Showing posts with label கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ். Show all posts
Showing posts with label கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ். Show all posts

Saturday, July 13, 2013

ஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்

இயல் ஒன்று

பல ஆண்டுகளுக்குப் பிறகு, சுட்டுக் கொல்வதற்காகவே அனுப்பப்பட்ட படைக்குழுவினரை எதிர்கண்டபோது கர்னல் அவ்ரேலியானோ புயெந்தியா அந்தத் தொலை தூரப் பிற்பகலை நினைத்துக்கொண்டார். அன்றுதான் பனிக் கட்டியைக் கண்டுபிடிக்க அவருடைய தந்தை அவரை அழைத்துச் சென்றிருந்தார். அந்தக் காலத்தில் மகொந்தோ ஒரு சிற்றூர். தெளிந்த நீரோடும் ஓர் ஆற்றின்மீது வெயிலில் உலர்த்திய செங்கற்களைக்கொண்டு கட்டப்பட்டிருந்த இருபதே வீடுகள். ஆற்று நீரின் படுகை நெடுகிலும் வெண்ணிறக் கூழாங்கற்கள். அவை வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட முட்டைகளைப் போன்று காட்சியளித்தன. அந்த உலகு புதியது. பல பண்டங்களுGabriel_Garcia_Marquez1க்குப் பெயர்கள் இடப்படவில்லை. அவற்றை அடையாளப்படுத்திக்காட்ட வேண்டிய நிலை. ஒவ்வோராண்டும் மார்ச் மாதத்தில் அலங்கோல ஆடைகள் அணிந்த நாடோடிகள் வந்து அந்தக் கிராமத்துக்கருகில் கூடாரங்கள் அமைத்துத் தங்குவர். குழலிசையும் மேளமுமாக ஆரவாரத்துடன் தமது புதிய கண்டுபிடிப்புகளைக் காண்பிப்பர். முதலில் காந்தக் கல்லைக் கொண்டுவந்தனர். தடித்த தோற்றமுடைய ஒரு நாடோடி வந்தான். தன் பெயர் மெல்குயாடெஸ் என அறிமுகப்படுத்திக்கொண்டான். கட்டுக்குள் கொண்டுவரப்படாத தாடி, துருதுருத்த கைகள், மாசிடோனியாவின் தேர்ந்த ரசவாதிகளின் எட்டாவது அதிசயம் தன்னிடம் இருப்பதாகத் துணிச்சலுடன் அறிவித்தான், செயல் விளக்கம் தந்தான். உலோக வார்ப்புப் பாளங்கள் இரண்டை இழுத்துக்கொண்டு வீடுவீடாகச் சென்றான். பானைகள், சட்டிகள், குறடுகள், கனல் தட்டுகள் என அவை வைக்கப்பட்டிருந்த இடங்களை விட்டுப் பெயர்ந்து உருண்டுவந்ததைக் கண்டு அனைவரும் வியந்தனர். ஆணிகள் கழன்றன, கீல்கள் ஆடின, உத்தரங்கள் கிரீச்சிட்டன. திருகாணிகள் துருத்தி வெளிவந்தன. நீண்ட காலத்துக்கு முன்பு தேடப்பட்டு தொலைந்துவிட்டதாகக் கருதப்பட்ட பொருள்கள் பொத்துக்கொண்டு வந்து விழுந்தன. எங்கும் பரபரப்பு, கொந்தளிப்பு. இவை மெல்குயாடெஸின் அந்த இரும்புத் துண்டுகள் செய்த மாயம். “பண்டங்களுக்கும் அவற்றுக்கே உரிய உயிர் உண்டு. அவற்றின் ஆன்மாக்களைத் தட்டி விழிக்கச் செய்ய வேண்டும். அவ்வளவுதான்” என்று அந்த நாடோடி கூறினான். அவன் மொழி கரடுமுரடாக, அழுத்த உச்சரிப்புடன் இருந்தது. ஹோஸே ஆர்காடியோ புயெந்தியாவின் கட்டற்ற கற்பனை எப்போதுமே இயற்கை அறிவுக்கும் அப்பால் செல்லும்; அற்புதங்கள், மாயாஜாலத்தைத் தாண்டி விரியும். இந்தப் பயனற்ற கண்டுபிடிப்பைப் பயன்படுத்திப் பூமியின் அடி ஆழத்திலிருந்து தங்கத்தை ஈர்த்துப் பிரித்தெடுக்க முடியுமென அவர் நினைத்தார். மெல்குயாடெஸ் நேர்மையான மனிதன். “அதற்கெல்லாம் இது பயன்படாது” என்று எச்சரித்தான். ஆனால் அந்தக்காலத்தில் ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா நாடோடிகளின் நேர்மையில் நம்பிக்கை இல்லாதவராயிருந்தார். எனவே தன்னுடைய கோவேறு கழுதையையும் இரண்டு வெள்ளாடுகளையும் தந்து இரண்டு காந்தக் கட்டிகளை வாங்கிக் கொண்டார். அவர்களுடைய எளிய வீட்டுவசதிகளை ஓரளவு அதிகரிக்க இந்தப் பிராணிகளை நம்பியிருந்த அவருடைய மனைவி உர்சுலா ஈகுவாரோன் அறிவுரை வீணாயிற்று. “வெகுவிரைவில் நம்மிடம் ஏராளமான தங்கம் இருக்கும். வீட்டுத் தரைகளைத் தங்கத்தால் தளவரிசை செய்வோம். அதற்கு மேலும் தங்கம் இருக்கும்” என்று அவர் பதிலளித்தார். தன் கருத்தை மெய்ப்பிக்கப் பல மாதங்கள் அவர் கடுமையாக உழைத்தார். அப்பகுதியில் ஒவ்வோர் அங்குலத்தையும் ஆராய்ந்தார். ஆற்றுப்படுகையையும் விட்டுவைக்கவில்லை. அந்த இரு காந்தக் கட்டிகளையும் இழுத்துக்கொண்டு அலைந்தார்; அந்த நாடோடியின் சொற்களை மந்திரம் போல் உரக்க உச்சரித்தவண்ணம் திரிந்தார். இவ்வாறு தேடித் தவித்ததில் கிடைத்த ஒரே வெற்றி, பதினைந்தாம் நூற்றாண்டையக் கவசம் மட்டுமே; பற்றவைக்கப்பட்ட அதன் துண்டுகள் துருவேறி ஒட்டிக் கொண்டிருந்தன. அதனுள்ளே ஓட்டை. அது விளைவித்த அதிர் வலை. அந்த ஓட்டைக்குள் ஒரு குடுக்கை. ஹோஸே ஆர்காடியோ புயெந்தியாவும் அவருடன் இந்தத் தனிநோக்குப் பயணத்தில் பங்கு கொண்ட நால்வரும் அந்தக் கவசத்தை மிகச் சிரமப்பட்டுப் பிரித்தெடுத்த னர்; சுண்ணக உப்புப்படிவத்தில் தோய்ந்த ஓர் எலும்புக்கூடு இருந்ததைக் கண்டனர். அத்துடன் ஒரு செப்புப் பேழை. அதன் கழுத்தைச் சுற்றி ஒரு பெண்ணின் முடி.

