரீரத்துக்குப் போதுமானதாக இருந்தது.

ஆரம்பத்தில் அவனது கனவுகள் ஒரே குழப்பமயமாயிருந்தன. பிறகு ஒரு சிறு கால அளவில், அவை ஒன்றை ஒன்று மறுத்து பின் இவ்விரு எதிரிடைகளும் இணங்கி வருவதான நியதி கொண்டன. இந்த வேற்றூர் மனிதன், வட்டவடிவமாய், ஓரளவில் இந்த எரிந்த கோயிலேயான ஒரு போட்டி அரங்கத்தின் மையத்திலே தான் இருப்பதாகக் கனவு கண்டான்.

உறவு கொள்ள மறுக்கும் மாணவர்கள், தொங்கும் பலகை ஆசனங்களில் முகிற்கூட்டங்கள் போல் நிரம்பியிருந்தனர். அதி தூரத்து மாணவர்களின் முகங்கள், தாரகைகளின் உயரத்தில் பல நூற்றாண்டுகளின் தூரத்தில் தொங்கின ஆனால் அவர்களது முகங்கள் ஸ்பஷ்டமாகத் தெரிந்தன. இந்த மனிதன் தனது மாணவர்களுக்கு உடற்கூறு, பிரபஞ்சவியல், மாந்திரீகம் என்ற துறைகளில் உரை நிகழ்த்தினான். தங்களது வெற்று மாயை நிலையிலிருந்து தங்களில் ஒருவனை ரட்சித்து நிதர்சன உலகினுள் மாறி நுழைய வைக்கக் கூடியது இப்பரீட்சை என இதன் முக்கியத்தை ஊகித்தறிந்தவை போல அம்முகங்கள் ஆவல் அவசத்தோடு இவன் உரைக்குக் காது கொடுத்துக் கேட்டு புரிந்து கொண்ட வகையாகப் பதிலிறுக்க முயன்றன. விழிப்பிலும் சரி தூக்கத்திலும் சரி இம் மனிதன் தனது ஆவிகளின் பதில்களை ஆராய்ந்தான். போலிகளினால் தான் ஏமாந்து போய்விடாமல் பார்த்துக் கொண்டான். அதோடு, சில சிக்கல்களின்போது வளர்ந்து கொண்டிருக்கும் அறிவு ஒன்றை அவன் உணர்ந்தான். இவ்வகையாக, பிரபஞ்சத்தில் பங்கு கொள்வதற்குத் தகுதியான உயிர் ஒன்றை அவன் தேடிக் கொண்டிருந்தான்.

***

தனது சிந்தாந்தத்தைப் பேச்சு மூச்சற்று ஏற்றுக் கொள்பவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்க முடியாதெனவும், ஆனால் அவ்வப்போது தன்னை எதிர்க்க முனைந்தவர்களிடமிருந்துதான் எதையும் எதிர்பார்க்கலாம் எனவும் ஒன்பது பத்து இரவுகளின் பின் அவன் ஒருவித கசப்போடு புரிந்துகொண்டான். இவர்களுள் முதல் ரகத்தினர் அன்புக்கும் ஆதரவுக்கும் உரியவர்களானாலும், தனிமனிதர்களென உயர முடியவில்லை. இரண்டாவது ரகத்தினரோ முன்னவர்களைவிட ஒரு சிறிது உந்நதமானவர்களாக ஏற்கனவே வாழ்வு பெற்றிருந்தனர். ஒரு முன் மாலைப் போது (இப்போது முன் மாலைகளும் துயிலுக்கு அளிக்கப்பட்டிருந்தன. இப்போது சூர்யோதயத்தில் ஒரு சில மணி நேரங்கள்தான் அவன் விழித்திருந்தான்) அவன் ஒரேயொரு மாணவனை வைத்துக்கொண்டு, மீதியிருந்த பிரமாண்டமான மாயாரூப சீடர் குழு முழுவதையும் அப்படியே நீக்கிவிட்டான். மீந்திருந்தவன் உறவு கொள்ளக் கடினமான, சில வேளை அடங்க மறுக்கிற ஒரு சிறுவன். அவன் முகவெட்டு அவனைக் கனவு கொண்டிருந்தவனுடைய முகவெட்டை ஒத்திருந்தது. தன்னுடைய சகமாணவர்களை அப்படி அநாயசமாகத் துடைத்து அழித்து விட்டது பற்றி அவன் வெகு நாள் நிச்சலனப்படவில்லை. ஒரு சில தனி வகுப்புகளோடு, அவனது முன்னேற்றம் ஆசிரியரைத் திகைக்க வைக்கப் போதுமானதாக இருந்தது. இருந்தும் ஒரு எதிர்பாராத விபத்து நேர்ந்துவிட்டது.

ஒரு நாள் அவன் ஒரு பிசுபிசுத்த பாலைவனத்திலிருந்து புறப்பட்டாற்போல் தனது நித்திரையிலிருந்து விழித்தவன், உபயோகமற்றுக் கிடந்த முன் மாலை ஒளியைக் கண்டு அதை விடிகாலை என்று குழம்பினான். அதோடு தான் அன்று கனவு காணவில்லை என்பதைத் திடீரென உணர்ந்தான். அன்றிரவு முழுவதும், பகல் முழுவதும் துயிலின்மையின் தாங்கொண்ணாத் தெளிவு அவனைப் பீடித்தது. தன் பலத்தை இழந்து களைப்புறுவதற்காகக் கானகத்துள் அலைந்து ஆராய முயன்றான். நச்சுத் தாவரங்களிடையே உபயோகமற்ற ஆரம்ப தர்சன வீச்சுக்களின் நாளங்கள் ஓடிய துயில் கணங்கள் சில அவனுக்குக் கை வந்தன. அந்த மாணவ சரீரத்தை அவன் சேர்த்தெடுக்க முயன்றும், ஒரு சில உற்சாக மந்திரங்களை அவன் உச்சரித்து முடிக்கு முன்பே அவ்வுடல் ஊனமாகி மறைந்தது. ஓரளவுக்கு ஓய்வற்றதென்ற இத்தபஸினால் அவனது கிழக் கண்களில் கோபக் கண்ணீர் எரிந்தது.

மகத்தானதும் கீழ்மையானதுமான ஒரு முறைமையின் எல்லாப் புதிர்களையும் அவன் ஊடுருவ வேண்டுமாயினும் ஒன்றுக்கொன்று வரிசைக் கிரமமற்று, அசைவு மயமாகவே இருக்கும் கனவுப் பதார்த்தங்களை கொண்டு உருச் சமைப்பதென்பதுதான் எவனும் செய்யக்கூடிய கடினமான காரியம் என அவன் உணர்ந்தான். இது மணலைக் கயிறாகத் திரிப்பதைவிட, முகமற்ற காற்றை நாணயங்களாகப் பதிப்பதைவிடக் கடினமானது. தன்னை வழி தடுமாற்றிய பிரம்மாண்ட மயக்கத்தை மறப்பதென சபதமெடுத்துக் கொண்டு அவன் வேறொரு வேலை முறையைத் தொடரந்தான். அம்முறையைத் தொழிற்படுத்து முன்னால் தனது மயக்கத்தின்மூலம் இழந்த பலத்தைத் திரும்பப் பெறுவதற்காக ஒரு மாதத்தைச் செலவிட்டான். கனவு காணவேண்டுமென்ற முன்னேற்பாட்டை முதலில் கைவிட்டான். உடனேயே என ஒவ்வொரு நாளும் ஒரு கணிசமான வேளை நித்திரை அவனுக்குக் கை வந்தது. இந்தக் காலகட்டத்தில், கனவு கண்ட ஒரு சில வேளைகளை அவன் அலட்சியப் படுத்திவிட்டான். தனது பெரு முயற்சியை ஆரம்பிப்பதற்கு, சந்திரவட்டம் பூரணமாகும்வரை காத்திருந்தான். பிறகு முன் மாலைப் போது நதி நீரில் தன்னைப் புனிதமாக்கிக் கொண்டபின், ஒரு மகத்தான நாமத்தின் தேர்ந்தெடுத்த அசைகளை உச்சரித்துவிட்டுத் துயிலில் ஆழ்ந்தான். உடனேயே ஹ்ருதயம் துடிதுடிக்கக் கனவு காணத் துவங்கி விட்டான்.

இன்னும் ஆணோ பெண்ணோவெனத் தெரியாத ஒரு மனித உடலின் அரையிருளினுள் அது கதகதப்பாக, மர்மமாக, ஒரு முஷ்டி அளவினதாய் கரு ரத்த நிறத்தில் அமைந்திருப்பதாக அவன் கனவு கண்டான். ஒரு தீட்சண்யமான அன்புடன் பதினான்கு தெளிந்த இரவுகளாக அவன் அதைப்பற்றிக் கனவு கண்டான். அதை அவன் தீண்டவில்லை. அதற்கு தன்னை சாட்சியாக நிற்க, அதை அவதானிக்க, அடிக்கடி அதைத் தனது பார்வையினாலேயே திருத்தியமைக்க மட்டுமே அவன் தன்னை அனுமதித்துக் கொண்டான். ஒவ்வொரு கோணத்திலும், ஒவ்வொரு தூரத்திலுமிருந்து அதை நோக்கினான். அதன் மயமாகவே தான் மாறி அதைக் கவனித்தான். பதினான்காவது இரவு அவன் சுவாச கோளத்துக்குச் செல்லும் அதன் ரத்த நாளத்தை தனது ஆள்காட்டி விரலினால் மென்மையாகத் தீண்டினான். அதன் பிறகு முழு ஹ்ருதயத்தையும், அதன் உள்ளையும் புறத்தையும். இச் சோதனை அவனுக்குத் திருப்தியளித்துவிட்டது. ஒரு இரவு வேண்டுமென்றே அவன் கனவு காணவில்லை. அதன்பிறகு ஹ்ருதயத்தை மீண்டும் கவனத்துக்கு எடுத்தான். ஒரு கிரகத்தின் நாமத்தை உச்சரித்து வேறொரு உறுப்பின் கனவுருவை மேற்கொண்டான்.

ஒரு வருஷத்திற்குள் அவன் எலும்புக்கூட்டுக்கும் கண்ணிமைக்கும் வந்துவிட்டான். அளவற்ற தலை மயிர்கள்தான் மிகக் கடுமையான வேலை தரும்போல தோன்றின. அவன் முழுமையில் ஒரு மனிதனைக் கனவு கண்டான். ஒரு இளம் மனிதன். ஆனால் எழுந்து உட்காராத, பேசாத, கண்ணிமைகளைத் திறக்க மாட்டாத மனிதன் இவன். இரவு மாறி இரவு தோறும் இம் மனிதன் துயிலில் கிடப்பதாகவே அவன் கனவு கண்டான்.

***

இறை அறிவின் பிரபஞ்சத்துவத்திலே அரை உத்வேகங்கள் எழுந்து நிற்க முடியாத ஒரு செந்நிற ஆதாமை சமைக்கின்றன. தூசியில் பிறந்த, அரை குறையான, தாறுமாறான தாது நிலையிலுள்ள அதே ஆதாமைப் போன்றவன் தான் இந்த மாந்திரீகனது இரவு ஜ்வாலைகளில் காய்ச்சிச் சமைக்கப்பட்ட கனவுகளின் ஆதாமும். ஒரு முன் மாலையில் இவன் தன் சிருஷ்டியை ஒரேயடியாக அழிக்க எண்ணிப் பின் மனதை மாற்றி கொண்டான். (அவன் அதை அழித்திருந்தானென்றால் நல்லது.) பூமியிலுள்ள தெய்வங்கள் யாவற்றுக்கும் செய்த வழிபாடுகள் முழுவதும் வரண்டு போனதில், அவன், புலியோ குதிரையோ ஆன அங்கிருந்த விக்கிரகத்தின் பாதங்களில் வீழ்ந்து அதன் அமானுஷ்யமான உதவியை வேண்டிக் கெஞ்சினான். அன்று மாலைக் கருக்கலில் அவன் அவ்விக்கிரகத்தைக் கனவில் கண்டான். அக் கனவில் அது உயிரோடு துடிதுடித்துக் கொண்டிருந்தது. அது ஒரு புலிக்கும் குதிரைக்கும் பிறந்த அநாமத்தாக இருக்கவில்லை. ஆனால் அது இவ்விரு ஆக்ரோஷமான பிராணிகளாகவும் -ஒரு காளையாகவும் - ஒரு ரோஜாவாகவும் - ஒரு புயலாகவும் நின்றது. தனது பூவுலக நாமம் அக்னி எனவும் இந்த வட்டக் கோயிலில், (இது போன்ற வேறு கோயில்களில் போல) மனிதர்கள் தனக்குப் பலிகளிட்டு முன்னொரு கால் வழிபட்டார்களெனவும், அக்னியையும் கனவு காண்பவனையும் தவிர மற்றெல்லாரும் கனவில் கிடக்கும் ஆவியுருவை ரத்தமும் தசையுமான மனிதனென்றே நம்பும்படி தான் உயிர்ப்பித்துத் தருவதாகவும் அவனை அது உணரவைத்தது. இம் மனிதனுக்கு எல்லா பூஜை முறைகளிலும் போதனை ஆனவுடன் கோபுரங்கள் இன்றும் நிற்கும் அந்த அடுத்த கோயிலுக்கு இவன் குரலேனும் அந்தப் பாழ்க்கட்டிடத்தில் தன்னை வாழ்த்திப் புகழ அனுப்பிவிடும் படியும் கட்டளையிட்டது. கனவு கொண்டவனின் கனவில் கனவு காணப்பட்டவன் உயிர்த்தெழுந்தான்.

தனக்கு இடப்பட்ட கட்டளைகளை மாந்திரீகன் நிறைவேற்றினான். அவன் ஒரு குறிப்பிட்ட அளவு காலத்தை (முடிவில் இக் கால அளவு இரண்டு வருஷங்களென ஆயிற்று) அவனுக்குப் பிரபஞ்சத்தின் ரகசியங்களையும் அக்னிவழிபாட்டையும் கற்பிப்பதற்கு அர்ப்பணித்தான். மனதுக்குள் அவனிடமிருந்து தான் பிரிவடையவேண்டும் என்ற எண்ணத்தில் வேதனை கொண்டான். பாண்டியத்தியத் தேவை என்ற சாக்கில் ஒவ்வொரு நாளும் கனவு காணும் கால அளவை அதிகரித்துக் கொண்டான். கொஞ்சம் குறைபாடாயிருந்த வலது தோளையும் புதுப்பித்தான். சில வேளைகளில் இதெல்லாம் ஏற்கனவே நடந்திருக்கின்றன என்ற தோற்றம் அவனை சங்கடப் படுத்தியது.... பொதுவாகப் பார்த்தால், அவனது நாட்கள் மகிழ்ச்சியிலேயே கழிந்தன. கண்களை மூடியதும் அவன் நினைவு: இப்போது நான் என் மகனுடன் இருக்கப் போகிறேன். அல்லது வெறுமே: எனது காரணத்தில் வந்த என் மகன் எனக்காகக் காத்திருக்கிறான், நான் அவனிடம் போகாவிட்டால் அவனுக்கு இருப்பு இல்லை.

கொஞ்சம் கொஞ்சமாக அவனை அவன் நிதர்சனத்துக்கு பழக்கப்படுத்த ஆரம்பித்தான். ஒரு தடவை ஒரு தூரத்து நிலச்சிகரத்தில் ஒரு கொடியை நடும்படி அவனுக்குக் கட்டளையிட்டான். மறுநாள் அந்தக் கொடி அந்நிலச் சிகரத்தின் மேல் படபடத்துக் கொண்டிருந்தது. இதற்குச் சமமான வேறு பரிசோதனைகளையும் செய்து பார்த்தான் - ஒவ்வொரு தடவையு முந்தியதைவிடத் துணிகரமானதாக ஒருவிதக் கசப்போடு தன் மகன் பிறப்பதற்கு ஆத்திரப்படுமளவு தயாராகி விட்டான் என்பதை உணர்ந்தான். அன்றிரவு அவனை முதல் தடவையாக முத்தமிட்டு, ஒழுங்கற்று பலமைல்களுக்கு நீண்டு கிடக்கும் காட்டையும் சதுப்பு நிலங்களையும் தாண்டி, வெண்ணிறமாக மாறிக் கொண்டிருக்கும் சிதைவுகளுடன் கீழ் நதிப்புறத்தில் நிற்கும் அந்த மற்றக் கோயிலுக்கு அவனை அனுப்பினான். இதற்கு முன்பே (தனது மகன் தான் ஒரு ஆவியுரு என்பதை அறியாமல், தானும் பிறரைப் போன்ற ஒரு மனிதன் என்று நினைக்க வேண்டும் என) அவனது வாழ்வுத் தொழிலின் ஆரம்ப வருஷ ஞாபகங்கள் யாவற்றையும் அழித்து விட்டான்.

***

அவனது வெற்றியும் சாந்தியும் சலிப்பினால் மாசடைந்தன. காலை மாலை கருக்கல் வேளைகளில் இதே போன்ற பூஜாகிருத்தியங்களை தனது மாயாரூபக் குழந்தையும் கீழ் நதிப்புறத்தில் செய்து கொண்டிருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு போலும், அங்கிருந்த கற்சிலையின் முன்னால் இவன் சாஷ்டாங்கமாகக் கிடப்பான். இரவு வேளைகளில் அவன் பிறகு கனவு காணவில்லை. அல்லது மற்ற எந்த மனிதனையும் போலத்தான் கனவு கண்டான். பிரபஞ்ச சப்தங்களையும் உருக்களையும் பற்றி அவனது பார்வை ஓரளவு வெளிறிவிட்டது: தனது உயிரிலிருந்ஹ்டு பிரிந்த இவற்றினால், இங்கில்லாத அவனது மகன் போஷிக்கப்பட்டான். தனது வாழ்வின் நோக்கம் நிறைவேறிவிட்டது. அவன் ஒருவகைப் பரவசத்தில் ஆழ்ந்திருந்தான்.

சில வரலாற்றுக்காரர் வருஷங்களாகவும் சிலர் பத்து வருஷப்பிரிவுகளாகவும் கணித்த ஒரு குறிப்பிட்ட காலம் சென்று இரண்டு துடுப்புக்காரர்கள் அவனை ஒரு நள்ளிரவில் எழுப்பினர். அவர்கள் முகத்தை அவனால் சரிவரக் காண முடியவில்லை. ஆனால் வடக்கில் ஒரு கோயிலில் எரிபடாமலே தீயினூடே நடக்கும் சக்திவாய்ந்த மந்திர வசப்பட்ட ஒரு மனிதனைப் பற்றி அவர்கள் பேசினர். மாந்திரீகனுக்கு அந்தக் கடவுளின் வார்த்தைகள் திடீரென நினைவுக்கு வந்தன. உலகில் நிரம்பியுள்ள எல்லாவகை ஜீவர்களினுள்ளும், அக்னி மட்டுமே தனது மகனை ஒரு ஆவியுரு என அறிந்திருந்தது என்பது நினைவுக்கு வந்தது. இந்த ஞாபகம் முதலில் அவனை ஆசுவாசப்படுத்தினாலும் முடிவில் அவனை வதைக்கத் தொடங்கிவிட்டது. தனது மகன் தனக்குள்ள இந்த அசாதாரண சலுகையைப்பற்றிச் சிந்திக்க ஆரம்பித்து ஏதேனும் ஒரு வகையில் தான் ஒரு வெறும் மனப்பிரதிமை என்பதைக் கண்டுபிடித்து விடக் கூடுமோ என அஞ்சினான். ஒரு மனிதனாக இல்லாதிருப்பது, இன்னொரு மனிதனது கனவின் வெளியுறுவாக வாழ்வது - என்ன ஒப்பற்ற அவமானம். பைத்தியக்காரத்தனம்! தனது வெறும் இன்பக் குழப்பத்தில் தான் ஜனிப்பித்த (அல்லது அனுமதித்த) தனது மக்களைப் பற்றி எந்தத் தந்தைக்கும் அக்கறை இருக்கத்தான் செய்யும். ஆயிரத்து ஒரு மர்ம இரவுகளில், அங்கம் அங்கமாகவும் ஒவ்வொரு உள்ளுறுபாகவும் நினைத்துச் சமைத்த தனது மகனைப் பற்றி அந்த மாந்திரீகன் அச்சம் கொண்டது இயல்புதான்.

அவனது மனக்குறைகள், சில குறிப்பிட்ட எச்சரிக்கைகளுடனேயே, திடீரென நின்றன. முதலாவதாக (ஒரு நீண்ட வரட்சியின் பிறகு) ஒரு தூரத்து முகில், ஒரு பறவை போல் கனமற்று ஒரு குன்றின் உச்சியில் தோன்றியது. பிறகு வடக்குப் புறமாக வானம் சிறுத்தையின் ஈறுகளைப் போன்ற ஒரு ரோஜா நிறமாயிற்று அதன் பிறகு இரவின் உலோகத் தகட்டை துருப்பிடித்தாற் போல, புகைமுகில் முகிலாக வந்தது. இவற்றையடுத்து வனமிருகங்கள் பீதி கொண்டு சிதறியோடின. எத்தனையோ நூற்றாண்டுகளின் முன்னால் நடந்ததே மீண்டும் திரும்ப நிகழ்ந்து கொண்டிருந்தது. அக்னிக் கடவுளினது புனித க்ருகத்தின் சிதைவு அக்னியினாலேயே அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. பறவைகளற்ற ஒரு விடி காலையில் அக்னி வட்டம் சுவர்களை நக்கிக் கொண்டிருப்பதை அவன் கண்டான். ஒரு கணம் நீரினுள் ஒதுங்கித் தப்பித்துக் கொள்ள எண்ணினான். ஆனால் உடனேயே தனது வயோதிகத்துக்கும் உழைப்புக்கும் மரணம் முடி சூட்டுவதற்காக வந்திருக்கிறது என உணர்ந்தான். அவை அவனது தசையைக் கிழிக்கவில்லை. அவனைத் தழுவி, சூடோ எரிவோ இன்றி அவன் மேல் பெருகின. ஆசுவாசத்தோடு, அவமானத்தோடு, பயங்கரத்தோடு, தானும் ஒரு மாயாரூபம் என, தன்னையும் யாரோ கனவு கண்டு கொண்டிருக்கிறான் என அவன் உணர்ந்தான்.

The Circular Ruins by Jorge Luis Borges

(மூலம் : ஸ்பானிஷ். ஆங்கில மொழி பெயர்ப்பைத் தமிழில் தருபவர்: தர்மு அரூப் சிவராம்)

நன்றி கசடதபற சிற்றிதழ் - ஜூன் 1971 இதழ் 9 விலை 30 காசு

தட்டச்சு உதவி: சென்ஷி

Friday, April 1, 2011

போர்ஹேயுடன் ஒரு சந்திப்பு –பகுதி 2

(நேர்காணல் 1980-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி பதிவு செய்யப்பட்டது)

தமிழில் : சா.தேவதாஸ்

 நேர்காணல்  பகுதி 1  இங்கே

 

போர்னே: படைப்பாளர் போர்ஹேயும், மொழிபெயர்ப்பாளர் போர்ஹேயும் முற்றிலும் வேறானவர்களா? 

போர்ஹே: ஆமாம், வேறானவர்களே. மொழிபெயர்க்கும்போது அத்துமீறாதிருக்க முயலுகின்றேன். நல்லதொரு மொழியாக்கம் செய்ய, அத்துடன் கவிஞராக இருக்கவும் முயலுகிறேன்.

போர்னே: உங்களது படைப்புகளில் அர்த்தமெதனையும் பொதிந்து வைத்திவிட நீங்கள் முயன்றதில்லை என்றீர்கள்.

போர்ஹே: என்னை ஒரு அறவியல் சார்பாளராகவே கருதிக் கொள்கிறேன். porgeஆனால் அறநெறிகளை போதிக்க முயலுவதில்லை. என்னிடம் செய்தி கிடையாது. சமகால வாழ்வு பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. தினசரிகள் எதையும் வாசிப்பதில்லை. அரசியலையும், அரசியல்வாதிகளையும் வெறுக்கிறேன். எந்தக் கட்சியையும் சேர்ந்தவனில்லை.என் அந்தரங்க வாழ்க்கை அந்தரங்கமானதே; புகைப்படத்தையும் விளம்பரத்தையும் தவிர்க்கவே முயலுகிறேன். என் தந்தைக்கும் இதே எண்ணம் இருந்தது. 'நான் வெல்ஸின் புலப்படாத மனிதனாக விரும்புகிறேன்' என்பார். அது குறித்து பெருமிதப்படுவார். ரியோ டி ஜெனிரோவில் என் பெயரை யாரும் அறியார். அங்கே புலப்படாதிருப்பதை உணர்ந்தேன். ஒரு வழியாக விளம்பரம் என்னைக் கண்டுகொண்டுவிட்டது. அதுபற்றி நான் என்ன செய்யக்கூடும்? அதனை நான் தேடுவதில்லை. என்னை அது தேடிக் கொண்டது, ஒருவருக்கு எண்பது வயதாகிறது, கண்டறியப்படுகிறார், துப்பறியப்படுகிறார். போர்னே: உங்களது படைப்பின் அர்த்தம், அர்த்தமின்மை தொடர்பாக; காஃப்காவின் படைப்பெங்கும் குற்றணர்வு ஓடிக்கொண்டிருக்கிறது. உங்களது படைப்பில் ஒவ்வொன்றும் குற்ற உணர்வைத் தாண்டியதாக இருக்கிறது . போர்ஹே: ஆமாம், அது சரிதான் காஃப்காவுக்கு குற்றவுணர்வு இருந்தது. என்னிடம் இருப்பதாக நான் கருதவில்லை. ஏனெனில் சுயேட்சையான விருப்பத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. ஏனெனில் நான் செய்திருப்பவை செய்யப்பட்டுள்ளன.; எனக்காக அல்லது என் மூலமாக. ஆனால் உண்மையிலேயே நான் அதனைச் செய்திருக்கவில்லை. ஏனெனில் சுயேட்சையான விருப்பத்தில் எனக்கு நம்பிக்கையில்லை, என்னால் குற்றவுணர்வு கொள்ள முடியாது.

போர்னே: பஞ்சபூதங்களால் ஆன வரம்புக்குட்பட்ட சேர்க்கை மட்டுமே உண்டு. எனவே கருத்துக்களை உருவாக்குவதென்பது கடந்த காலம் பற்றிய மறு கண்டுபிடிப்பே - என்னும் உங்களது கூற்றுடன் இதைத் தொடர்புபடுத்திப் பார்க்கலாமா?

போர்ஹே: பார்க்கலாம் என்றே கருதுகிறேன். ஒவ்வொரு தலைமுறையும் கடந்த காலத்துப் புத்தகங்களை மீளவும் எழுதிக் கொள்ள வேண்டியுள்ளது. அதனைச் சுற்று வித்தியாசமாக செய்கிறது என்று எண்ணுகிறேன். ஏற்கனவே பலமுறை எழுதப்பட்டுவிட்ட கவிதை ஒன்று என்னால் எழுதப்படுகிறது. அதாவது என்னால் மறுகண்டுபிடிப்பு செய்யப்படுகிறது. இதுவே என் தார்மீகப் பணி. இலேசான மாறுதல்களையே நாம் செய்கிறோம். ஆனால் மொழியினை ஒன்றும் செய்ய முடியாது என்றே கருதுகிறேன். அவ்வாறு செய்திட ஜாய்ஸ் முயன்றார். அவர் சில நேர்த்தி மிகு வரிகளை எழுதிய போதும் தோற்றுவிட்டார்.

போர்னே; மீண்டும்மீண்டும் எழுதப்பட்ட இக்கவிதைகளை எல்லாம் புதிர்பாதையில் ஒரே சுவரிடம் வந்து சேருதல் போன்றது என்பீர்களா? போர்ஹே: அப்படியே, அது நல்ல உருவகம். ஆமாம், நிச்சயமாக.

போர்னே: உள்ளூர் வண்ணத்தைப் பயன்படுத்துவது எப்போது சரியாக இருக்கும்; எப்போது சரியாக இருக்காது என்பதற்கான வழிகாட்டு நெறிகளைக் கூறுவீர்களா? போர்ஹே: தடைப்படுத்தாத விதத்திலே செய்ய முடியுமானால் நல்லது. ஆனால் அழுத்திக் கூறினால், எல்லாம் செயற்கையாகிவிடும். ஆனால் அது பயன்படுத்தப்பட வேண்டும். அது விலக்கப்பட்டதல்ல என்கிறேன். அதனை அழுத்த வேண்டியதில்லை. போனஸ் அயர்ஸில் ஒருவித கொச்சை மொழியினை உருவாக்கியிருக்கிறோம். அதனை எழுத்தாளர்கள் தவறாகப் பயன்படுத்துகின்றனர். அதிகப்படியாக பயன்படுத்துகின்றனர். ஆனால் மக்களுக்கு அதனால் பயனேதும் கிடையாது. இருபது நிமிடத்திற்கொரு கொச்சை வழக்கில் வார்த்தை ஒன்றினை அவர்கள் கூறலாம். ஆனால் எப்போதும் கொச்சை மொழி பேசிட யாரும் முயலுவதில்லை.

போர்னே: வட அமெரிக்க எழுத்தாளர் யாரேனும் உள்ளூர் வண்ணத்தை திறம்பட கையாண்டுள்ளனரா; அப்பண்பாட்டிற்கு அந்நியர் என்ற முறையிலே உங்களுக்கு அதனை ஆற்றலுடன் வெளிப்படுத்தியிருப்பவர் என யாரைக் கருதுகிறீர்கள்? போர்ஹே: மார்க் ட்வைன். ரிங் லார்ட்னர் சிறிது வழங்கியிருப்பதாக எண்ணுகிறேன். அவரை மிகமிக அமெரிக்கத் தன்மை கொண்டவராக எண்ணுகிறீர்கள் இல்லையா?