மார்ச் மாதத்தில் நாடோடிகள் திரும்பவும் வந்தனர். இந்தத் தடவை ஒரு தொலைநோக்காடி, அத்துடன் ஒரு உருப்பெருக்கி ஆகியவற்றைக் கொண்டுவந்தனர். அந்த உருப்பெருக்கி ஒரு தட்டு அளவில் இருந்தது. ஆம்ஸ்டர்டாம் யூதர்கள் அண்மையில் கண்டுபிடித்தவை எனக் காட்டினர். கிராமத்தின் ஒரு கோடியில் ஒரு நாடோடிப் பெண்ணை நிற்க வைத்து அந்தத் தொலைநோக்காடியைக் கூடாரத்தின் வாயிலில் நிறுத்தினர். ஐந்து வெள்ளி நாணயங்கள் தந்து தொலை நோக்காடி வழியாக அந்த நாடோடிப் பெண்ணைத் தொட்டுவிடும் தூரத்தில் காணலாம் என்றனர். “அறிவியல், தூரத்தை அகற்றிவிட்டது” என்று மெல் குயாடெஸ் அறிவித் தான். “உலகின் எந்த இடத்திலும் என்ன நடக்கிறது என்பதை வீட்டில் இருந்தவாறே காண இயலும், விரைவில்.” நண்பகல் வேளை. வெயில் தகித்தது. அந்தப் பிரமாண்டமான உருப்பெருக்கியை விளக்கிக்காட்ட அதுவே சரியான நேரம். தெருவின் நடுவில் உலர்ந்த புல் குவிக்கப்பட்டது. சூரியக் கதிர்கள் அந்த உருப் பெருக்கியின் ஊடாகச் செலுத்தப்பட்டன; நெருப்புப்பற்றியது. காந்தங்கள் தந்த ஏமாற்றத்திலிருந்து இன்னும் மீளாதிருந்த ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா இந்தக் கண்டுபிடிப்பை ஒரு போர்க்கருவியாகப் பயன்படுத்த எண்ணினார். மறுபடியும் மெல்குயாடெஸ் எச்சரித்தான். அவர் ஏற்கவில்லை. இரு காந்தக்கட்டிகளுடன் மூன்று தங்க நாணயங்களைத் தந்து மாற்றாக அந்த உருப்பெருக்கியைப் பெற்றுக்கொண்டார். திகைப்பும் அச்சமுமாக உர்சுலா அழுதார். அவருடைய தந்தை வாழ்நாள் முழுதும் வறுமையில் உழன்று சேமித்துவைத்த நாணயப் பேழையிலிருந்த தங்கப் பணம் அது. அதைத் தன் படுக்கைக்குக் கீழ் அவர் புதைத்துவைத்திருந்தார். தக்க தருணத்தில் அதைப் பயன்படுத்த நம்பியிருந்தார். அவருக்கு ஆறுதல் கூற ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா முயலவில்லை. ஒரு விஞ்ஞானியின் மறுதலித்தல் உணர்வுடன் திறமார்ந்த பரிசோதனைகளில் முற்றாக மூழ்கிப்போயிருந்தார்; தன் உயிரைப் பற்றிக்கூட அவர் கவலைப்படவில்லை. எதிரியின் துருப்புகள்மீது அந்தக் கண்ணாடி எத்தகைய விளைவுகளைத் தோற்றுவிக்கும் என்பதை விளக்கும் முயற்சியில் சூரியக் கதிர்கள் தன்மீது குவிந்து பாயச் செய்தார்; பட்ட சூடுகளும் அவை ஏற்படுத்திய புண்களும் ஆற நெடுங்காலம் பிடித்தது. அவருடைய மனைவி இத்தகைய ஆபத்தான கண்டுபிடிப்புகளைக் கடுமையாக எதிர்த்தார். அதைப் பொருட்படுத்தாது ஒரு சமயம் வீட்டையே எரியூட்ட அவர் தயாரானார். தன்னுடைய அறையில் அவர் பல மணிநேரம் கழித்தார். அவருடைய நவீனக் கருவியின் போர்த்திறம் சார்ந்த வாய்ப்புகளைப் பற்றியே கணக்குப்போட்டுக் கொண்டிருந்தார். ஒரு வழியாக ஒரு கையேட்டை உருவாக்கினார். அதில் அக்கருவி பற்றித் தெளிவான விளக்கக் குறிப்புகள் இருந்தன. அதை அரசுக்கு அனுப்பினார்; பல பக்கங்களைக் கொண்ட அக்கையேட்டில் தன்னுடைய பரிசோதனைகள் பற்றிய விளக்கங்கள், வரைபடங்கள் முதலியவற்றைத் தந்திருந்தார்; அதைக் கொண்டுசெல்ல ஒரு தூதரையும் ஏற்பாடு செய்தார். அவருடைய செய்தியுடன் புறப்பட்ட அந்த நபர் மலைகளைக் கடக்க வேண்டியிருந்தது; ஆழந்தெரியாத சதுப்பு நிலங்கள், சேறு-சகதிகள், சீறிப்பாயும் ஆறுகள் எனப் பல தடைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. வேதனை ஒருபுறம். நோய் ஒருபுறம், கொடிய விலங்குகளின் தாக்குதல் ஒருபுறம் எனப் பலவிதத் துயரங்களுக்குப் பிறகு அஞ்சல்களை எடுத்துச் செல்லும் கோவேறு கழுதைகள் பயன்படுத்தும் பாதையைக் கண்டு சேர்ந்தார். அந்தக் காலத்தில் தலைநகருக்குச் செல்வ தென்பது பெரும்பாலும் இயலாது எனக் கருதப்பட்டது. அத்தகைய காலத்தில் ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா அத்தகைய பயணத்தை மேற்கொள்ள உறுதிபூண்டிருந்ததையும் அரசாங்கத்தின் ஆணை கிடைக்கப் பெற்றவுடன் தன் கண்டு பிடிப்பு பற்றி ராணுவ அதிகாரிகள் முன்பு நேரடிச் சோதனைகளைச் செய்துகாட்டி நிரூபிக்கத் தயார் என்பதையும் சிக்கலான இந்தச் சூரியக் கதிர் யுத்தக் கலையில் அந்த அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்கத் தன்னால் முடியுமென்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். காத்திருந்து சோர்ந்துபோன நிலையில் தன்னுடைய திட்டம் தோல்வி கண்டதை மெல்குயாடெஸிடம் சொல்லி அழுதார் அவர். தன்னுடைய நேர்மையை நம்பத்தகுந்த விதத்தில் நிரூபிக்கும் வகையில் உருப்பெருக்கிக் கண்ணாடியைப் பெற்றுக்கொண்டு அந்தப் பொன் நாணயங்களை மெல்குயாடெஸ் திருப்பித் தந்தான். அத்துடன் சில போர்ச்சுக்கீசிய நில வரைபடங்களையும் திசைகாட்டும் பல கருவிகளையும் தந்தான். மாங்ஹெர்மான் ஆய்வுகள் குறித்துச் சுருக்கக் குறிப்பொன்றைத் தன் கைப்பட எழுதித் தந்து அதைக் கொண்டு உயர்வுமானி, திசைக்கருவி, கோணமானி ஆகியவற்றைப் பயன்படுத்துவது பற்றி அவர் தெரிந்துகொள்ள முடியுமென்றும் கூறினான். மழைக்காலம் பல மாதங்களுக்கு நீடித்தது. ஹோஸே ஆர்காடியோ வீட்டின் பின்புறம் தான் கட்டியிருந்த சிறியதொரு அறையிலேயே இருந்தார். தன்னுடைய பரிசோதனைகளுக்கு யாராலும் தொந்தரவு வரக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். குடும்பத்துக்கான தன் கடமைகளை முற்றாகத் துறந்துவிட்டிருந்தார். இரவுகளில் நட்சத்திரங்களை ஆராய்வதிலும் நடுப்பகல் பற்றித் துல்லியமாக அறியும் முயற்சியிலும் மூழ்கியிருந்தார். விளைவாக வெயில் வெப்பத்தாக்கு நோய்க்கு ஆளானார் எனலாம். தன்னுடைய கருவிகளைப் பயன்படுத்துவதிலும் திறமையாகக் கையாள்வதிலும் நிபுணத்துவம் பெற்றபோது அவர் மனத்தில் ஓர் அண்டவெளிக் கருத்து உருவாயிற்று. அறியப்படாத கடல்கள், மக்கள் காலடிபடாத நிலங்கள் ஆகியவற்றுக்குத் தம் ஆய்வறையில் இருந்தபடியே செல்லவும் சுடர்விடும் உயிரினங்களுடன் தொடர்புகொள்ளவும் அவரால் முடிந்தது. அந்தக் காலத்தில்தான் அவர் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் பழக்கத்தைப் பெற்றார். வீட்டிற்குள் நடப்பார். ஆனால் மற்றவர்கள் அங்கே புழங்குவதே அவருக்குத் தெரியாது. உர்சுலாவும் குழந்தைகளும் தோட்டத்தில் முதுகொடிய உழைத்து கூவைக் கிழங்கு, கொடிவள்ளி, கத்தரி பயிரிட்டுக் கொண்டிருந்தபோது அவர் தம் போக்கில் உலவிக்கொண்டிருந்தார். திடீரென்று பரபரப்பு தடைபட்டது; அந்த இடத்தை ஒரு வகை ஈர்ப்பு பற்றிக்கொண்டது. மாயத்தால் மயக்கப்பட்டவர்போலப் பல நாட்களைக் கழித்தார். அச்ச மூட்டும் ஊகங்களை மெல்லிய குரலில் தமக்குத் தாமே தொடர்ந்து உச்சரித்துக்கொண்டிருந்தார். இந்த ஊகங்கள் பிறப்பது அவரிடம்தான் என்பது அவருக்குத் தெரியவில்லை. இறுதியில் ஒரு டிசம்பர் செவ்வாய்க் கிழமை நண்பகல் உணவுவேளையின்போது தன் மனப்பாரத்தை முழுவதுமாக இறக்கிவைத்தார். அந்த வீறார்ந்த, மாண்புறு வெளிப்படுத்தலை அவருடைய குழந்தைகள் அவருடைய வாழ்நாள் முழுதும் நினைவில் கொண்டிருப்பர். அவருடைய நீடித்த ஓய்வுறா விழிப்பின் பாதிப்பு அவருடைய கற்பனையின் சீற்றம் அந்த வேளையில் வெளிப்பட்டது:

“இந்தப் பூமி உருண்டை, ஆரஞ்சைப் போல.”

உர்சுலா பொறுமை இழந்தார். “பித்துப் பிடித்து அலைவதானால் அந்த வெறி உங்களுக்குள்ளேயே இருக்கட்டும். உங்கள் நாடோடிக் கருத்துகளைப் பிள்ளைகள்மீது திணிக்காதீர்கள்” என்று இறைந்தார். ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா அமைதியாயிருந்தார். அவருடைய மனைவியின் கசப்பும் வெறித்த நிலையும் கண்டு அவர் அச்சப்படவில்லை. கோபவெறியில் உர்சுலா அந்த உயர்வுமானியைத் தரையில் ஓங்கி அடித்து நொறுக்கினார். மற்றொரு மானியை அவர் உருவாக்கிக்கொண்டார். கிராமத்து ஆண்களைத் தன் சிறிய அறைக்கு அழைத்துவந்தார். தன் புனைவுகளை விளக்கிக்காட்டினார். அவர்களில் யாருக்கும் அது புரியவில்லை; கிழக்கு நோக்கி ஒருவர் பயணத்தைத் தொடங்கினால் முடிவில் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வர இயலும் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா அறிவிழந்துவிட்டார் என்று ஊரே நம்பியது. அப்போது மெல்குயாடெஸ் திரும்பவும் வந்து நிலைமையைச் சீர்செய்தான். ஏற்கனவே நடை முறையில் நிரூபிக்கப்பட்ட ஒன்றை வெறும் வானியல் ஊகத்திலிருந்து ஒரு புனைவாக அறிவித்த அந்த மனிதனின் அறிவாற்றலை அவன் ஊரறியப் புகழ்ந்தான். அதுவரை மகொந்தோ மக்களுக்கு அந்தக் கருத்தாக்கம் தெரியாது. தன்னுடைய பாராட்டுக்குச் சான்றாக அவருக்கு ஒரு பரிசு தந்தான். அந்தக் கிராமத்தின் எதிர்கால வாழ்வில் அது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி யது: அது ஒரு ரசவாத ஆய்வுக் கூடம். 

அந்த இடை ஆண்டுகள் மெல்குயாடெஸின் தோற்றத்தில் விரைவான மாறுதல்களைக் கொண்டுவந்தன. இப்போது அவன் முதுமை தெரிந்தது. முதன்முறையாக, பின்பு அடுத்தடுத்து அவன் அந்தக் கிராமத்துக்கு வந்தபோது அவனுக்கு ஹோஸே ஆர்காடியோவின் வயது தான். ஆனால் குதிரையின் காதுகளைப் பிடித்து நிறுத்துமளவுக்கு அவர் உடலில் அசாதாரண வலு நீடித்தபோது அந்த நாடோடி, களைத்து, ஏதோ ஒரு நோயின் பிடியில் நொறுங்கிப்போயிருந்தான். அவன் உலகைச் சுற்றி எண்ணிலடங்காப் பயணங்களை மேற்கொண்டபோது தொற்றிய பல்கூட்டான, அபூர்வ நோய்களின் விளைவு அது. அந்த ஆய்வுக் கூடத்தை அமைக்க ஹோஸே ஆர்காடியோ புயெந்தியாவுக்கு உதவியபோது சாவு எவ்வாறு தன்னை எங்கும் தொடர்ந்து வந்தது என்பதையும் கால்சராயைத் தொட்ட அது இறுதிப்பிடியை இறுக்குவதை இன்னும் தீர்மானிக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டான். மனித குலத்தைத் தாக்கிய எல்லாவிதக் கொடிய நோய்களிலிருந்தும் இடர்களிலிருந்தும் தப்பிப் பிழைத்துள்ளதை விவரித்தான். பெர்சியாவில் கொடிய தோல் வெடிப்பு நோயிலிருந்தும் மலாய்த் தீவுக் கடலில் கரப்பான் நோயிலிருந்தும் அலெக்ஸாண்டிரியாவில் தொழு நோயிலிருந்தும் ஜப்பானில் தவிட்டான்நோயிலிருந்தும் மடகாஸ்கரில் அக்குள் நெறிக் கட்டிலிருந்தும் சிசிலியில் நில நடுக்கம் மற்றும் மகெல்லன் கடற்காலில் கப்பல் அழிபாட்டிலிருந்தும் தப்பிப் பிழைத்ததை விவரித்தான். அவன் ஓர் அதிசயப் பிறவி. நோஸ்ட்ராமஸ் அளித்த முற்குறிப்புகளுக்கான உயிர்நிலை அவனிடம் இருப்பதாகப் பேசப்பட்டது. ஆனால் இன்று அவன் சோர்வுற்று வருந்தி நிற்கிறான். அவனைச் சுற்றி நிற்பது சோக வளையம். அவன் பார்வையில் ஓர் ஆசியத்தன்மை இருந்தது; ஒன்றின் மறுபுறத்தில் உள்ளதை அறியும் ஆற்றல் அது. பெரியதொரு கருப்புத் தொப்பி அணிந்திருந்தான். அது பரந்து விரிந்த இறக்கைகளைக் கொண்ட அண்டங்காக்கையைப் போலத் தோன்றியது. அவன் அணிந்திருந்த கையில்லா அரைச் சட்டை பூம்பட்டால் ஆனது; அதனுடைய நூறாண்டுகள் ஆன பசுங்களிம்புப் படலம். அளக்கவியலாத அறிவும் மறைவடக்க வீச்சும் இருந்தும் அவனிடம் மனிதநேயம் இருந்தது; அது அன்றாட வாழ்க்கையின் சிறு சிக்கல்களிலும் அவனை ஈடுபாடுகொள்ளவைத்தது. முதுமைக்குரிய நோய்களைப் பற்றிக் குறைபடும் அவன், பொருளாதாரரீதியில் சிறு சங்கடங்களையும் உணர்ந்தவன். நெடுநாள் முன்னரே வாய்விட்டுச் சிரிப்பதை நிறுத்திவிட்டிருந்தான். ஏனெனில் ஊட்டச்சத்துக் குறைவால் ஏற்பட்ட பல் எதிர்வீக்க நோயால் பற்களை இழந்திருந்தான். திணறவைக்கும் அந்த நண்பகலில் தன் ரகசியங்களை அந்த நாடோடி வெளிப்படுத்தியபோது, மாபெரும் நட்பின் தொடக்கமாக ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா உறுதிபட உணர்ந்தார். அவனுடைய விசித்திரக் கதைகள் குழந்தைகளை வியப்பில் ஆழ்த்தின. அவ்ரேலியானோவுக்கு அப்போது ஒன்பது வயதுக்கு மேலிருக்காது. அந்தப் பிற்பகலில் அவனைக் கண்டதும் ஜன்னலிலிருந்து தகதகத்த ஒளி வந்ததும் அவனுடைய ஆழ்ந்த சாரீரமும் கற்பனையின் அடர்த்தி மிக்க கதைகளைக் கேட்டதும் வாழ்நாள் முழுவதும் அவர் நினைவில் நின்றன. அந்த அறை வெப்பத்தில் அவனுடைய கன்னப் பொட்டில் வழிந்த மசகையும் அவர் மறக்கவில்லை. அவருடைய அண்ணன் ஹோஸே ஆர்காடியோ, அந்த விந்தை மிகு படிவத்தைத் தன் வாரிசுகள் அனை வருக்கும் தொடர்ந்து சொல்லி வந்தார். ஆனால் உர்சுலாவுக்கு அந்த வருகை, ஒரு கெட்ட நினைவு. ஏனெனில் அந்த அறைக்குள் அவர் நுழைந்த போதுதான் கவனக் குறைவால் மெல்குயாடெஸ், பாதரசக் குடுவையை உடைத்துவிட்டிருந்தான். 

“பிசாசு நெடி” என்று உர்சுலா கூறினார். 

“இல்லவே இல்லை” என்று மெல்குயாடெஸ் திருத்தினான். “பிசாசு, கந்தகக் கூறுகளைக் கொண்டுள்ளது. இது கொஞ்சம் அரித்துத் தின்னவல்ல பதங்கம்.” 

அறிவுறுத்திப் பேசுவதில் நாட்டமுள்ள அவன் சிவப்பு நிறக் கனிமத்தில் பேய்த்தனமிக்க கூறுகள் இருப்பதைப் பற்றிப் புலமை சான்ற விளக்கமளித்தான். ஆனால் அதை உர்சுலா கண்டுகொள்ளவில்லை. அந்த இடத்திலிருந்து குழந்தைகளைக் கிளப்பிப் பிரார்த்தனைக்கு இட்டுச் சென்றார். அவர் மனதில் அந்தச் சகிக்க முடியாத நாற்றம் பற்றிய நினைவு என்றும் இருக்கும்; மெல்குயாடெஸ் பற்றிய நினைவுடன் அது பிணைந்திருந்தது. 

அது மிகச் சாதாரணமான ஆய்வுக்கூடம். பானைகள், பெய் குழல்கள், வாலைகள், வடிகட்டிகள், சல்லடைகள் - ஒரு பழங்காலத் தண்ணீர்க்குழாய், நீண்ட, மெல்லிய கழுத்துடன் கூடிய ஒரு கொடுகலம், ரசவாதிகள் பயன்படுத்தும் பொய்க்கல், அதன் மறுவடிவம் - வேறுசில கருவிகளையும் கொண்டிருந்தது. பழங்கால வடிகலம் அவற்றில் ஒன்று. யூதர்களின் மேரி மூன்றடுக்கு வாலை ஒன்றை வைத்திருந்தாள் என்பது கதை. அதன் நவீன விவரிப்பை ஒட்டி அந்த நாடோடிகள் வடிவமைத்த கருவி அது. இவற்றுடன் ஏழுவகை உலோகங்களின் மாதிரிக் கூறுகளையும் மெல்குயாடெஸ் விட்டுச் சென்றிருந்தான்; ஏழு கிரகங்களுக்குப் பொருந்திவருவன போல அவை இருந்தன. பொன்னின் அளவை இரட்டிப்பாக்குவது குறித்து மோசஸ், ஜோஸிமஸ் தந்த கட்டளை விதிகள், பேருரையில் கண்டவாறு புரிந்துகொண்டு சித்துமணிக்கல்லை உருவாக்க முனைபவர்களுக்கு உதவும் குறிப்புகள், வரைபடங்கள் ஆகியவற்றையும் அவன் தந்திருந்தான். பொன்னின் அளவை இரட்டிப்பாக்கும் குறியீடுகள் மிக எளிமையாக இருந்தன. புயெந்தியாவின் ஆசையைத் தூண்டியது. வாரக்கணக்கில் அவர் உர்சுலாவுடன் பேசினார்; உர்சுலா புதைத்துவைத்திருந்த பொற்காசுகளைத் தோண்டி எடுத்து பாதரசம் கொண்டு அவற்றைப் பலமடங்கு பெருக்கிவிடுவதைப் பற்றியே பேசினார். பிறருடைய அறிவுறுத்தல்களை ஏற்காது பிடிவாதமாக இருக்கும் கணவனின் வற்புறுத்தலுக்கு இணங்க வேண்டியவரானார். பிறகு மூன்று ஸ்பானிய பொற்காசுகளைக் கொதிகலத்தில் போட்டார். செப்பு, தாளகம், கந்தகம், ஈயம் ஆகியவற்றை உருக்கிக் கலந்தார்; விளக்கெண்ணெய் நிறைந்த பானையில் இட்டுக் கொதிக்கவைத்தார். சகிக்க இயலாத நாற்றமெடுத்த சாதாரண கருவெல்லப் பாகுபோன்ற கலவை தான் கிடைத்தது. மதிப்பு வாய்ந்த பொன்கிடைக்கவில்லை. வெறுத்துப்போன நிலையில் அந்த ஏழு கிரகத்து உலோகங்களையும் சேர்த்து உருக்கி வடிகட்டிப் பார்த்தார். மாயத்திறம் வாய்ந்த பாதரசத்தையும் சைப்பிரஸ் நாட்டுக் கந்தகத்தையும் கலந்தார். முள்ளங்கி எண்ணெய் கிடைக்காத நிலையில் ஆண்பன்றிக் கொழுப்பையும் இட்டுக் கிளறினார். உர்சுலாவின் வழிவழிச் சொத்து வறுத்தெடுத்த பன்றிக் கொழுப்புப் பட்டையாகப் பானையின் அடியில் வசமாக ஒட்டிக்கொண்டிருந்தது. 