போர்னே: மற்றும் நகர்ப்புறத்தன்மை வாய்ந்தவர்.

போர்ஹே: மிகவும் நகர்ப்புறத் தன்மை. மற்ற எழுத்தாளர் யார்? ப்ரெட் ஹார்டியை வாசித்திருக்கிறேன். ஃபாக்னர் மாபெரும் எழுத்தாளராக இருந்தார் என எண்ணுகிறேன். ஹெமிங்வேயை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. தவறான முறையிலே கதையைச் சொல்வதும், காலக் கிரமத்தைக் கலந்து போடுவதுமாக இருந்தபோதும் ஃபாக்னர் மாபெரும் எழுத்தாளரே.

போர்னே: ஃபாக்னரின் ûwild palms-யை மொழிபெயர்த்தீர்கள்.

போர்ஹே: ஆம், ஆனால் அந்நூல் அவ்வளவாகப் எனக்குப் பிடிக்காது. light in august மிக நல்ல புத்தகம். ஆனால் அது அவருக்குப் பிடிக்காது. sanetuary- குறிப்பிடத்தக்க படைப்பே. அதுவே நான் படித்த முதல் ஃபாக்னர் புத்தகம். பிறகு மற்ற புத்தகங்களைப் படிக்கலானேன். அவரது கவிதையினையும் படித்தேன்.

போர்னே: ஃபாக்னரையும் அவரது உள்ளூர் வண்ணத்தையும் நீங்கள் மொழிபெயர்க்கும்போது, நேரடியான ஸ்பானிஷில் கொண்டு வந்தீர்களா அல்லது உள்ளூர் ஸ்பானிஷ் வகையொன்றில் மாற்றிட முயன்றீர்களா?

போர்ஹே: இல்லை, கொச்சை வழக்கை மொழிபெயர்க்க வேண்டுமாயின், நேரடியான ஸ்பானிஷில்தான் செய்ய வேண்டும். இல்லாதுபோனால் வேறுவிதமான உள்ளூர் வண்ணம் கிடைக்கும். உதாரணமாக El gavcho marti fierro என்றழைக்கப்படும். கவிதை மொழிபெயர்ப்பு எங்களிடமுண்டு. இப்போது அது கெüபாய் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அது தவறு என்பேன். ஏனெனில் இதில் கெüபாய்கள் பற்றித்தான் நினைக்க முடிகிறதேயொழிய, தென் அமெரிக்க இடையர்களை எண்ணிப் பார்க்க இயலவில்லை. மார்ட்டின் ஃபைரோவை என்னால் முடிந்த அளவுக்கு தூய ஆங்கிலத்திலே மொழியாக்கம் செய்வேன். கெüபாயும், தென் அமெரிக்க இடையரும் ஒரேவித மனிதர்தான் என்றபோதும், அவர்களை வேறுபடுத்தித்தான் எண்ணுகிறோம். உதாரணமாக, கெüபாய் என்றதும் துப்பாக்கிகளை எண்ணிப் பார்க்கிறோம். ஆனால், தென்அமெரிக்க இடையனை நினைக்கும்போது குறுவாள்களும், நேருக்கு நேர் மோதல்களுமே நினைவுக்கு வரும். எழுபத்தைந்து அல்லது சற்று அதிகமான வயதுடைய கிழவன், இளைஞன் ஒருவனை நேருக்கு நேர் மோதலுக்கு சவால் விட்டதைப் பார்த்திருக்கிறேன். பயங்கரமாகத் தோன்றும் இரு குறுவாள்களை எடுத்து வந்தான். ஒன்று வெள்ளிப் பிடி கொண்டிருந்தது. ஒன்று மற்றதைவிடப் பெரியதாக இருந்தது. இரண்டும் ஒரே அளவினதாய் இல்லை. அவற்றை மேசை மீது வைத்துவிட்டு, ""சரி இப்போது உன் ஆயுதத்தை எடுத்துக்கொள்'' என்றான். ""நீ பெரியதை எடுத்துக் கொள்ளலாம், அதற்காக நான் கவலைப்படப் போவதில்லை'' என்ற பொருள் அப்பேச்சில் இருந்தது. அப்போது இளைஞன் மன்னிப்புக் கேட்டான். கிழவனது வீட்டில் பல குறுவாள்கள் இருந்தன. ஆனால் அவை இரண்டையும் வேண்டுமென்றே தெரிவு செய்தான். ""இக்கிழவனுக்கு குறுவாளைக் கையாளத் தெரியும், ஏனெனில் இன்னொன்றை அவனால் தெரிவு செய்ய இயலும்'' என்று அக்குறுவாள்கள் கூறின.

போர்னே: அது உங்கள் கதையை நினைவுபடுத்துகின்றன...

போர்ஹே: அம்மையக் கருத்தை என் கதையில் பயன்படுத்தி இருக்கிறேன். ஒரு நபரின் அனுபவத்தைச் சொல்வதிலிருந்து கதைகள் பிறக்கின்றன.

போர்னே: அதில் அர்த்தமிருக்கிறது. ஆனால், அவ்வார்த்தையைக்குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. என்ன நிகழ்ந்தது என்பதைச் சொன்னால் போதுமானது.

போர்ஹே: அதன் பொருள்: அவன் ஒரு போக்கிரி, மோசடிக்காரன். அதே வேளையில் அவனுக்கென்று ஒரு நெறி உண்டு. எச்சரிக்கை இல்லாது யாரையும் தாக்குவது பற்றி அவன் எண்ணிப் பார்த்ததில்லை. ஒட்டுமொத்த காரியமும் மிக மெதுமெதுவாக நிகழ்ந்தது. இன்னொருவரைப் புகழ்வதன் வாயிலாக ஒரு தொடங்கலாம். அப்போது, யாருக்கும் சண்டையிடத் தெரியாத பிரதேசத்திலிருந்து வந்தவன் அவன் என்று நாம் சொல்ல விரும்பலாம். ஒருவேளை அவனுக்குக் கற்றுக்கொடுக்கலாம். அதன்பிறகு மற்றவரை புகழ்ச்சிச் சொற்களால் இடைமறித்து, "தெருவிற்குள் போவோம், உனது ஆயுதத்தைத் தெரிவு செய்துகொள்' என்பது போன்று கூறலாம். ஆனால் இது முழுவதும் மிக மிக மெதுவாக நிறைவேற்றப்பட்டது. அத்தகைய விவரிப்பு நழுவிவிட்டதோ என்று ஆச்சரியப்படுகிறேன். இப்போதெல்லாம் துப்பாக்கிகளை, சுழல் துப்பாக்கிகளை பயன்படுத்துகின்றனர். அந்த அறநெறியெல்லாம் போய்விட்டது. தொலைவிலிருந்தே ஒருவரைச் சுட்டுவிடலாம்.

போர்னே: கத்திச்சண்டை மிக நெருக்கமானது.

போர்ஹே: நெருக்கமானது, ஆமாம். அவ்வார்த்தையைப் பயன்படுத்தினேன்; ஒரு கவிதையின் இறுதியிலே அதனைப் பயன்படுத்தினேன், ஒருவனது தொண்டை அறுபட இருக்கிறது. "நெருக்கமாக கத்தி அதன் கழுத்தில் மேல்' என்கிறேன்.

போர்னே: பழைய வடிவங்களையும் ஸ்தாபிதமாகிவிட்ட எழுத்தாளரையும்போல் எழுதிப்பார்த்து புது எழுத்தாளர்கள் ஆரம்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டீர்கள்.

போர்ஹே: இது நேர்மை சார்ந்த பிரச்னை என்று எண்ணுகிறேன். இல்லையா? எதையாவது புதுப்பிக்க விரும்பினால், ஏற்கனவே செய்யப்பட்டுள்ளவற்றை உங்களால் செய்துகாட்ட இயலும் என்று காட்டியாக வேண்டும். புது முயற்சி மூலம் ஆரம்பிக்கவியலாது. உதாரணமாக சுயேச்சையான கவிதை மூலம் தொடங்க முடியாது. சிற்றுணர்ச்சிப் பாடல் ஒன்றை முயன்று பார்க்க வேண்டும், அல்லது வேறுவிதமான செய்யுள் வகையைப் பரீட்சித்து, அப்புறம் புது விஷயங்களுக்குப் போக வேண்டும்.

போர்னே: விலகி வெட்டிச் செல்லும் நேரம் எது? புது முயற்சியில் இறங்குவது எப்போது என்று நீங்கள் உணர்ந்ததை உங்கள் அனுபவத்திலிருந்து கூறுங்களேன்?

போர்ஹே: முடியாது, நான் தவறு செய்துவிட்டேன். சுயேச்சையான கவிதையிலிருந்து தொடங்கினேன். அதனைக் கையாள்வது எப்படி என நான் அறிந்திருக்கவில்லை. மிகச் சிரமமானது, சாஸ்திரிய வடிவங்களை எழுதுவது எளிதானது. ஏனெனில் உங்களுக்கு உதவிடும் வகை மாதிரி அவற்றில் இருக்கிறது என்பதை பின்னரே கண்டுகொண்டேன். ஆனால் சுயேச்சை கவிதையில் உங்களுக்கென ஒருவகை மாதிரியை உருவாக்க வேண்டியிருக்கிறது, மற்றும் அதனை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். நல்லது, உரைநடை வருவது கவிதைக்குப் பின்னர்தான். உரைநடை மிகச் சிரமமானது. எனக்குத் தெரியாது. உள்ளுணர்வால் எழுதியிருக்கிறேன். பிரக்ஞைபூர்வமாக கவியாக என்னை நான் கருதவில்லை.

போர்னே: மரபார்ந்த வடிவங்களுடன் தொடங்க வேண்டும் என்கிறீர்கள்? இது பார்வையாளர் சார்ந்த பிரச்னை இல்லையா?

போர்ஹே: இல்லை. பார்வையாளரை நான் நினைத்ததேயில்லை. எனது முதல் நூலை அச்சிட்டதும், அதனை புத்தகக் கடைகளுக்கோ, மற்ற எழுத்தாளர்களுக்கோ அனுப்பவில்லை. நண்பர்களுக்குத் தந்துவிட்டேன். 300 பிரதிகளை நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டேன். அவை விற்பனைக்காக இருந்ததில்லை. அந்நாட்களில் ஓர் எழுத்தாளர் புகழ்பெறுவது அல்லது வெற்றி } தோல்வி பற்றி யாரும் நினைத்ததில்லை. 1920, 1930- களில் அக்கருத்துக்கள் எங்களுக்குத் தொலைதூரமானவை. வெற்றி, தோல்வி - புத்தகங்களை விற்பது என்ற ரீதியில் யாரும் எண்ணிப் பார்த்ததில்லை. எழுதுவதை பொழுதுபோக்கு அல்லது ஒருவித விதியாக நாங்கள் எண்ணினோம். டிக்வென்ஸியின் சுயசரிதத்தை நான் படித்தபோது, தன்னுடைய வாழ்க்கை இலக்கிய வாழ்க்கையாக இருக்கும் என்பதை அவர் அறிந்து கொண்டிருந்தார் எனக்

நூல்: மணல் பிரதி தொகுப்பு: தளவாய் சுந்தரம்

நன்றி: தாவரம்

போர்ஹேயுடன் ஒரு சந்திப்பு –பகுதி 1

(நேர்காணல் 1980-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி பதிவு செய்யப்பட்டது)

தமிழில் : சா.தேவதாஸ்

போர்ஹே: : முதலில் சொல்லிவிடுகிறேன், எதிர்காலத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்பது போன்ற கேள்விகள் வேண்டாம். ஏனெனில் எதிர்காலங்கள் பலவாயும் ஒன்றிலிருந்து மற்றது மாறுபட்டதாயும் உள்ளது எனக் கருதுகிறேன். jorge-luis-borges2

டேனியல் போர்னே: அப்படியானால் உங்களது கடந்த காலம், தாக்கங்கள் பற்றிக் கூறுங்கள்.

போர்ஹே: : நல்லது, எனக்குக் கிடைத்த தாக்கங்களைப் பற்றிக் கூற முடியுமேயொழிய பிறரிடம் நான் செலுத்தியவைப் பற்றிக் கூற இயலாது. அது பற்றி அறியேன், அது பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால் முதலாவதாக என்னை ஒரு வாசகனாகவும் அப்புறம் எழுத்தாளனாகவும் கருதிக் கொள்கிறேன். அது அனேகமாகப் பொருத்தமற்றது; என்னை ஒரு நல்ல வாசகனாகக் கருதுகிறேன். பல மொழிகளில் நல்ல வாசகன், குறிப்பாக ஆங்கிலத்தில் - ஏனெனில் கவிதை, ஆங்கிலம் மூலமாகவே என்னை வந்து சேருகிறது. ஸ்வின்பர்ன், டென்னிஸன், கீட்ஸ், ஷெல்லி மீதான என் தந்தையின் நேசத்தால் - என் தாய்மொழி மூலமாக, ஸ்பானிஷ் மூலமாக அல்ல. ஒரு வித மயக்கமாக என்னிடம் வந்தது. அதனைப் புரிந்துகொள்ளவில்லை யெனினும் உணர்ந்து கொண்டேன். தன் நூலகத்தைத் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு என் தந்தை விட்டுவிட்டார். என் சிறுபிராயத்தை எண்ணிப் பார்க்கையில், நான் வாசித்த புத்தகங்களின் ரீதியிலேயே எண்ணிப் பார்க்கிறேன்.

போர்னே: உண்மையிலேயே நீங்கள் புத்தக மனிதர்தான். நீங்கள் நூலகராக இருந்ததும், தொன்மையானவை மீது உங்களுக்கு மோகம் இருப்பதும் சேர்ந்து, புதியவை படைத்தலுக்கு எப்படி உதவியுள்ளன என்று கூற முடியுமா?

போர்ஹே: : என் எழுத்தில் புதுமையேதும் உள்ளதா என்று அதிசயிக்கிறேன். அடிப்படையில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவனாகவே என்னை எண்ணிக் கொள்கிறேன். கடந்த நூற்றாண்டின் கடைசி ஆண்டில் (1899) பிறந்தேன். சம காலத்து எழுத்தாளர்களையும் படிக்கிறவன் என்றாலும் டிக்கன்ஸ், பைபிள் அல்லது மார்க் ட்வெய்ன் படித்து வளர்ந்தவன். கடந்த காலத்தில் நான் ஈடுபாடு கொண்டுள்ளேன். நம்மால் கடந்த காலத்தை உருவாக்க முடியாது, மாற்ற முடியாது என்பது ஒரு காரணமாக இருக்கலாம். நிகழ்காலத்தை இல்லாமல் ஆக்குவது அரிதானது என்ற பொருளில் கூறுகிறேன். ஆனால் கடந்த காலம் என்பது வெறுமனே ஒரு நினைவு, ஒரு கனவு. நினைத்துப் பார்க்கையில் அல்லது எனக்குச் சுவாரஸ்யமானவற்றை வாசித்துக் கொண்டிருக்கையில், என் கடந்த காலம் தொடர்ந்து மாறுவதாகத் தோன்றும். நான் படித்த எழுத்தாளர்களுக்கு அல்லது தமது மொழியின் அங்கமாக, தம் மரபின் அங்கமாக இருந்த எழுத்தாளர்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். மொழி தன்னளவிலேயே ஒரு மரபாயிருக்கிறது.