மீண்டும் நாடோடிகள் வந்தபோது அவர்களுக் கெதிராக உர்சுலா அந்த ஊரையே திருப்பிவிட்டார். ஆனால் அச்சத்தைவிட ஆவல் பெரிது. அந்தத்தடவை நாடோடிகள் எல்லா வித இசைக் கருவிகளையும் கொண்டு பெரும் இரைச்சல் எழுப்பியவாறு வலம் வந்தனர். கூவி விற்பனை செய்யும் ஒருவன், மிக உன்னதமான நாசியன்செனிஸ் கண்டுபிடிப்பைக் காட்சியில் வைப்பதாக அறிவித்தான். ஒரு சதம் செலுத்தி ஒவ்வொருவராகக் கூடாரத்துக்குள் சென்றனர். அவர்கள் கண்டது இளமை ததும்பும் மெல்குயாடெஸை. அவன் பூரண நலம் பெற்றிருந்தான். முகத்தில் சுருக்கங்கள் இல்லை. புதிய பளபளக்கும் பல்வரிசை. பல்நோயால் ஈறுகள் பாதிக்கப்பட்டு, சுருக்கம் விழுந்து ஒட்டிய கன்னங்கள் வாடிய உதடுகளுடன் அவன் இருந்ததை நினைவுபடுத்திக்கொண்டவர்கள் அந்த நாடோடியின் அதீத சக்தி இறுதி நிரூபணமாக முன்நிற்பதைக் கண்டு அச்சத்தால் நடுங்கினர். மெல்குயாடெஸ் தன் ஈறுகளில் பதிந்திருந்த பல்வரிசையை அப்படியே எடுத்து ஒரு கணம் அனைவருக்கும் காட்டினான். அந்த ஒரு கணத்தில் அவன் மறுபடியும் பல காலத்துக்குமுன் முதுமைத் தளர்ச்சியும் மோசமான உடல் நிலையுமாக இருந்த நிலைக்குத் திரும்பினான். மீண்டும் பல்வரிசையைப் பொருத்தினான், முறுவலித்தான். இளமை மீண்டது. இதையெல்லாம் கண்டவர்களின் அச்சம் பீதியாக மாறியது. மெல்குயாடெஸின் அறிவு, மட்டு மீறிய நிலையைத் தொட்டுவிட்டதாக புயெந்தியாவே கருதினார். ஆயினும் பொய்ப்பல் வரிசை எவ்வாறு செயல்படுகிறது என்பதை அந்த நாடோடி அவருக்கு மட்டும் விளக்கிச் சொன்னபோது மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தார். அந்த நிகழ்வு மிகச் சாதாரணமானது. அதே சமயத்தில் பேராற்றல் வாய்ந்தது, வியப்பூட்டக் கூடியது. விளைவாக ரசவாதச் சோதனை முயற்சிகளில் அவருக்கிருந்த ஆர்வம் ஓரிரவில் காணாமற் போனது. அவர் மன நிலையில் மாற்றம், எரிச்சல், வெறுப்பு நேரத்தில் உண்பதையும் தவிர்த்தார். வீட்டுக்குள்ளேயே சுற்றிவந்தார். “நம்புதற்கு முடியாத பலவும் உலகத்தில் நிகழ்கின்றன” என்று உர்சுலாவிடம் கூறினார். “ஆற்றுக்கு மறுபக்கத்தில் பலவகையான வியத்தகு கருவிகள். ஆனால் நாமோ கழுதைகளாகத் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.” மகொந்தோ உருவான நாளிலிருந்து அவரை அறிந்தவர்கள், மெல்குயாடெஸின் பாதிப்பால் அவர் எந்த அளவு மாறிவிட்டார் என்பதை உணர்ந்துதிடுக்குற்றனர். 

தொடக்கத்தில் புயெந்தியா துடிப்பான குடும்பத் தலைவராகவே இருந்தார். பயிர்செய்வது பற்றி, குழந்தைகளை, வீட்டு விலங்குகளை வளர்ப்பது பற்றி அறிவுறுத்துவது, சமுதாய நலனுக்காக எல்லோருடனும் இணைந்து செயல்படுவது, உடல் உழைப்பிலும் பங்குகொள்வது என்றே இருந்தார். தொடக்க காலத்திலேயே கிராமத்தில் அவருடைய வீடுதான் சிறந்தது. அதைப் பார்த்துத் தான் அதே போன்ற வடிவத்தில் மற்றவர்கள் கட்டிக்கொண்டனர். சிறிய நல்ல வெளிச்சமான அமர்வுக் கூடம், உணவருந்துதலுக்கு ஒட்டுத்தள வடிவிலான அறை, அதில் களிப் பூட்டும் வண்ணமலர்கள், இரண்டு படுக்கை அறைகள், சுற்றுக் கட்டு வெளியிடம், அகன்ற இலைகளைக் கொண்ட பிரமாண்டமான செந்த விட்டு மரம், நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டம், ஒரு தொழுவம், அங்கு அமைதியாக வாழும் ஆடுகள், பன்றிகள், கோழிகள். அவருடைய வீட்டில் மட்டுல்ல. அந்தக் குடியிருப்பு முழுவதிலும் தடை செய்யப்பட்டவை சண்டைச் சேவல்கள்தாம். 

உர்சுலா உழைப்பாற்றல் மிக்கவர். புயெந்தியாவின் உழைப்புக்கு ஈடானது அது. சுறுசுறுப்பும் மனவுறுதியும் கொண்டவர். சிற்றளவான தோற்றம், ஆனால் கடுமுனைப்பு உடையவர். அவர் வாழ்க்கையில் ஓய்வாகப் பாடி யாரும் கேட்டதில்லை. உழைப்பு, அதிகாலை முதல் நள்ளிரவுவரை உழைப்பு. பாவாடை கஞ்சிபோடப்பட்டிருக்கும். அதன் மெல்லிய மொற மொறப்பு அவருடைய நடமாட்டத்தை உணர்த்தும். மண் தரை. ஆனால், உறுதிமிக்கது. மண்சுவர்கள் வெள்ளை அடிக்கப்படுவதில்லை. மேசை, நாற்காலி போன்ற அறைகலன்கள் மரத்தால் ஆனவை; அவர்களே அவற்றைச் செய்துகொண்டனர். எளிமையைப் பறைசாற்றும் அவை எப்போதும் துப்புரவாக இருந்தன. துணிமணிகளைப் பழைய அடுக்குப் பெட்டிகளில் வைத்திருந்தனர். அவற்றிலிருந்து துளசி மணம் வரும். அந்த ஊரிலேயே செயலாக்கத் திறன் மிக்கவர் புயெந்தியாதான். வீடுகளை அவர் அமைத்திருந்த விதம் அலாதியானது; வீட்டை ஒட்டிய ஆற்றிலிருந்து சிறிதே முயன்று தண்ணீர் எடுத்துக்கொள்ள முடியும். தெருக்களை அவர் திட்டமிட்டு அமைத்திருந்தார். கோடைப் பருவத்தில் அதிகமாக வெயில் எரிக்காத வண்ணம் அவை உருவாக்கப்பட்டிருந்தன. அதில்கூட ஒருவித சமத்துவம். சில ஆண்டுகளில் மகெந்தோ சீரான வளர்ச்சி கண்டது. எண்ணிக்கையில் முன்னூறைத் தொட்ட அந்த ஊர் மக்கள் கடும் உழைப்பாளிகள் எனப் பெயர் பெற்றனர். உண்மையில் அது மகிழ்ச்சி பொங்கிய கிராமம். மக்களின் வயது பெரும்பாலும் முப்பதுக்குக் கீழ்; மரணம் அவர்களைத் தொடவில்லை. 

உருவான நாளிலிருந்தே அந்த ஊர்ப் பகுதியில் புயெந்தியா வலைப் பொறிகளையும் கூடுகளையும் அமைத்தார். விரைவில் அவர் வீட்டில் மட்டுமின்றிக் கிராமத்தி லிருந்த எல்லா வீடுகளிலும் மைனாக்கள், பாடும் பறவையினங்கள், பஞ்சுவிட்டான்கள் வளர்ந்து இனிமை சேர்த்தன. பலவிதப் பறவைகள் எழுப்பிய ஒலி சமயங்களில் அமைதியைக் குலைத்தது. தேன்மெழுகால் உர்சுலா காதுகளை அடைத்துக் கொள்வார். யதார்த்த உலகைப் பற்றிய உணர்வை இழக்கக் கூடாதல்லவா? முதன் முதலில் மெல்குயாடெஸ் இனத்தவர்கள் தலைவலிக்கு மருந்து எனக் கண்ணாடி உருண்டை வடிவத்தில் ஒன்றைக் கொண்டுவந்தபோது அந்த ஊர் அரைத் தூக்கநிலையில் இருந்த சதுப்பு நிலமாக இருந்ததைக் கண்டனர். ஆனால் இப்போதோ அந்தப் பறவைகளின் பாட்டொலிதான் தமக்கு வழிகாட்டியதாக ஒப்புக்கொண்டனர். 

விரைவில் அத்தகைய சமூகத் தன்னூக்க உணர்வு மறைந்தது. காந்தப் பட்டைகள், வானியல் கணக்கீடுகள், ரசவாத மாற்றம் பற்றிய கனவுகள், உலக அதிசயங்களைக் கண்டுவிடும் வேட்கை ஆகியன அந்த உணர்வை இழுத்துச் சென்றுவிட்டன. சுத்தமும் சுறுசுறுப்புமாக இருந்த புயெந்தியா தோற்றத்தில் சோம்பேறியாக மாறிப்போனார்; உடுத்துவது, தாடி புதராக மாறிப்போவது பற்றி அவர் கவலைப்படவில்லை. சமையல் கத்தியைக் கொண்டு பெரும் பிரயாசையுடன் தாடியைச் சீர்செய்ய உர்சுலா முயன்றார். விசித்திரமான ஏதோ ஒரு மந்திரத்தால் புயெந்தியா கட்டுண்டிருந்தார் எனச் சிலர் நினைத்தனர். அவருடைய பித்து பற்றி உணர்ந்திருந்தவர்கள்கூடத் தத்தமது வேலையையும் குடும்பத்தையும் விட்டு அவர்பின் வரவே செய்தனர். தன்னிடமிருந்த கருவிகளை அவர்கள்முன்வைத்தார். நிலத்தைச் சீர்செய்ய வேண்டுமென்றார். மகொந்தோ வெளிஉலகின் மாபெரும் கண்டுபிடிப்புகளை அறிய வேண்டும், அதற்கான வழிகளைக் காண வேண்டும் என்றார். மறுபேச்சின்றி அவர்கள் அவருக்குப் பின்னால் திரண்டனர். 

அந்தப் பகுதியின் நிலஅமைப்பு பற்றி அறியாதவராகவே புயெந்தியா இருந்தார். கிழக்கே ஒரு மலைத் தொடர் - ஊடுருவ இயலாத மலைகள் - அதற்கப்பால் மறுபுறத்தில் மிகப் பழைய ரியோஹச்சா நகரம் இருக்கிறது என்பது அவருக்குத் தெரியும். அங்குதான் சர் பிரான்சிஸ் டிரேக், பெரிய துப்பாக்கிகளுடன் முதலை வேட்டைக்குச் சென்றார் என்றும் கொல்லப்பட்ட முதலைகளை நன்னிலைப்படுத்தி உலர்ந்த புற்களைத் திணித்து எலிஸபெத் ராணிக்குக் கொண்டு சென்றார் என்றும் அவருடைய பாட்டனார் அவ்ரேலியானோ புயெந்தியா சொல்லியிருந்தார். அவருடைய இளமைக் காலத்தில் அவரும் அவருடைய ஆட்களும் தத்தமது மனைவிமார்கள், குழந்தைகள், விலங்குகள் மற்றும் எல்லாவித வீட்டு உபகரணங்களுடன் மலைகளைக் கடந்து சென்றிருக்கிறார்கள். கடல் உள்ள இடத்தைத் தேடுவதே நோக்கம். இருபத்தாறு மாதத் தேடலுக்குப் பின்பு அவர்கள் அந்த நீண்ட பயணத்தைக் கைவிட்டனர். மகெந்தோவை நிறுவினர்; இனிப் புறப்பட்ட இடத்துக்குத் திரும்பிச் செல்ல வேண்டியதில்லை. எனவே அந்தப் பாதைமீது அவர் ஆர்வம் கொள்ளவில்லை; அப்பாதை, சென்ற காலத்துக்கு இட்டுச் செல்வது. தெற்கில் சதுப்பு நிலங்கள். தாவரக் கசடுகள் போர்த்திய ஈரநிலம். முழுதும் முடிவற்ற சதுப்பு நிலப்பரப்பு. அப்படித்தான் அந்த நாடோடிகள் சொல்லியிருந்தனர். மேற்கில் இந்தப் பெரிய சதுப்பு எல்லையற்ற நீர் நிலையைத் தொட்டுக் கலந்தது. அங்கு மெல்லிய தோல் போர்த்த டால்பின்கள், கடற்கன்னிகள் இருந்தன. தலையும் உடற்பகுதியும் பெண்ணின் உருவத்தில். அசாதாரண மார்பகங்களின் கவர்ச்சி மாலுமிகளின் அழிவுக்குக் காரணமாக இருந்தது. அந்தப் பாதையில் ஆறுமாதங்கள் பயணித்து ஒரு நிலப்பகுதியை அடைந்தனர். அதைத் தாண்டி அஞ்சல் சுமந்து வரும் கோவேறு கழுதைகள் சென்றன. புயெந்தியாவின் கணக்கின்படி நாகரிக உலகுடன் ஆன தொடர்பு வடக்குத் திசை வழியில்தான். எனவே நிலத்தைச் சீர்திருத்தும் கருவிகள் மற்றும் வேட்டைக்கான ஆயுதங்களைப் புயெந்தியா தன் ஆட்களிடம் ஒப்படைத்தார். மகொந்தோ நிறுவப்பட்டபோது அவருடன் இருந்தவர்கள் அவர்கள். திசைகாட்டும் கருவிகள், நிலவரை படங்கள் முதலியவற்றை ஒரு தோள் பையில் இட்டார்; விளைவுகளைப் பற்றி எண்ணிப் பார்க்காது ஓர் அசாதாரண பயணத்தை மேற்கொண்டார். 