ஸ்டீபன் கேப்: உங்களது கவிதையைப் பார்ப்போமா?

போர்ஹே: : நானொரு அழையா விருந்தாளி, கவிதை எழுத முயலுகையில் நான் எழுதுவதே இல்லை என்கின்றனர் என் நண்பர்கள். ஆனால் உரைநடை எழுதும் என் நண்பர்கள் உரைநடை எழுத முயலுகையில் நான் எழுத்தாளரே கிடையாது என்கின்றனர். எனவே என்ன செய்வதென்றே தெரியாமல் தர்மசங்கடமான மனோநிலையில் இருக்கிறேன்.

கேப்: கேரிஸ்னைடர் என்னும் நவீன கவி riprap என்னும் சிறு கவிதையில் தன் கவிக் கோட்பாட்டை விளக்குகிறார். அவரது கருத்துகள் உங்களது கவிதையுடன் சில அம்சங்களில் ஒத்திருப்பதாகத் தோன்றுகிறது. கவிதையிலுள்ள வார்த்தைகளின் பாலான அவரது அணுகுமுறையை விவரிக்கும் அதன் சிறுபகுதியை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.

போர்ஹே: : சரி. சிறுபகுதியென்ன, பெரிய பகுதியாகவே கூறலாம், இல்லையா? இக்காலைப் பொழுதில் அதனை ரசிக்க விரும்புகிறேன். (riprap - தொகுப்பிலிருந்து கவிதையை கேப் வாசிக்கிறார்.)

கேப்: ரிப்ரேப் என்னும் இத்தலைப்பு. சறுக்கலான மலைப் பகுதியில் குதிரைகள் செல்வதற்காக அமைக்கப்படும் கல்பாதையைக் குறிக்கும்.

போர்ஹே: : வெவ்வேறான உருவகங்களுடன் அவர் எழுதுகிறார், நான் அப்படி எழுதுவதில்லை. எளிய முறையில் எழுதுகிறேன். விளையாட அவரிடம் ஆங்கிலமிருக்கிறது. எனக்கு இல்லை.

கேப்: ஒவ்வொரு கல்லும் இருபுறமுள்ள ஒவ்வொரு கல்லையும் சார்ந்திருக்கின்ற, பிணைப்புக் கொண்டுள்ள இப்பாதையுடன், கவிதையில் வார்த்தைகளை இடம்பெறச் செய்வதனை ஒப்பிடுவதாகத் தோன்றுகிறது அவரது கருத்து. கவிதை கட்டுமானத்தில் இவ்வணுகுமுறை உங்களுக்கு ஏற்புடையதா அல்லது பலமுறைகளில் இதுவும் ஒன்றுதானா?

போர்ஹே: : 'ஆதிவாசிகளின் பாடல் புனைய அறுபத்தொன்பது வழிமுறைகள் உள்ளன. ஒவ்வொன்று சரியானவைதான்' என்று கிப்ளிங் கூறியதுபோல, சரியான முறைகளுள் அதுவும் ஒன்றாகலாம் என்றே எண்ணுகிறேன். ஆனால் என்னுடைய முறை அது போன்றதல்ல - அது ஒருவித உறவு, இருண்டதான ஒன்று. ஒரு கருத்து எனக்குக் கிடைக்கும்போது அது ஒரு கதையாகலாம், கவிதையாகலாம், எனக்குக் கிடைத்திருப்பது தொடக்கமும் இலக்கும்தான். இடையே நிகழ வேண்டியதை நான் கண்டறிய வேண்டும் - இட்டுக்கட்ட வேண்டும், அப்போது என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு செய்கிறேன். ஆனால் பொதுவாக அது போன்றதொரு உத்வேகம் வரும்போது, அதனைத் தடுத்திட என்னால் ஆன மட்டும் பார்ப்பேன்; அதையும் மீறி நீடித்தால், எப்படியாவது எழுதியாக வேண்டியிருக்கும். ஒருபோதும் விஷயங்களைத் தேடுவதில்லை. டீக்கடையிலோ, தூங்க முயலும்போதோ, தூங்கி எழும்போதோ விஷயங்கள் கிடைத்துவிடும்; போனஸ் அயர்ஸின் வீதிகளிலோ அல்லது வெறெங்கோ எந்த நேரத்திலும் கிடைத்துவிடும். உதாரணமாக ஒரு வாரத்திற்கு முன் ஒரு கனவு வந்தது. தூங்கி எழுந்தபோது அது தீங்கனவாயிருந்தது. அது சொல்லத் தகுதியானதல்ல என்றிருந்தேன்; ஆனால் அதில் ஒரு கதை மறைந்திருப்பதாய் எண்ணுகிறேன். அதனைக் கண்டறிய விரும்புகிறேன். அதனைக் கண்டுவிட்டதாக எண்ணும் இப்போது, அயந்து - ஆறு மாதங்களில் எழுதிவிடுவேன். நேரம் எடுத்துக் கொள்வேன். ஆதலின் என்னிடம் வேறுபட்டதான முறை இருக்கிறது எனலாம். நிச்சயமாக ஒவ்வொரு கைவினைக் கலைஞனிடமும் அவனுக்கே உரிய முறையில் உள்ளது; நான் அதனைப் போற்றுவேன்.

கேப்: பகுத்தறிதலின் தலையீடு ஏதுமின்றி, தன் மனநிலையை அப்படியே வாசகனுக்கு மாற்றிட முயலுகிறார் ஸ்டைனர்; உணர்தலை நேரடியாக மாற்றிட விரும்புகிறார். இது சற்று அதீதமாய் உங்களுக்குத் தோன்றுகிறதா?

போர்ஹே: : இல்லை. ஆனால் அவர் மிகவும் எச்சரிக்கைக் கொண்ட கவியாகத் தோன்றுகிறார். நானோ வயதானவன், கள்ளங்கபடமற்றவன், மனம் போனபடி பிதற்றுகிறேன், என் பாதையை அறிந்திட முயலுகிறேன். உதாரணமாக என்ன செய்தி வைத்திருக்கிறேன் என மக்கள் கேட்கின்றனர்; ஏதுமில்லை என அஞ்சுகிறேன். நல்லது இங்கே கதையொன்று இருக்கிறது. அதன் நீதி என்ன? எனக்குத் தெரியாதென்றே அஞ்சுகிறேன். நான் வெறுமனே கனவு காண்பவன்தான்; அப்புறம்தான் எழுத்தாளன். எனது சந்தோஷகரமான தருணங்கள், நான் வாசகனாயிருக்கும் போதுதான்.

கேப்: விளைவுகள், பொதிந்துள்ளவனாக வார்த்தைகளைக் கருதுகிறீர்களா? அல்லது படிமங்களைத் தாங்கி நிற்பதாகக் கருதுகிறீர்களா?

போர்ஹே: : நல்லது ஆமாம். உதாரணமாக, சிற்றுணர்ச்சிப் பாடலொன்றை (sonnet) உருவாக்க குறைந்தது ஸ்பானிய மொழியில் சில வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஓரிரு ஒளியியைபுகளே உண்டு. அவற்றை உருவகங்களாக, வினோதமான உருவகங்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படிச் சொல்வேன். இது அதிரடி வாசகமே. ஆங்கிலத்தில் MOON லத்தீன் - ஸ்பானிய வார்த்தையான "LUNA' விலிருந்து வேறுபட்டதான சொல்லிலிருந்து உருவாகிறது. "MOON என்னும் சொல் ரீங்காரிக்கும் சப்தமாயுள்ளது, அழகான வார்த்தை. ஃப்ரெஞ்ச் சொல்லும் அழகானதே , "LUNA". ஆனால் பழைய ஆங்கிலச் சொல் "MONA ' இரு அசைவுகளைக் கொண்டுள்ள இது அழகாயில்லை. அப்புறம், கிரேக்க வார்த்தை இன்னும் மோசமானது. மூன்றசை கொண்ட "CELENA'. ஆனால் "MOON" என்பது அழகிய சொல். இச்சப்தத்தை ஸ்பானிய வார்த்தைகளில் காண முடியாது. என்னால் வார்த்தைகளில் சஞ்சரிக்க இயலும்; வார்த்தைகள் உத்வேகம் தருபவை; தமக்கென்று ஜீவன் கொண்டவை.

கேப்: வார்த்தை தனக்கெனக் கொண்டுள்ள ஜீவன், குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் அது தரும் அர்த்தத்தைவிட மிக முக்கியமானதாகத் தோன்றுகிறதா?

போர்ஹே: : அர்த்தங்கள் அநேகமாய் பொருத்தமற்றவை என்றே எண்ணுகிறேன். முக்கியமானது எதுவெனில், அல்லது நான் குறிப்பிட வேண்டிய இரு முக்கிய அம்சங்கள், உணர்வும், உணர்விலிருந்து எழும் வார்த்தைகளுமே. உணர்ச்சியற்ற விதத்திலே எழுதக் கூடும் என்று நான் எண்ணவில்லை. அப்படி முயன்று பார்த்தால், அது செயற்கையானதாகயிருக்கும். அது போன்ற எழுத்தை நான் விரும்புவதில்லை. ஒரு கவிதை தன்னைத் தானாகவே எழுதிக் கொண்டது என்று நாம் எண்ணும்போதுதான் உண்மையிலேயே அது உயர்ந்த கவிதை என்று கருதுகிறேன். அது ஓடிக் கொண்டிருக்க வேண்டும்.

கேப்: ஒரு கவிஞரிடமிருந்து இன்னொருவரிடம் போகும்போது ஒருவகையான தொன்மங்கள் இன்னொரு விதமானவற்றால் இடமாற்றம் செய்யப்படக் கூடியவையா, அப்போதும் அதே விளைவு கிடைக்குமா?

போர்ஹே: : ஒவ்வொரு கவியும் தனக்கேயான தொன்மவியலைக் கொண்டிருக்கிறான் என்றே கருதுகிறேன். அதனை அவன் அறியாதிருக்கலாம். வரிப்புலிகள், கத்திகள், புதிர்ப் பாதைகள் குறித்த தனிப்பட்ட தொன்மவியலை நான் உருவாக்கியிருப்பதாக மக்கள் என்னிடம் கூறுகின்றனர். அது எனக்குத் தெரியாது. என் வாசகர்கள் இதனைக் கண்டறிகின்றனர். ஆனால் அது கவிஞனின் வேலை என்று நினைக்கிறேன். நான் அமெரிக்காவை எண்ணுந்தோறும் அதனை வால்ட் விட்மன் சார்ந்ததாகவே எண்ணுகிறேன். "மன்ஹாட்டன்' என்னும் வார்த்தை அவருக்கென கண்டுபிடிக்கப்பட்டது, இல்லையா?

கேப்: ஆரோக்கியமான அமெரிக்கா குறித்த ஒரு படிமம்?

போர்ஹே: : ஆமாம், அதேவேளையில் வால்ட் விட்மனே ஒரு தொன்மம்தான்; மிகவும் துரதிருஷ்டம் வாய்ந்தது. மிகவும் தனிமைப்பட்டு எழுதியவர் குறித்த ஒரு தொன்மம். எனினும், தன்னை ஓர் அழகிய நாடோடியாக ஆக்கிக் கொண்டவர். பூமியில் தன்னை ஒரு தொன்மவியல் மானுடனாக படைத்துக் கொள்ள முடிந்த ஒரே எழுத்தாளன் வால்ட் விட்மின்தான் என்று சுட்டிக் காட்டியிருக்கிறேன். TRINITY- யில் உள்ள மூவரில் ஒருவர் வாசகர்தான். ஏனெனில் நாம் வால் விட்மனை வாசிக்கும்போது நாம் வால்ட் விட்மனாகி விடுகிறோம். அதனைச் செய்து காட்டிய விசித்திரமான நபர் அவர் ஒருவரே. உலகெங்கும் முக்கியத்துவம் வாய்ந்த எழுத்தாளர்களை அமெரிக்கா உருவாக்கியிருக்கிறதுதான்; குறிப்பாக நியூ இங்கிலாந்து மாநிலம். ஒதுக்கிவிட முடியாத எழுத்தாளர்களைத் தந்துள்ளீர்கள். உதாரணமாக, போ, விட்மன், மெல்வின், ஹென்றி ஜேம்ஸ் போன்றோர் இல்லாது போனால், நிகழ்கால இலக்கியம் இத்தகையதாக இருக்க இயலாது. ஆனால் தென்னமெரிக்காவைப் பொறுத்தவரை, எங்களுக்கும் ஸ்பெயினுக்கும் முக்கியமானதாக நிறைய உண்டு. எஞ்சிய மற்ற உலகத்திற்கு முக்கியமாக இராது. மிக நேர்த்தியானதாகவே ஸ்பானிய இலக்கியம் தொடங்கிற்று என்று கருதவே செய்கின்றேன். பின்னர் எப்படியோ க்யூவெடோ, கோங்கோரா என்னும் எழுத்தாளர்களுடன் எதுவோ விறைத்திருப்பதை உணர்கிறோம். முன்புபோல அம்மொழி ஓடிக்கொண்டிருப்பதில்லை.

போர்னே: 20-ம் நூற்றாண்டுக்கும் இது பொருந்துமா? உதாரணமாக லோர்கா இருக்கிறார்.

போர்ஹே: : ஆனால், லோர்காவை நான் அதிகம் விரும்புவதில்லை. இது என்னிடம் உள்ள பலவீனம். காட்சி ரீதியிலான கவிதைகளை நான் வெறுக்கிறேன். அவர் எப்போதும் காட்சி ரீதியிலானவர். விசித்திரமான உருவங்களைத் தேடுபவர். ஆனால் அவர் மிகவும் மதிக்கப்படுவர் என்பதை அறிவேன். தனிப்பட்ட முறையில் அவரை நான் அறிந்தவன்; நியூயார்க்கில் ஓராண்டு வாழ்ந்தார். ஓராண்டு இருந்தும் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தைகூட அறிந்து கொள்ளாதது மிக விசித்திரமானது. ப்யூனஸ் அயர்ஸில் ஒரே ஒரு முறையே சந்தித்தேன். அதன்பிறகு அவரது அதிர்ஷ்டம் தூக்கிலிடப்பட்டு விட்டார். கவிஞருக்கு நேரக்கூடிய உயர்ந்த விஷயம், நேரிய சாவு இல்லையா? கச்சிதமான மரணம். பின்னர் அவரைப் பற்றி ஆண்டனியோ முசாரோ அழகான கவிதை எழுதினார்.