முதல் நாட்களில் குறிப்பிடத்தக்க தடை எதையும் அவர்கள் எதிர் கொள்ளவில்லை. கற்கள் பரவி அமைந்த ஆற்றங்கரை வழியே நடந்து முன்னேறினர். பல ஆண்டுகளுக்கு முன்பு படைவீரரின் கவசத்தைக் கண்டுபிடித்த இடத்தை அடைந்தனர். அங்கிருந்து இயற்கையாக வளர்ந்திருந்த ஆரஞ்சு மரங்களுக்கிடையே செல்லும் தடத்தில் சென்று காட்டுக்குள் நுழைந்தனர். முதல் வார இறுதியில் ஒரு மானைக் கொன்று சுட்டு வறுத்தனர். பாதியை மட்டும் உண்டு எஞ்சியதை அடுத்த நாட்களுக்கு வைத்துக்கொள்ள உப்புக்கண்டம் போட்டனர்; இதற்கு அனைவரும் ஒப்பினர். இந்த முன்னெச்சரிக்கை உணர்வுடன் பனைவகைக் கிழங்குகளை உண்ணும் அவசியத்தைத் தள்ளிப்போட முயன்றனர். அவற்றின் சுளைப்பகுதி புனுகு நாற்றத்துடன் கடினமாக இருக்கும். அடுத்த பத்து நாட்களுக்கு மேலாக சூரியனே தென்படவில்லை. தரை ஈரமாக இருந்தது; எரிமலைச் சாம்பல்போல உராய்வற்றிருந்தது. மரஞ்செடி கொடிகளின் அடர்த்தி மிகுதி. பறவைகளின் ஒலி, குரங்குகளின் ஆரவாரம், மிகத் தொலைவிலிருந்து கேட்டது. இந்தத் தொலைவு அதிகப்பட்டு வந்தது. உலகம் நிரந்தரமாகச் சோகத்தில் ஆழ்ந்ததுபோலப்பட்டது. எங்கும் ஈரம், நிசப்தம்; தொடக்க காலப்படிமூல நிலைக்கு மீண்டும் சென்றுவிட்டதாக அவர்கள் உணர்ந்தனர். அவர்களுடைய காலணிகள் ஆவி பரக்கும் எண்ணெய் வெள்ளத்தில் மூழ்கின; அவர்களுடைய வெட்டுக்கத்திகள், மணி வடிவ வெண் மலர்களையும் நீண்ட வால் உடைய பொன்னிற விலங்குகளையும் துவம்சம் செய்தன, அவற்றைச் சிவப்பாக்கின. ஒரு வாரக் காலம் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. தூக்கத்தில் நடப்பவர்களைப் போல, துயரத்தில் தோய்ந்து மூழ்கியவர்களைப் போலப் பயணித்தனர். ஆங்காங்கே ஒளி சிந்தும் பூச்சி புழுக்கள் தரும் வெளிச்சம்தான். திக்குமுக்காடச் செய்யும் ரத்தவாடை அவர்களுடைய நுரையீரல்களை நிறைத்தது. அவர்களால் திரும்பி வரவும் இயலாது. ஏனெனில் அவர்கள் உண்டாக்கிய வழித்தடத்தில் புதிய செடிகொடிகள் முளைத்திருக்கும்; அவர்கள் கண்முன்னே ஒரு புதிய செடி கிளைத்து வளர்வது போலப்பட்டது. “சரி, என்னவானாலும் சரி. நமது மனவுறுதியை இழக்கக் கூடாது என்பதுதான் முக்கியம்” என புயெந்தியா கூறுவதுண்டு. எப்போதும் அவருடைய திசைகாட்டும் கருவியைப் பார்த்துக்கொண்டு புலப்படாத வடதிசை நோக்கி அவர்களை நடத்திச் சென்றவாறிருந்தார். இந்தக் கவர்ச்சிப் பிரதேசத்திலிருந்து வெளிவந்துவிட முடியும், அதற்குத்தான் வடதிசைப் பயணம். கும்மிருட்டு. நட்சத்திரங்கள் இல்லை. ஆனால் அந்த இருள் புதிய, தூய காற்றால் நிறைந்திருந்தது. நீண்ட நடைப் பயணத்தால் களைத்துச் சோர்ந்துபோய் தமது தூங்கு மஞ்சங்களை, தொட்டில்களைக்கட்டத் தொடங்கிவிட்டனர். இரண்டு வாரங்களில் முதல் தடவையாக ஆழ்ந்து உறங்கினர். விழித்தெழுந்தபோது சூரியன் உச்சத்துக்கு வந்துவிட்டான். அந்தக் கவர்ச்சியும் ஈர்ப்பும் அவர்களைப் பேசவிடவில்லை. அவர்களைச் சுற்றி எங்கும் மரங்கள் - பனை மற்றும் பசுந் தோகை இலைகளுடன் கூடிய, ஆனால் பூக்கள் இல்லாத பெரணி மரங்கள் - சில வெண்மைப் பூச்சுடன் காணப்பட்டன. காலைப் பொழுது. நிசப்தம். அப்போது ஒரு பெரிய ஸ்பானியக் கப்பல் அவர்கள் கண்ணில் பட்டது. வலதுபக்கம் நோக்கி அது சற்றே சாய்ந்திருந்தது. கொடிக்கம்பம் சீராக இருந்தது; ஆனால் கப்பல் பாய்கள் தூசுபடிந்தும் கிழிந்தும் இருந்தன. அதைத் தாங்கும் வடக்கயிறுகளில் ஆங்காங்கே பல வண்ண நெக்கிட்டுகள். கப்பலின் உடற்பகுதி, அச்ச மூட்டும் நத்தை, நண்டுகள் மற்றும் பாசிகளால் நிறைந்திருந்தது; மேற்பகுதி முழுதும் கற்களால் உறுதியாகப் பிணைக்கப்பட்டிருந்தது. அதன் கட்டுமானம், அதற்குரிய இடத்தைப் பிடித்துக்கொண்டிருப்பது போலத் தோன்றியது; அதில் தெரிந்த தனிமை, சூழலைப் பற்றிய பிரக்ஞையே இல்லாத நிலை. காலத்தின் கடுங்குற்றங்களோ பறவைகளின் பழக்கவழக்கங்களோ அதைப் பாதிக்கவில்லை. அத்தகைய பாதுகாப்பு. அதன் உட்புறத்தை அந்தப் பயணிகள் துருவி ஆராய்ந்தபோது அவர்கள் கண்டதெல்லாம் அடர்ந்த மலர் வனத்தை மட்டுமே. கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. கடல் அருகாமையில் இருப்பதன் அடையாளம் அது. இந்த நிகழ்வு ஹோஸே ஆர்காடியோ புயெந்தியாவின் மனவுறுதியைக் குலைத்தது. கடலைத் தேடிப் புறப்பட்டதும் எண்ணற்ற தியாகங்கள், துயரங் களுக்குப் பின்னும் அதைக் காண இயலாது தவித்ததும் திடீரென்று அதைக் காண நேர்ந்ததும் வேண்டாத விதியின் விளையாட்டு என அவருக்குப்பட்டது. இதெல்லாம் அவருடைய பாதையில் குறுக்கிடும் பெரும் சிக்கல் என அவர் நினைத்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு கர்னல் அவ்ரேலியானோ புயெந்தியா மறுபடியும் இந்தப் பிரதேசத்தைக் கடந்து சென்றபோது - அப்போது அது அஞ்சல் வழிப் பாதை - அவர் கண்டதெல்லாம் கப்பலின் ஒரு பகுதியைத்தான்; அதுவும் கசகசாச் செடிகள் படர்ந்திருந்த நிலத்தின் நடுவே எரிந்துபோன விளிம்புப் பகுதி. அப்போது தான் இந்தக் கதை, அவர் தந்தையின் கற்பனையில் பிறந்ததல்ல என்பது அவருக்குத் தெளிவாயிற்று. ஆயினும் கப்பல் கடலோரத்திலிருந்து இவ்வளவு உள் தள்ளியிருந்த இடத்துக்கு எவ்வாறு வந்தது என அவர் வியந்தார். ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா இது பற்றிக் கவலை கொள்ளவில்லை. கப்பல் காணப்பட்ட இடத்திலிருந்து நான்கு நாட்கள் பயணத்துக்குப் பிறகு கடலை அவர் கண்டார். வெளிறிப் போன, நுரை பொங்கும் அழுக்குகள் நிறைந்த கடல் வெளி அது. இதற்கா இவ்வளவு ஆபத்துகள், தியாகங்கள் நிறைந்த பயணத்தை மேற்கொண்டோம் என அவர் புலம்பினார். கனவுகள் முடிந்தன. 