கேப்: ஹோபி இந்தியர்கள் பலமுறை உதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்றனர். அவர்தம் மொழியின் தன்மை, அம்மொழியும் சொற்கோவை எவ்விதம் உருப்பெற்றது என்பதன் காரணமாக.

போர்ஹே: : அதுபற்றி எனக்குத் தெரியாது. பாம்பாஸ் இந்தியர்கள் பற்றி என் பாட்டி கூறியிருக்கிறார். தன் வாழ்க்கையை ஜீனினில் கழித்தவர்- அது நாகரீகத்தின் மேற்கு முனையாகும் - அவர்களது கணிதம் இப்படிப் போவதாக என்னிடம் கூறினார். ஒரு கையை உயர்த்திக் கொண்டு "பாம்பஸ் இந்தியரின் கணிதத்தைக் கற்றுத் தருகிறேன்'' என்றாள். "எனக்குப் புரியாது'' என்றேன். "உனக்குப் புரியும், என் கைகளை கவனி. 1, 2, 3, 4 பல.'' முடிவின்மை அவள் பெருவிரலில். தூரம் பற்றி மக்களுக்குச் சொற்பமாகவே தெரியும் என்று இலக்கியவாதிகள் கூறுவதையும் கவனித்திருக்கிறேன். அவர்கள் மைல், லீக் ரீதியில் எண்ணுவதேயில்லை.

போர்னே: கெண்டுகியிலிருந்து வரும் நண்பன் ஒருவன் ஒரு மலை, இரு மலைகள் என அவர்கள் தூரத்தைக் குறிப்பிடுகின்றனர் என்றான்.

போர்ஹே: : நிஜமாகவா? எவ்வளவு புதிராயிருக்கிறது.

கேப்: ஸ்பானிஷலிருந்து ஆங்கிலத்திற்கும் ஜெர்மனுக்கும் அல்லது பழைய ஆங்கிலத்திற்கும் மாறுவது, உலகை நோக்குவதற்கான வெவ்வேறான வழிமுறைகளைத் தருவதாக உங்களுக்குத் தோன்றுகிறதா?

போர்ஹே: : மொழிகள் ஒரே தன்மையானவையென கருதவில்லை. ஸ்பானிய மொழியில் விஷயத்தை ஓடச் செய்வது சிரமமானது. ஏனெனில், அதன் வார்த்தைகள் மிக நீளமானவை. ஆனால் ஆங்கிலத்தில் 'SLOWLY', 'QUICKLY' என்று குறிப்பிட்டால் அவ்வார்த்தைகள் பொருள் மிக்கதான பகுதியைக் கேட்க முடியும். SLOW-LY, QUICK-LY. SLOW, QUICK- னைக் கேட்கலாம். ஆனால் ஸ்பானிஷில், SEIY LENTAMENTE, RAPIDAMENTE என்கிறோம். கேட்பது என்னவோ - MENTE என்பது. என் நண்பன் ஒருவன் ஷேக்ஸ்பியரின் சிற்றுணர்ச்சிப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தான். ஒரு ஆங்கிலப் பாடலுக்கு இரு ஸ்பானியப் பாடல்கள் தேவைப்படும் என்றேன் - ஏனெனில் ஆங்கில வார்த்தைகள் குறுகியவை, நேரிடையானவை, ஸ்வானிய வார்த்தைகளோ மிக நீளமானவை. ஆங்கிலத்திற்கு பெüதிகப் பண்புமுண்டு. கிப்ளிங்கின் "The Ballad of East And West' - இல் ஆங்கிலேய அதிகாரி ஒருவர் ஆஃப்கானத்து குதிரைத் திருடனைப் பின் தொடர்ந்து கொண்டிருப்பார். இருவரும் குதிரை மீதிருப்பர். "தாழ்ந்துவிட்ட நிலவினை அவை விண்ணிலிருந்து ஓட்டிவிட்டன. அவற்borges றின் குளம்புகள் விடியலை முரசடித்து எழுப்புகின்றன'' என்று கிப்ளிங் எழுதுகிறார். ஸ்பானிஷில் தாழ்ந்துவிட்ட நிலவினை விண்ணிலிருந்து ஓட்டிவிட முடியாது. விடியலை முரசடித்து எழுப்ப முடியாது. அவ்வாறு செய்ய இயலாது. அவன் விழுந்தான், எழுந்து கொண்டான் என்பதுபோன்ற எளிய வாக்கியங்களைக்கூட அப்படியே ஸ்பானிஷில் கூற இயலாது. தன்னால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு எழுந்தான் அல்லது இதுபோன்ற கருத்துச் சுருக்கத்தால் குறிப்பிட வேண்டும். ஆனால் ஆங்கிலத்தில் வினைச் சொற்களைக் கொண்டும் அசைச் சொற்களைக் கொண்டும் நிறைய உண்டாக்கலாம். Dream away your life live upto , something you have to live down என்றெல்லாம் எழுத முடியும். இவை ஸ்பானிஷில் சாத்தியமில்லை. சொல்ல இயலாதவை. அடுத்து, கூட்டு வார்த்தைகள். உதாரணமாக world smith ஸ்பானிஷில் இது பகட்டாரவாரம் கொண்டதாக, நயமற்றதாக un herrero de palabras என்று வரும். ஆனால் ஜெர்மானிய மொழியில் எளிதாய் வரும். ஆங்கிலத்தை விடவும் சிறப்பானதாய் ஜெர்மனியில் இருக்கும். ஏனெனில் ஜெர்மனியில் எப்போதும் வார்த்தைகளை உருவாக்க இயலும். ஆங்கிலத்தில் அவ்வாறு இயலாது. ஆங்கிலோ - சாக்ஸன்கள் பெற்றிருந்த சுதந்திரம் நமக்கு அனுமதிக்கப்படவில்லை. உதாரணமாக, úúôþ úsige fole அல்லது victorious people என்னும் பழைய வார்த்தை. பழைய ஆங்கிலத்தில் இவற்றை செயற்கையானதாக கருத இயலாது. ஆனால் ஸ்பானிஷில் இதனைக் குறிப்பிட இயலாது. அழகானவை என ஸ்பானிஷில் நான் கருதுவது நிச்சயம் இருக்கத்தான் செய்கிறது... ஒலிகள் மிகத் தெளிவானவை. ஆங்கிலத்திலோ திறந்த உயிரொலிகள் இல்லாது போய்விட்டன.

கேப்: ஆங்கிலோ - சாக்ஸன் கவிதையின்பால் ஈர்த்தது எது?

போர்ஹே: : அர்ஜெண்டினாவின் தேசிய நூலகத்தின் தலைமை நூலகராக நான் நியமிக்கப்பட்டபோது, வாசிக்க முடியாதபடி பார்வையை இழந்து விட்டேன். வளைந்து கொடுக்கப்போவதில்லை, பின் வாங்க மாட்டேன், தன்னிரக்கத்திற்கு இடந்தர மாட்டேன் என்றேன். பிறிதொரு விசயத்தை முயன்று பார்த்தேன். அப்போது வீட்டிலே ஸ்வீட்டின் Anglo - saxon reader மற்றும் saxon chronicles இருப்பது நினைவுக்கு வந்தது. ஆங்கிலோ - சாக்ஸனைக் கற்றுப் பார்ப்போம் என்று தொடங்கினேன். கையேடுகள் மூலமாக கற்றேன். இரு வார்த்தைகள் மூலம் இதனுடன் காதல் வயப்பட்டேன். இன்னும் நினைவில் நிற்கின்ற அவ்விரு வார்த்தைகள் london, londonbur hand மற்றும் rome, romeoburh. இப்போது , பழைய ஆங்கிலத்தைக் காட்டிலும் சிறந்த இலக்கியத்தைப் பெற்றிருக்கும் பழைய நோர்ஸ் மொழியைக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

கேப்: இருபதாம் நூற்றாண்டின் தொன்மவியலை, எழுத்தாளர்களுக்குக்கென எவ்விதம் விளக்குவீர்கள்?

போர்னே: அது ஒரு பெரும் கேள்வி.

போர்ஹே: : பிரக்ஞைபூர்வமாகச் செய்யப்படக் கூடியதென நான் நினைக்கவில்லை. உடனிகழ் காலத்தவராக இருந்திட முயற்சி மேற்கொள்ள வேண்டியதில்லை. ஏற்கனவே உடன் நிகழ்காலத்தவராகவே இருக்கிறோம். எக்காலத்திலும் உருவாகி வந்து கொண்டிருப்பதே தொன்மவியலில் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் கிரேக்க பழைய நோர்ஸ் தொன்மவியலை என்னால் விளக்கக் கூடும்.

சார்லஸ் சிலுவர்: உங்களைப் பாதித்திருக்கும் வகையிலே நீங்கள் மேற்கொண்ட அனுபூதியான - மதத்தன்மையிலான வாசிப்புகள் ஏதேனும் உண்டா என்று வியப்புறுகிறேன்.

போர்ஹே: : நிச்சயமாக உண்டு. ஆங்கிலத்திலும் ஜெர்மனியிலும் சூஃபிகள் பற்றி கொஞ்சம் வாசித்திருக்கிறேன். நான் சாவதற்குள் ஸ்வீடன் இயற்கை விஞ்ஞானியான ஸ்வீடன் போர்க் பற்றிய நூலொன்றை எழுதுவதில் என்னால் ஆனதைச் செய்வேன் என எண்ணுகிறேன். எமர்ஸனின் representative மூலமாக அவர் அறிமுகமானார். ப்ளேக்கும் ஒரு அனுபூதியாளரே. ஆனால் ப்ளேக்கின் தொன்மவியல் எனக்குப் பிடிப்பதில்லை; அது மிகவும் செய்கையானது.

போர்னே: 'விட்மனை வாசிப்பவர் விட்மனாகிறார்' என்றீர்கள். நீங்கள் காப்ஃகாவை மொழியாக்கம் செய்தபோது நீங்கள் ஏதாவதொரு அம்சத்தில் காஃப்காவாக இருந்தீர்கள் என்று உணர்ந்தீர்களோ என ஆச்சரியப்படுகிறேன்.

போர்ஹே: : காஃப்காவுக்கு நிறைய கடன்பட்டிருக்கிறேன். உண்மையில் நான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உணர்ந்தேன். செஸ்டர்ன், காஃப்கா, சர் தாமஸ் ப்ரெüன் போன்றோர் முன்னிலையில் நான் வெறும் வார்த்தையே. நான் அவரை விரும்புகிறேன்; பதினேழாம் நூற்றாண்டு ஸ்பானிஷில் மொழிபெயர்தேன். அது நன்றாக வந்தது. urne: Buriall- விலிருந்து ஓர் அத்தியாயத்தை க்யூவெடோவின் ஸ்பானிஷில் மொழிபெயர்த்தோம். அது நன்றாக இருந்தது. அதே காலகட்ட, லத்தீனை வேறொரு மொழியில் எழுதுவது, லத்தீனை ஆங்கிலத்தில் மற்றும் ஸ்பானிஷில் எழுதுவது, என்னும் அதே கருத்துகள் எல்லாம் இருந்தன.

போர்னே: காஃப்காவை ஸ்பானிஷில் மொழிபெயர்த்தவர்களுள் நீங்களும் ஒருவர். நீங்கள் அவரை மொழியாக்கும்போது சேவையுணர்வு கொண்டிருந்தீர்களா?

போர்ஹே: : இல்லை, வால்ட் விட்மனின் song of myself- னை மொழிபெயர்க்கும்போது அவ்வாறு உணர்ந்தேன். " நான் செய்து கொண்டிருப்பது முக்கியத்துவம் கொண்டது' என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். விட்மனை மனப்பாடமாகத் தெரியும்.

போர்னே: நீங்கள் செய்துள்ள மொழிபெயர்ப்புகளுள் ஏதாவதொன்று, உங்களது படைப்பினைப் புரிந்து கொள்வதற்கும் ரசிப்பதற்கும் உதவியிருப்பதாக, நீங்களே செய்திருப்பவற்றை நியாயப்படுத்துவதாக எப்போதாவது உணர்ந்தீர்களா?

போர்ஹே: : இல்லை, என்னுடைய படைப்பு பற்றி நான் எண்ணவில்லை.

போர்னே: நீங்கள் மொழிபெயர்க்கும்போது?

போர்ஹே: : இல்லை, ப்யூனஸ் அயர்ஸிலுள்ள என் வீட்டை வந்து பாருங்கள், என் நூலகத்தைக் காட்டுகிறேன். என்னுடையதோ என்னைப் பற்றியோ ஒரு புத்தகம்கூட இருக்காது. இது நிச்சயமானது. என் புத்தகங்களை தெரிவு செய்கிறேன். சர் தாமஸ் ப்ரெü அல்லது எமர்ஸனுக்கு அருகிலே இடம் பிடித்துக்கொள்ள நான் யார்? ஒன்றுமில்லாதவன்.

கண்டுகொண்டேன். - மில்டனும், கோல்ரிட் ஜீம் அப்படியே அறிந்திருந்தனர் என எண்ணுகிறேன். தம் வாழ்க்கை இலக்கியத்திற்கும் வாசிப்புக்கும் எழுதுவதற்கும் அர்ப்பணிக்கப்படும் என்பதனையறிந்தனர்.

போர்னே: Borges and I என்னும் சிறு கட்டுரையும் The watcher என்னும் கவிதையும் இரட்டை Double- யின் பாலான உங்களது ஆர்வத்தைக் காட்டுகிறது. எழுத்தாளர் அல்லாத போர்ஹேயை சிறிது நேரம் பேசவிட்டு, தான் விரும்பினாலும் விரும்பாது போனாலும் எழுத்தாளர் போர்ஹேயின் மதிப்பீட்டைத் தரச் செய்யலாமா?

போர்ஹே: : அவ்வளவாக நான் விரும்புவதில்லை. மூலப் பிரதியைகளே தெரிவு செய்வேன். செஸ்டர்னையும் காஃப்காவையும் தேர்ந்தேடுப்பேன்.

போர்னே: அர்ஜென்டினாவிலுள்ள உங்களது நூலகத்தில் உங்கள் நூல்கள் இடம்பெறாது. எழுத்தாளர் அல்லாதவரின் முடிவென்று நினைக்கிறீர்களா?

போர்ஹே: : ஆம், நிச்சயமாக.

போர்னே: அச்சூழலில் தன்னை உணருமாறு செய்து கொண்டாரா?

போர்ஹே: : ஆமாம், அவர் செய்துகொண்டார். ஆமாம் என்னைச் சுற்றிலும் அவரின் எந்த நூலையும் காண முடியாது உங்களால். ஏனெனில் நான் நோயுற்றவன், ஓய்ந்து போனவன் என்று அவருக்கு எச்சரிக்கை செய்தேன். நான் உணரும் விதம் குறித்து அவரை எச்சரிக்கை செய்தேன். நான் உணரும் விதம் குறித்து அவரை எச்சரித்தேன். நல்லது போர்ஹே: மீண்டும் இங்கே இருக்கிறார். நான் என்ன செய்யக்கூடும்? ஒத்துப் போக வேண்டியதுதான். நான் அனுமானிப்பது போலவே ஒவ்வொருவரும் உணருகின்றனர்.

போர்னே: ழான் பால் சார்த்தரின் ஒரு வாசகம் என்னை எப்போதும் வசீகரிக்கப்படுத்தும். அவர் குறிப்பிட்டார்: Man is wizard unto manó. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஏற்றுக் கொள்கிறீர்களா?

போர்ஹே: : Man is wizard ?

போர்னே: கருத்துக்களை இட்டுக் கட்டுகிறான். பிரபஞ்ச விதிகளை உருவாக்குகிறான். சகமனிதர்கள் அவற்றை நம்புமாறு செய்கிறான். அதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?

போர்ஹே: : குறிப்பாக அது கவிகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் பொருந்தக் கூடியது என்று கருதுகிறேன். இல்லையா? மற்றும் இறைவியலாளருக்கும் பொருந்துவது Trinity பற்றி எண்ணிப் பார்த்தோமானால், அது எட்கர் ஆலன்போவைவிட புதிரானதாய் இருக்கும். பிதா, சுதன், பரிசுத்த ஆவி. அவை ஒன்றாகி விடுகின்றன. மிக மிகப் புதிரானது. ஆனால் யாரும் அதனை நம்புவதில்லை. குறைந்தபட்சம் நான் நம்புவதில்லை.

போர்னே: ஆற்றல் வாய்ந்தவையாக தொன்மங்கள் இருந்திட அவை நம்பவேண்டிய அவசியமில்லை.

போர்ஹே: : இல்லை, இருந்தும் வியப்படைகிறேன். உதாரணமாக, நம் கற்பனை centaur- னை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் பூனைமுகம் கொண்ட எருதினை ஏற்பதில்லை. இல்லை, அது சரியானது இல்லை, நயமற்றது. ஆனால் momptain, centaurகளை ஏற்றுக்கொள்கிறோம். அவை அழகாயிருப்பதால் , குறைந்தபட்சம் அவை அழகியவை என்று எண்ணுகிறோம். நிச்சயமாக அவை மரபின் அங்கமாயுள்ளன. ஆனால் வரலாற்றுச் சின்னங்களையும் நாணயங்களையும் அறிந்திராத தாந்தே, லத்தீன் எழுத்தாளர்கள் மூலமாக கிரேக்க தொன்மங்களை அறிவார். தாடியுடன் கூடிய மனித முகம் கொண்ட எருதாக minolaur-னை எண்ணினர். மிக அருவருப்பானது, எருதின் முகம் கொண்ட மனிதனாக அவனை நினைத்துக் கொள்ளும்போது, தாந்தேயின் பல பதிப்புகளில் அதுபோன்ற minolaur -னைப் பார்க்கலாம். ஆனால், தாந்தே, பாதி எருதை, பாதி மனிதனை வாசித்திருந்ததால், அவனை அப்படியாக எண்ணினார். நம் கற்பனை அதை ஏற்பதில்லை. ஆனால் பல தொன்மங்களை நாம் எண்ணிடும்போது, மிகவும் கேடான தொன்மம் என்று இருக்கிறது. அது தேசங்கள் பற்றின தொன்மம் நான் ஒரு சிலி தேசத்தவன் அல்ல, உருவகுவே நாட்டவன் அல்ல, அர்ஜென்டினாவைச் சேர்ந்தவன் என்று ஏன் நான் நினைத்துக் கொள்ள வேண்டும்? நிஜமாகவே எனக்குத் தெரியவில்லை.நம்மீது நாமே திணித்துக்கொள்ளும் அத்தொன்மங்கள், வெறுப்பையும், யுத்தத்தையும் குரோதத்தையும் உண்டாக்கும் மிகக்கொடியவை. நாளடைவில் அரசாங்கங்களும் தேசங்களும் இல்லாது போய் நாமெல்லோம் சர்வதேசப் பிரஜைகளாகி விடுவோம்.

******

நேர்காணல் தொடர்கிறது…. பகுதி 2  இங்கே

நூல்: மணல் பிரதி தொகுப்பு: தளவாய் சுந்தரம்

நன்றி: தாவரம்

Monday, March 28, 2011

மைக்கண்ணாடி - ஜார்ஜ் லூயி போர்ஹே

தமிழில் - அச்சுதன் அடுக்கா

தனது நாட்டை எகிப்திய வரி வசூலிப்பவர்களின் பேராசைக்கு ஒப்படைத்தவனும், 1842ஆம் வருடம் 14வது பர்மகாட் சந்திர தினத்தில் அரண்மனை அறையொன்றில் இறந்தவனுமான துஷ்டன் யாகப்தான் சூடானை ஆண்டவர்களில் கொடூரமானவன் என்பதை எல்லாச் சரித்திரமும் அறியும். மாந்திரீகன் அப்-எர்-ரக்மான் அல்-மஸ்முதி (இப்பெயரை ’கருணை உள்ளவர்களின் வேலைக்காரன்’ என்று வேண்டுமானால் மொழிபெயர்க்கலாம்) அவனைக் குறுவாளால் அல்லது விஷத்தால் jorge-luis-borges கொன்றான் என்று நம்புபவர்களும் இருக்கிறார்கள். அவன் துஷ்டனான போதிலும், அவன் இயற்கையான மரணத்தில் இறந்து போயிருப்பதும் சாத்தியம் என்று எண்ணுபவர்களும் இருக்கிறார்கள். காப்டன் ரிச்சர்ட் எப்.பர்டன் அம்மாந்திரீகனை 1853ல் சந்தித்துப் பேசினார். நான் கீழே தந்திருப்பது அவன் நினைவு கூர்ந்த அச் சம்பவம்:

எனது சகோதரன் இப்ராஹிமினால் அவனை ஏமாற்றிய குர்டோஃபானின் ஏமாற்றுக்காரத் தலைவர்களின் வஞ்சகம் நிறைந்த உபயோகமற்ற துணையோடு நடத்தப்பட்ட ரகசிய நடவடிக்கையின் விளைவாகத்தான், துஷ்டன் யாகப்பின் கோட்டையில் நான் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருந்தேன் என்பது உண்மை. ரத்தம் படிந்த நீதியில் என் சகோதரன் வாளுக்கிரையானான். ஆனால் நான், நானொரு மாந்திரீகன் என்றும், எனக்கு வாழ்வு தருவானானால் மந்திர விளக்கைக் காட்டிலும் அற்புதமான வடிவங்களையும் தோற்றங்களையும் அவனுக்குக் காண்பிக்கிறேன் என்றும் சொல்லி அத் துஷ்டனின் வெறுக்கப்பட்ட கால்களில் விழுந்தேன். அந்தக் கொடுங்கோலன் உடனடியாக நிரூபணம் கேட்டான். ஒரு நாணல் பேனா, ஒரு கத்திரி, ஒரு பெரிய வெனிஸ் காகிதம், ஒரு மைச் செப்பு, கனல்கள் கொண்ட தட்டு, கொஞ்சம் தனியா விதைகள், ஒரு அவுன்ஸ் பென்சோயின் இவற்றைக் கேட்டேன். காகிதத்தை ஆறு துண்டாக்கினேன். முதல் ஐந்து துண்டுகளில் மந்திரங்களும், பிரார்த்தனையும் எழுதினேன். எஞ்சிய துண்டில் புனித குரானிலிருந்து எடுக்கப்பட்ட கீழ்க்கண்ட வார்த்தைகளை எழுதினேன்: ‘உனது முகத்திரையை உன்னிலிருந்து மாற்றி விட்டோம்: இன்று உனது பார்வை துளைத்துக் கொண்டிருக்கிறது.’ பின், யாகப்பின் வலக்கையில் ஓர் மாந்திரீக வட்டம் வரைந்தேன். கையைக் குழிக்கச் சொல்லி, அதன் நடுவில் மை விட்டேன். அவன் பிரதிபலிப்பதைப் பார்க்கும்படியாக இருக்கிறதா என்று கேட்டேன். இருக்கிறதென்றான். தலையைத் தூக்க வேண்டாம் என்று சொன்னேன். கனல் தட்டில் பென்சோயினையும், தனியா விதைகளையும் இட்டேன். கனலில் பிரார்த்தனைகளைச் சொன்னேன். அடுத்ததாக, அவன் பார்க்க விரும்பும் ரூபத்தின் பெயரைச் சொல்லச் சொன்னேன். அவன் ஒரு கணம் யோசித்து சொன்னான். ‘ஓர் காட்டுக்குதிரை, பாலைவன எல்லைகளில் மேய்பவற்றில் மிகச் சிறந்தது.’ முதலில், அவன் ஒரு அமைதியான பசும் மேய்ச்சல் நிலத்தைப் பார்த்தான். ஒரு நிமிடத்திற்குப் பிறகு, சிறுத்தையின் அசைவுகளும், முகத்தில் ஒரு வெண் புள்ளியும் கொண்ட குதிரை நெருங்கி வருவதைப் பார்த்தான். அதைப்போன்ற வலிமையுள்ள குதிரைக் கூட்டம் ஒன்றைப் பார்க்கக் கேட்டான். தொடுவானில் தூசுப்படலத்தைப் பார்த்தான். பின் குதிரைக் கூட்டம். இப்பொழுதுதன் எனது வாழ்வு காப்பாற்றப்பட்டதென்றறிந்தேன்.

அன்றிலிருந்து, கீழ்வானில் முதல் ஒளிகிரகணம் தோன்றும் பொழுதில், இரண்டு படைவீரர்கள் என் சிறைக்கூடத்திற்கு வருவார்கள். சாம்பிராணி, கனல் தட்டு, மை இவைகள் ஏற்கனவே தயாராக இருக்கும். துஷ்டனின் படுக்கையறைக்கு என்னை அழைத்துச் செல்வார்கள். உலகில் புலனாகும் எல்லாப் பொருள்களையும் பார்க்கக்கேட்டான். நானும் காண்பித்தேன். நான் இன்னும் வெறுக்கும் அந்த மனிதன் தன் உள்ளங்கையில் இப்போது இறந்து போயிருக்கும் மனிதர்கள் பார்த்திருப்பவைகளையும், இப்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பார்த்திருப்பவைகளையும் கொண்டிருந்தான்; நகரங்கள், காலநிலைகள், பூமியைப் பிரித்திருக்கும் ராஜ்ஜியங்கள்; தத்தமது கடல்களில் ஓடும் கப்பல்கள்; போர், இசை மற்றும் அறுவைக் கருவிகள்; அழகான பெண்கள்; ஸ்திரமான நட்சத்திரங்களும் கோள்களும்; கடவுளற்ற மனிதர்கள் அருவருக்கத்தக்க அவர்களின் படங்களைத் தீட்ட உபயோகிக்கும் வண்ணங்கள்; சுரங்கங்கள், எந்திரத் தளவாடங்கள், தங்களுக்குள் பூட்டி வைத்திருக்கும் ரகசியங்கள் சொத்துக்களோடு; தேவனின் புகழையும், தொழுதலையுமே உணவாகக் கொண்ட வெள்ளித் தேவதைகள்; பள்ளிக் கூடங்களில் வழங்கப்படும் பரிசுகள்; பிரமிடுகளில் புதைக்கப்பட்டிருக்கும் பறவைகளினதும், அரசர்களினதுமான விக்ரகங்கள்; உலகைத் தாங்கிப் பிடித்திருக்கும் காளையாலும், அதன் அடியில் கிடக்கும் மீனாலும் ஏற்படுத்தப்பட்ட நிழல்; கருணைமிக்க அல்லாவின் சந்தனக் கழிவுகள், வாயு விளக்குத் தெருக்கள், மனிதன் சப்தம் கேட்ட மாத்திரத்தில் மரணமுறும் சுறா போன்ற சொல்ல இயலாதவற்றைக் கண்டான். ஒருமுறை, ஐரோப்பா என்றழைக்கப்படும் நகரத்தைக் காட்டச் சொன்னான். நான் அதன் முக்கிய ரஸ்தாவை அவன் பார்க்கச் செய்தேன். கறுப்பு மற்றும் பலவகைக் கண்ணாடிகள் அணிந்திருக்கும் மனிதர்களின் பிரம்மாண்டமான ஓட்டத்தில்தான் முகமூடி அணிந்த அந்த மனிதனைப் பார்த்தான் என்று நான் நினைக்கிறேன்.

அதுமுதல், சிலசமயம் சூடானிய அணிகளோடும் சிலசமயம் யூனிபார்மோடும் ஆனால் எப்போதும் முகத்தில் முகமூடியோடும் அந்த உருவம் நாங்கள் பார்த்தவற்றினிடையில் அடிக்கடி வந்தது. அவன் வரத் தவறியதேயில்லை. நாங்கள் அவன் யாரென அறியத் துணியவில்லை. முதலில் சீக்கிரம் மறைந்து விடுவதாகவும் அல்லது ஸ்திரமாகவும் தோன்றிய மைக்கண்ணாடி உருவங்கள் இப்போது மிகுந்த சிக்கலாகி விட்டன. அவைகள் எனது கட்டளைக்குத் தாமதமின்றிப் பணிந்தன. அந்தக் கொடுங்கோலன் மிகத் தெளிவாகப் பார்த்தான். அதிகரித்துக் கொண்டே போகும் காட்சிகளின் கொடூரம் எங்களிருவரையும் அசதி நிலைக்குள்ளாக்கியது. தண்டனைகள், மூச்சுத் திணறடித்துக் கொல்லுதல், முடமாக்குதல் போன்ற சிரச்சேதம் செய்பவனின், கருணையற்றவனின் சந்தோஷங்களைத் தவிர வேறெதற்கும் நாங்கள் சாட்சியாகவில்லை.

இவ்வாறாக 14வது பார்மகாட் சந்திர தினத்தின் இரவும் வந்தது. மைவட்டம் அக்கொடுங்கோலன் கையில் உண்டாக்கப்பட்டது. பென்சோயினும், தனியா விதைகளும் கனல்தட்டில் இடப்பட்டன. பிரார்த்தனைகள் சொல்லப்பட்டன. நாங்கள் இருவரும் தனியாக இருந்தோம். அன்று, அவன் இதயம் ஓர் மரண தண்டனையைப் பார்க்க ஆவல் கொண்டிருந்ததால், அந்த துஷ்டன் சட்டப்படியானது, கருணை நிராகரிக்கப்பட்டதுமான ஒரு தண்டனையை அவனுக்குக் காட்ட வேண்டும் என்று கட்டளையிட்டான். டிரம்ஸீடன் வீரர்களை, விரிக்கப்பட்டிருந்த பசுந்தோலை, பார்வையாளர்களாக இருக்கக் கொடுத்து வைத்த மனிதர்களை, நீதியின் வாளை ஏந்தியிருந்த சிரச்சேதம் செய்பவனை அவன் பார்க்கச் செய்தேன். அவனைப் பார்த்து அதிசயித்து யாகப் என்னிடம் சொன்னான். ‘அது அபுகிர் உனது சகோதரனுக்கு நீதி வழங்கியவன். உனது உதவியில்லாமல் விஞ்ஞானத்தால் இந்த ரூபங்களை ஏற்படுத்தும் விதம் எனக்குத் தெரியப்படுத்தப்படும்போது உனது மரணத்தையும் நிச்சயிப்பவன்.’

அவன் கொல்லப்படப் போகும் மனிதனை முன்னால் கொண்டுவரச் சொன்னான். அது செய்யப்பட்டபோது, கொல்லப்படப்போகும் மனிதன் அந்த முகத்திரை அணிந்த விசேஷமான மனிதன் என்பதைக் கண்டு அக்கொடுங்கோலன் வெளிறினான். நீதி வழங்கப்படுவதற்குமுன், அத்திரையை அகற்றும்படி நான் பணிக்கப்பட்டேன். இதைக் கேட்டதும், நான் அவன் காலடியில் விழுந்து, ‘ஓ இக்காலத்தின் மன்னனே, இச் சகாப்தத்தின் மொத்தமும், சாரமுமானவனே, அவன் பெயரோ அவன் தந்தையின் பெயரோ, அவன் பிறந்த நகரத்தின் பெயரோ நமக்குத் தெரியாததால் இந்த உருவம் மற்றவற்றைப் போன்றதல்ல. நான் பதில் சொல்லியாக வேண்டிய ஓர் பாவத்திற்குள்ளாகும் பயத்தால், இந்த உருவ விஷயத்தில் நான் தலையிடத் துணியவில்லை’ என்று முறையிட்டேன்.

அந்த துஷ்டன் சிரித்தான். சிரித்து முடித்ததும், அப்படியொரு குற்றம் இருக்குமானால், இதைத் தனதாக ஏற்றுக் கொள்கிறேன் என்று சத்யம் செய்தான். தனது வாளைக் கொண்டும், குரானைக் கொண்டும் சத்யம் செய்தான். இதன்பின், நான் அந்தக் கைதியின் அடையாளம் காட்டவும், பசுந்தோலில் சுற்றியிருக்கவும், அவன் முகத்திரையைக் கிழிக்கவும் கட்டளையிட்டேன். அப்படியே நடந்தன. கடைசியில் யாகப்பின் மிரண்ட கண்களால் அம்முகத்தைப் பார்க்க முடிந்தது - அது அவன் முகம். பயமும், பைத்தியமும் அவனைக் கவ்விக்கொண்டன. எனது திடமான கையின் மேல் அவனது நடுங்கும் கையை வைத்தேன். அவனது மரணச்சடங்கிற்குச் சாட்சியாகும்படி கட்டளையிட்டேன். அவன் தன் கண்களை அகற்றவோ, மையைக் கவிழ்த்தவோ முடியாத அளவுக்கு, அந்தக் கண்ணாடியோடு ஒன்றிப் போனான். குற்றவாளியின் கழுத்தில் வாள் விழும் காட்சியில் யாகப் எனது இரக்கத்தைத் தொடாத ஓர் சப்தத்தை முனங்கினான். தரையில் தடுமாறி விழுந்து இறந்தான்.

எல்லாம் அவன் மகிமை. அவன் எப்போதும் மன்னிப்பவன். அவன் கைகளில் இருக்கின்றன வரம்பற்ற குற்றங்களின், தீராத தண்டனைகளின் சாவிகள்.

நன்றி: கொல்லிப்பாவை இதழ்த்தொகுப்பு

ஆங்கிலத்தில் படிக்க இங்கே செல்லவும்

Wednesday, March 23, 2011

வாளின் வடிவம்-போர்ஹே

தமிழில்: பிரம்மராஜன்

ஒரு வன்மம் மிக்க வடு அவன் முகத்தின் குறுக்காகச் சென்றது. ஒரு முனையில் அவன் நெற்றிப் பொட்டுக்கும் மற்றொன்றில் கன்னத்துக்குமாக சுருக்கங்கள் ஏற்படுத்திய அது ஏறத்தாழ முழுமையடைந்த அரைவட்டமாகவும், சாம்பல் நிறத்திலும் இருந்தது. அவனின் உண்மையான பெயர் முக்கியமல்ல: டாகு ரெம்போவில் இருந்த எல்லோரும் அவனை கொலரோடோவிலிருந்து வந்த ஆங்கிலேயன் என்று அழைத்தார்கள். அந்த வயல்களின் சொந்தக்காரனான கார்டோசோ அவற்றை விற்க மறுத்தான்: எதிர்பார்த்திராத ஒரு விவாதத்திற்கு அந்த ஆங்கிலேjorge-luis-borges2யன் இட்டுச்  சென்றிருக்க வேண்டும்: அவன் கார்டோசோவிடம் தன் வடுவின் ரகசியத்தைக் கூறியிருக்க வேண்டும். ரியோ கிராண்ட் டேல் சர் என்ற பகுதியிலிருந்து, எல்லைப் புறத்திலிருந்து அந்த ஆங்கிலேயன் வந்தான். அவன் ஒரு கடத்தல்காரனாக பிரேஸிலில் இருந்தவன் என்று சொல்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். அந்த வயல்கள் புல் மண்டிக்கிடந்தன: நீர்ச்சுனைகள் உப்புக்கரித்தன: இந்தக் குறைபாடுகளை சரியாக்கும் பொருட்டு அந்த ஆங்கிலேயன் நாள் முழுவதும் தன் வேலையாட்களைப் போலவே கடினமாக உழைத்தான். கருணையின்மையின் எல்லைக்கு அவன் கண்டிப்பானவன் என்றும் துல்லியமான நியாயவாதி என்றும் அவனைப் பற்றிச் சொன்னார்கள்: ஒரு வருடத்தின் சில சமயங்களில் தன்னை ஒரு மாடி அறையில் வைத்துப் பூட்டிக்கொண்டான். இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து ஒரு போரிலிருந்தோ, ஒரு தலை சுற்றலில் இருந்தோ வெளிப்படுவது போல வெளுத்துப் போய், நடுங்கியபடி, குழம்பிப்போய் ஆனால் முன்பைவிட அடக்கி ஆள்பவனாக அவன் வெளிப்பட்டான். அந்தக் கண்ணாடி போன்ற கண்கள், சக்திமிக்க மெல்லிய உடல், மற்றும் நரைத்துப்போன மீசை ஆகியவை எனக்கு ஞாபகம் வருகின்றன. அவன் எவரிடமும் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. அவன் பேசிய ஸ்பானிய மொழி மிக அரிச்சுவடித்தனமானதும் ப்ரேஸீல் மொழிக் கலப்பு மிக்கதும் எனபதும் உண்மை. ஏதாவது ஒரு துண்டுப் பிரசுரம் அல்லது ஒரு வியாபார சம்பந்தமான கடிதம் தவிர அவனுக்கு எந்தக் கடிதங்களும் வருவதில்லை.

வடக்குப் பிராந்தியங்கள் வழியாக நான் சென்றமுறை பயணம் செய்தபோது கராகுவடா அருவியின் எதிர்பாராத பொங்கி வழிதல் என்னை ஒரு இரவு கொலரோடாவில் தங்கும்படி கட்டாயப்படுத்தியது. சில கணங்களுக்குள் என் வரவு அங்கு சமயப் பொறுத்தமற்றுப் போனதை என்னால் உணர முடிந்தது.

என்னை அந்த ஆங்கிலேயனுக்கு உவப்பாக்கிக் கொள்ள முயன்றேன். சிறிதும் பகுத்து அறிதல் அற்ற பற்றுக்களில் ஒன்றை நான் பயன்படுத்தினேன்: தேசப்பற்று. இங்கிலாந்துபோன்ற வெல்ல முடியாத உணர்வுடைய ஒரு நாட்டினை என்னுடையதாகக் கூறினேன். என் நண்பன் ஒப்புக்கொண்டு ஆனால் தான் ஒரு ஆங்கிலேயன் இல்லை என்றான். அவன் அயர்லாந்தில் டங்கர்வான் பகுதியைச் சேர்ந்தவன். இதைக் கூறிய பிறகு, அவன் ஏதோ ஒரு ரகசியத்தைச் சொல்லிவிட்டது போல திடீரென்று நிறுத்தினான்.

இரவு உணவுக்குப் பிறகு நாங்கள் வானத்தைப் பார்க்க வெளியே சென்றோம். வானம் தெளிவாகி இருந்தது. ஆனால் தாழ்ந்த மலைகளுக்கு அப்பால் தெற்கு வானம் மின்னலால் கீறப்பட்டு, ஆழ்ந்து பிளக்கப்பட்டு, இன்னொரு புயலை கருக் கொண்டிருந்தது. சுத்தம் செய்யப்பட்ட உணவருந்தும் அறையில், இரவு உணவு பரிமாறிய பையன் ஒரு பாட்டில் ரம் கொண்டு வந்து வைத்தான். கொஞ்ச நேரம் நாங்கள் மௌனமாக அருந்தினோம்.

எனக்கு போதை ஏறிவிட்டதை நான் உணர்ந்தபோது என்ன நேரம் என்று தெரியவில்லை. என்னுடைய புத்துணர்ச்சியா, அல்லது சோர்வா, அல்லது பெருமகிழ்ச்சியா–அந்த வடுவைப் பற்றிக் குறிப்பிடச்செய்தது எது என்று தெரியவில்லை. ஆங்கிலேயனின் முகம் மாறுதல் அடைந்தது. அவன் என்னை வீட்டை விட்டு வெளியே தள்ளப்போகிறான் என்று சில வினாடிகள் நினைத்தேன். விரிவாக, தன் சாதாரண குரலில் அவன் கூறினான்:

“என் வடுவைப் பற்றிய வரலாற்றை ஒரு நிபந்தனையின் பேரில் நான் சொல்கிறேன்: அந்த பெரும் அவமானத்தை, இழிவான சந்தர்ப்பங்களின் தீவிரத்தை சற்றும் குறைக்கப் போவதில்லை.”

நான் ஒப்புக்கொண்டேன். அவனுடய ஆங்கிலத்தில் ஸ்பானிய மொழியையும், போர்ச்சுகீசிய மொழியையும் கலந்து அவன் சொன்ன கதை இதுதான்:

கிட்டதட்ட 1922இல் கன்னாட் நகரங்களில் ஒன்றில், அயர்லாந்தின் சுதந்திரத்திற்காக சூழ்ச்சியில் ஈடுபட்டிருந்த பலரில் நானும் ஒருவன். என்னுடைய தோழர்களில் சிலர்– தங்களை அமைதியான காரியங்களில் ஈடுபடுத்தியபடி இன்னும் உயிருடன் இருக்கிறார்கள்: மற்றவர்கள், புரிந்து கொள்ள முடியாத வகையில் பாலைவனத்திலும் கடலிலும் ஆங்கிலக்கொடியின் கீழ் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்; தகுதிவாய்ந்த மற்றொருவன் விடியல் நேரத்தில், ராணுவ வீரர்களின் குடியிருப்பு முற்றத்தில், தூக்கம் நிரம்பிய மனிதர்களால் சுடப்பட்டு இறந்தான். இன்னும் பலர் (மிகவும் அதிர்ஷ்டமற்றவர்கள் அல்ல) பெயரற்ற, உள்நாட்டுப் போரின் ரகசிய மோதல்களில் தங்கள் முடிவுகளை எதிர்கொண்டனர். நாங்கள் தேசீயவாதிகள்; கத்தோலிக்கர்கள்; நாங்கள் ரொமாண்டிக்குகள் என்று கூட சந்தேகப்படுகிறேன். .. அயர்லாந்து எங்களுக்கு நிறைவேற்றம் காணமுடியாத எதிர்காலமாக மட்டுமின்றி பொறுத்துக்கொள்ள முடியாத நிகழ்காலமாகவும் இருந்தது. அது ஒரு கசப்பான, போற்றிப் பாதுகாத்த புராணிகம்; அது வட்ட வடிவக் கோபுரங்களாகவும் சிவப்பு சதுப்பு நிலங்களாகவும் இருந்தது. பார்னலின் மறுதலிப்பாக இருந்தது. மாபெரும் காவியப் பாடல்களாக அவை காளைகளைக் களவாடிய நிகழ்வுகளைப் பாடின. இவை இன்னொரு பிறவியில் நாயகர்களாகவும் மற்றும் சிலவற்றில் மீன்களாகவும், மலைகளாகவும். . . . ஒருநாள் மதியம், நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். மன்ஸ்டர் நகரத்திலிருந்து வந்த கூட்டாளி எங்களுடன் சேர்ந்தான்: ஒரு ஜான் வின்சென்ட் மூன்.

அவன் இருபது வயது நிரம்பாதவன். அவன் ஒரே சமயத்தில் மெலிந்தும், தொங்கும் சதைப்பற்று உடலுடனும் காணப்பட்டான்;முதுகெலும்பு இல்லாத பிராணியொன்றினைப் போல அசௌகரியமான மனப்பதிவை ஏற்படுத்தினான். அவன் தீவிரத்துடனும், தற்பெருமையுடனும் ஒவ்வொரு பக்கத்தையும் படித்திருந்தான்–கடவுளுக்குத்தான் தெரியும் என்ன கம்யூனிஸ்ட் புத்தகங்கள் என்று. எவ்விதமான விவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க அவன் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தைப் பயன்படுத்தினான். ஒருவன் மற்றவனை வெறுப்பதற்கு அல்லது விரும்புவதற்கு எல்லையற்ற காரணங்கள் கொண்டிருக்கலாம்: மூன் பிரபஞ்சத்தின் வரலாற்றையே மிக மோசமான ஒரு பொருளாதார பிரச்சனைக்குச் சுருக்கினான். புரட்சியானது வெற்றி யடையும்படி முன்பே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்று உறுதியாகக் கூறினான். ஒரு நாகரீகமான மனிதனுக்கு இழந்தபோன நோக்குகள் மட்டுமே கவர்ச்சிகரமானதாக இருக்கவேண்டும் என்று நான் அவனிடம் சொன்னேன். . . இரவு வந்துவிட்டிருந்தது; எங்களுடைய கருத்துமாறுபாடுகளை, கூடத்தில், மாடிப்படிகளில், தெளிவில்லாத தெருக்களில் தொடர்ந்தோம். அவன் வெளிப்படுத்திய தீர்மானங்களை விட அவற்றின் மறுக்க இயலாத, நிறுவப்பட்ட தன்மையே என்னைக் கவர்ந்தது. புதிய தோழன் விவாதிக்கவில்லை. உதாசீனத் துடனும் வெறுப்புடனும் தன் கருத்துக்களைக் கட்டளைத்தொனியில் தெரிவித்தான்.

“வெளிப்பகுதியில் அமைந்திருந்த வீடுகளுக்குப் பக்கத்தில் நெருங்கும் போது, சற்றும் எதிர்பார்க்காத துப்பாக்கிச் சத்தம் எங்களை ஸ்தம்பிக்க வைத்தது. (இதற்கு முன்பு அல்லது பிறகு ஒரு தொழிற்சாலையின் வெற்றுச் சுவரையோ அல்லது ராணுவவீரர்களின் குடியிருப்பையோ சுற்றி வந்தோம்)கற்கள் பாவப்படாத ஒரு தெருவில் நுழைந்தோம்; பற்றி எரியும் குடிசை ஒன்றிலிருந்து, நெருப்பு வெளிச்சத்தில் பூதாகரமாய்த் தெரிந்த ஒரு ராணுவ வீரன் வெளிப்பட்டான். உரக்கக் கத்தியபடி, எங்களை நிற்கச்சொல்லி உத்தரவிட்டான். என் நடையை துரிதமாக்கினேன்; என் தோழன் கூட வரவில்லை.நான் திரும்பினேன்: ஜான் வின்சென்ட் மூன் பயத்தினால் நித்தியப்படுத்தப்பட்டவன் போல ஈர்க்கப்பட்டு அசைவற்று நின்றான். நான் பின்னால் திரும்பி ஓடி ராணுவ வீரனை ஒரே அடியில் கீழே தள்ளி, வின்சென்ட் மூனை அவமானப் படுத்தி, என்னைத் தொடர்ந்து வர உத்தரவிட்டேன். நான் அவன் கையைப் பிடித்து இழுத்துச் செல்ல வேண்டியதாயிற்று; பயம் என்ற உணர்ச்சி அவனை ஏதும் செய்ய இயலாதவனாக்கி விட்டிருக்கிறது. ஒளிப்பிழம்புகளால் ஊடுருவப்பட்ட இரவின் ஊடாக நாங்கள் தப்பித்தோம். துப்பக்கிக் குண்டுகள் ஏராளமாய் எங்களை நோக்கியபடி வந்தபோது, அதில் ஒன்று மூனின் வலது தோளைக் காயப்படுத்தியது. பைன் மரங்களுக்கிடையில் நாங்கள் தப்பித்துச் சென்றபோது அவன் ஒரு பலவீனமான தேம்பலை வெளிப்படுத்தினான்.

“1923ஆம் வருடத்தின் இலையுதிர்காலத்தில் நான் ஜெனரல் பார்க்லியின் கிராமத்து வீட்டில் பாதுகாப்பாய் தங்கியிருந்தேன். (இதுவரை என்றும் நான் பார்த்திராத) அந்த ஜெனரல் நிர்வாகக் காரியமாற்றுவதற்கோ எதற்கோ பெங்கால் சென்றிருந்தார்; அந்த வீட்டுக்கு ஒரு நூற்றாண்டுக்கும் குறைவாகத்தான் வயதாகியிருக்கும். ஆனால் அது சிதைலமடைந்தும் நிழல் நிரம்பியும் இருந்தது. புரிபடாத வராந்தாக்களிலும் அர்த்தமற்ற பின் கூடங்களிலும் அது விரிவடைந்திருந்தது. காட்சிக் கூடமும், மாபெரும் நூலகமும் முதல் மாடியை ஆக்கிரமித்திருந்தன. சர்ச்சை மிகுந்த, உவப்பில்லாத புத்தகங்கள்–அவை ஒரு வகையில் 19ஆம் நூற்றாண்டின் வரலாறாக இருந்தன; நிஷாபூரின் அகன்ற முனைக் கொடுவாள்கள்–அவற்றின் உறைந்த வளைவுகளில் இன்னும் போரின் கொடூரமும் காற்றும் நிலைத்திருப்பது மாதிரியாகத் தோன்றியது. நாங்கள் பின்பக்கத்திலிருந்து (நான் நினைவு கொள்வது மாதிரி) நுழைந்தோம். மூன் நடுங்கியபடி, வாய் உலர்ந்து, அந்த இரவின் நடப்புகள் சுவாரஸ்யமானதென்று முணுமுணுத்தான்; நான் அவனின் காயத்திற்குக் கட்டுப்போட்ட பின் ஒரு கோப்பை தேநீர் கொண்டுவந்தேன்: என்னால் அவனின் “காயம்”’ மேலோட்டமானது என்று தீர்மானிக்க முடிந்தது. குழம்பிய நிலையில் அவன் திடீரென்று உளறினான்:

“உனக்குத் தெரியுமா நீ ஈடுபட்டது மிக ஆபத்தான காரியம்”.

அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று நான் அவனுக்குச் சொன்னேன். (உள்நாட்டுப் போரின் பழக்கம், நான் எவ்வாறு இயங்க விரும்பினேனோ அவ்வாறு செயல்படத் தூண்டியது; மேலும் ஒரு நபர் பிடிபட்டாலும் கூட எங்கள் நோக்கத்திற்கு ஆபத்து ஏற்படும்).

“அடுத்த நாள் மூன் தன் நிதானத்தை அடைந்திருந்தான் ஒரு சிகரெட்டை ஏற்றுக் கொண்டு “நம் புரட்சிகர கட்சியின் பொருளாதார வழிமுறைகள்”’குறித்து என்னை ஒரு கடுமையான விசாரணைக்கு ஆளாக்கினான். அவன் கேள்விகள் மிகத் தெளிவாய் இருந்தன: நான் (உள்ளபடி) நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறினேன். ஆழ்ந்த துப்பாக்கி வெடி ஓசைகள் தெற்கைக் குலுக்கின. நம் தோழர்கள் நமக்காகக் காத்திருக்கிறார்கள் என்று மூனிடம் சொன்னேன். என்னுடைய மேல்கோட்டும் கைத்துப்பாக்கியும் என் அறையில் இருந்தன; நான் திரும்பியபோது மூன் கண்களை மூடியபடி சோபாவில் நீட்டிப் படுத்திருப்பதைப் பார்த்தேன். அவனுக்குக் காய்ச்சல் என்று அவன் கற்பனை செய்து கொண்டான். வலிமிக்க துடிப்பு ஒன்றினைத் தன் தோளில் அவன் வரவழைத்துக் கொண்டான்.

அந்த கணத்தில் அவனின் கோழைத்தனம் சரி செய்யவேமுடியாதது என்பதை நான் புரிந்து கொண்டேன். அவனைப் பத்திரமாக இருக்கும்படி குலைந்த தொனியில் வேண்டிக்கொண்டு நான் வெளியே கிளம்பினேன். இந்த பயந்த மனிதன் என்னை அவமானத்துக்கு உள்ளாக்கினான். வின்சென்ட் மூன் அன்றி ஏதோ நான்தான் கோழை என்பது போல. ஒரு மனிதன் எது ஒன்றைச் செய்தாலும், அது எல்லா மனிதர்களும் செய்ததைப் போலத்தான். அந்தக் காரணத்துக்காக தோட்டத்தில் இழைக்கப்பட்ட ஒரு துரோகம் மனித இனத்தையே மாசுபடுத்துவது தவறானாதல்ல. அந்தக் காரணத்துக்காக, அதைக் காப்பாற்றும் பொருட்டு ஒரு தனிப்பட்ட யூதனை சிலுவையில் அறைந்தது போதுமானது என்பது நியாயமற்றதாகாது. ஒருவேளை ஷோப்பன்ஹீரீன் கூற்று சரியாகவும் இருக்கலாம்: நானே எல்லா மனிதர்களும், எந்த மனிதனும் எல்லா மனிதனே, ஷேக்ஸ்பியரும் ஒரு வகையில் இந்த மோசமான ஜான் வின்சென்ட் மூன்தான்.

“ஜெனரலின் பிரம்மாண்டமான வீட்டில் ஒன்பது நாட்கள் கழிந்தன. போரின் அவசங்களையும் வெற்றிகளையும் பற்றி நான் பேசப் போவதில்லை:என்னை அவமானப்படுத்தும் அந்த வடுவின் வரலாற்றைக் கூற முயல்கிறேன். என் ஞாபகத்தில் அந்த ஒன்பது நாட்கள், கடைசி நாளின் முந்திய தினத்தைத் தவிர, ஒரே நாளாகத்தான் இருக்கிறது. அன்று எங்கள் ஆட்கள் ராணுவக் குடியிருப்புக்களில் நுழைந்தனர். எல்ஃபின் பிராந்தியத்தில் யந்திரத் துப்பாக்கிகளுக்கு இறையாகிப் போன எங்கள் பதினாறு தோழர்களுக்கு ஈடாய் மிகச்சரியாக வஞ்சம் தீர்க்க முடிந்தது அன்று. விடியற்காலையின் தெளிவின்மையில், காலை உதிக்கும் முன் நான் வீட்டிலிருந்து வெளியேறினேன். இரவு கவியும் சமயத்தில் திரும்பினேன். மேல் மாடியில் என் தோழன் எனக்காகக் காத்திருந்தான்: அவனின் காயம் அவனை வீட்டின் கீழ்ப்பகுதிக்கு இறங்க அனுமதிக்க வில்லை. எஃப்.என்.மாட் என்பவரோ அல்லது க்ளாஸ்விட்ஸ் என்பவரோ எழுதிய யுத்த தந்திரம் பற்றிய தொகுதி ஒன்றை அவன் கையில் வைத்திருந்தது என் நினைவுக்கு வருகிறது. “தரைப்படையே எனக்குப்பிடித்த ஆயுதம்”’ என்று ஒரு இரவு என்னிடம் மனம் திறந்து கூறினான். எங்களுடைய திட்டங்களைப் பற்றி விசாரித்தான்: அவற்றை விமர்சிக்கவோ அல்லது மாறுதல் செய்யவோ விரும்பினான். “நமது படுமோசமான பொருளாதார அடிப்படை”யை’அவன் கண்டனம் செய்யப் பழகியிருந்தான். வறட்டு கொள்கைக்காரனாகவும் கலகலப்பற்றவனாகவும் இருந்த அவன் ஒரு அழிவிற்கான முடிவை முன்னறிவித்தான். “அது ஒரு கொழுந்துவிட்டு எரியும் விவகாரம்”’ என்று முணுமுணுத்தான். உடல் அளவில் அவன் ஒரு கோழை என்பதை அசட்டை செய்ய வேண்டி அவனின் மன ஆணவத்தைப் பெரிதாக்கிக் காட்டினான். நல்லதற்கோ, கெட்டதற்கோ, இவ்வாறு ஒன்பது நாட்கள் கழிந்தன.

பத்தாவது நாள் நகரம் இறுதியாக வேட்டை நாய்களிடம் சிக்கியது. உயரமான, மௌனமான குதிரை வீரர்கள் சாலையில் திரிந்து கண்காணித்தார்கள். சாம்பலும் புகையும் காற்றில் மிதந்தது: ஒரு சதுக்கத்தின் மையத்தில் வீரர்கள் தங்கள் குறிக் கூர்மையை முடிவற்று பயிற்சி செய்துகொண்டிருந்த ஒரு போலி மனித உருவை விட மெலிதான மனப்பதிவே இருக்கக் கூடிய அளவில், தரையின் ஒரு மூலையில் மனிதச் சடலம் வீசப்பட்டுக் கிடந்ததைப் பார்த்தேன். . . . வானில் விடியல் தெரியும் நேரம் நான் கிளம்பினேன்: மதியத்திற்கு முன் நான் திரும்பிவிட்டேன். நூலகத்தில் மூன் யாருடனோ பேசிக்கொண்டிருந்தான்; அவன் குரலின் தொனி அவன் தொலைபேசியில் பெசிக் கொண்டிருக்கிறான் என்பதைத் தெரிவித்தது. பிறகு என் பெயர் காதில் விழுந்தது; பிறகு நான் ஏழு மணிக்குத் திரும்புவேன் என்பதும், பிறகு நான் தோட்டத்தைக் கடந்து வரும்போது அவர்கள் என்னைக் கைது செய்ய வேண்டும் என்ற குறிப்புணர்த்தலும். என்னுடைய நியாயமான நண்பன் என்னை நியாயமான வகையில் விற்றுக்கொண்டிருந்தான். அவனுக்கு தன் சுயபாதுகாப்பு பற்றிய உறுதி தரவேண்டும் என்று கேட்டதும் என் காதில் விழுந்தது.”

“இந்த இடத்தில் என் கதை தெளிவற்றுத் தொலைகிறது. மயக்கமடையச் செய்யும் ஆழ்ந்த படிக்கட்டுகள் வழியாகவும், பயம் கொள்ளத்தகுந்த கூடங்கள் வழியாகவும் என்னைக் காட்டிக் கொடுத்தவனைப் பின் தொடர்ந்தேன் என்பது எனக்குத் தெரியும். மூன் அந்த வீட்டை மிக நன்றாக, என்னைவிட நன்றாகத் தெரிந்து வைத்திருந்தான். வீரர்கள் என்னை நிறுத்துவதற்கு முன்பு அவனை மடக்கினேன். ஜெனரலின் ஆயுதச் சேர்ப்புக்களில் ஒரு வளைந்த குறுவாளைப் பிடுங்கி எடுத்தேன். அந்த அரைச் சந்திரனால் அவனுடைய முகத்தில் என்றென்றைக்குமாக ரத்தத்தினால் ஆகிய அரைச்சந்திரனைச் செதுக்கினேன்.”

“போர்ஹே, ஒரு அந்நியரான உங்களிடம் இந்த மனந்திறப்பினைச் செய்திருக்கிறேன். உங்களின் வெறுப்பு அவ்வளவாய் என்னை வருந்தச் செய்யவில்லை.”

இங்கு கதை சொன்னவன் நிறுத்தினான். அவன் கைகள் நடுங்குவதை நான் கவனித்தேன்.

“அப்புறம் அந்த மூன்?”’நான் கேட்டேன் அவன் காட்டிக் கொடுத்துக் பெற்ற பணத்தை எடுத்துக் கொண்டு பிரேஸீலுக்கு ஓடிவிட்டான். அந்த மதியம், சதுக்கத்தில் ஒரு போலி மனித உரு சில குடிகாரர்களால் சுடப்படுவதை அவன் பார்த்தான்.

நான் பலனின்றி கதையின் மிச்சத்திற்காகக் காத்திருந்தேன். இறுதியில் அவனை தொடர்ந்து சொல்லச் சொன்னேன்.

அப்பொழுது ஒரு கேவல் அவன் உடம்பை உலுக்கியது: ஒரு மெலிந்த மென்மையுடன் அவனின் வெண்மையான வளைந்த வடுவைச் சுட்டிக் காட்டினான்.

“நீங்கள் நம்பவில்லையா? அவன் திக்கினான். என் முகத்தின் மீது பெரும் பாதகத்தின் குறி எழுதப்பட்டு நான் அதைச் சுமந்து திரிவதை நீங்கள் பார்க்கவில்லையா? கதையின் இறுதிவரை நீங்கள் கேட்க வேண்டும் என்பதற்காக நான் இவ்வாறு கூறினேன். என்னைப் பாதுகாத்தவனைப் புறக்கணித்தேன் நான். நான்தான் வின்சென்ட் மூன். இப்பொழுது என்னைப் பழியுங்கள்.”

Translated by Donald A.Yates.

ஆங்கிலத்தில் http://www.coldbacon.com/writing/borges-sword.html

http://en.wikipedia.org/wiki/Jorge_Luis_Borges