எரிச்சலும் கோபமுமாகக் கத்தினார். “மகெந்தோ எல்லாப் பக்கங்களிலும் நீரால் சூழப்பட்டுள்ளது.”

மகெந்தோ ஒரு தீபகற்பம் எனும் கருத்தே நீண்டகாலமாக நிலவி வந்தது. தனது பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா காரண அடிப்படை ஏதுமின்றி உருவாக்கிய நிலவரைபடம் அத்தகைய நம்பிக்கையைத் தந்தது. சினம், கேடு விளைக்கும் எண்ணம் மேலோங்க அதை வரைந்தார். தொடர்பு வசதிகளை ஏற்படுத்துவதில் நேர்ந்த கஷ்டங்களை அவர் பெரிதுபடுத்தியிருந்தார்; முற்றிலும் அறிவிழந்து அந்த இடத்தைத் தேர்வுசெய்தமைக்காகத் தனக்குத்தானே தண்டனை வழங்கிக்கொள்வது போலிருந்தது. “நன்றாக மாட்டிக்கொண்டோம்” என்று உர்சுலாவிடம் அவர் புலம்பினார். “விஞ்ஞானத்தின் பயன்களைப் பெறாது இந்த இடத்தில் நம் வாழ்க்கை கெட்டுப் போகும்.” அவ்வாறு அவர் உறுதியாக நம்பினார். சோதனைக் கூடமாக அவர் பயன்படுத்திய அந்தச் சிறு அறையில் பல மாதங்கள் அடைபட்டுச் சிந்தனையில் மூழ்கியிருந்தார். விளைவாக மகெந்தோவை விட்டு நல்லதொரு இடத்துக்குச் சென்றுவிட முடிவெடுத்தார். அவருடைய மனக்கிளர்ச்சியால் இத்தகைய திட்டங்கள் உருவாகும் என்பதை உர்சுலா முன்கூட்டியே எதிர்பார்த்திருந்தார். ஒரு சிறு எறும் பின் ரகசியமான, தடுக்க இயலாத வேலைத் திறத்துடன் அவர் செயல்பட்டார்; பெண்களைத் திரட்டி அங்கிருந்து வெளியேற முனைந்த அவர்களுடைய கணவன்மார்களின் திடசித்தமில்லாத, அடிக்கடி மனம் மாறும் போக்குக்கு எதிராக ஆயத்தப்படுத்தினார். எந்த வினாடியில் அல்லது எந்தவித எதிர்நிலைகளால் தன் திட்டம் சாக்குப் போக்குகளில் ஏமாற்றங்களில் தட்டிக்கழிப்பில் சிக்குண்டது என்பதைப் புயெந்தியா அறியவில்லை; அது வெறும் பிரமையாகிப்போனதை மட்டும் உணர்ந்தார். உர்சுலா அவரை ஒருவித அப்பாவித் தனத்துடன் கவனித்துவந்தார்; காலையில் வீட்டின் பின்னறையில் புறப்படும் திட்டங்கள் குறித்து முணுமுணுத்தவாறு ஆய்வுக்கூடத் துண்டு துணுக்குகளை அவற்றுக்குரிய பெட்டிகளில் அவர் வைத்திருந்ததைக் கண்டபோது அவருக்குச் சிறிது பரிதாபம் ஏற்படவும் செய்தது. பெட்டிகளை மூடி ஆணி அடித்து மை தோய்த்த பிரஷால் முதலெழுத்தைக் குறியிட்டதுவரை கவனித்த அவர் ஒன்றும் கடிந்து சொல்லவில்லை. ஆனால் கிராமத்து ஆண்கள் தன் முயற்சிக்கு ஆதரவு தரவில்லை என்பதைப் புயெந்தியா இப்போது அறிந்திருந்தார். ஏனெனில் மெல்லிய குரலில் அவர் தனி மொழி ஒலிப்பது உர்சுலாவுக்குக் கேட்டது. அறையின் கதவைப் பெயர்த்தெடுக்க அவர் முயன்றபோதுதான் உர்சுலா தட்டிக்கேட்டார். ஒருவிதக் கசப்புணர்வும் வெறுப்புமாகப் புயெந்தியா பதிலளித்தார்: “வேறு யாரும் புறப்பட விரும்பாத நிலையில் நாம் மட்டுமாவது புறப்படலாம்.” உர்சுலா கலங்கவில்லை. 

“நாம் புறப்படப்போவதில்லை; இங்கேயே தொடர்ந்து இருப்போம் ஏனெனில் இங்கு நமக்கு ஒரு மகன் இருக்கிறான்” என்று உர்சுலா கூறினார். 

“நம் குடும்பத்தில் இங்கு ஒரு சாவும் நிகழவில்லை; ஒருவர் செத்து நிலத்தில் புதையுண்டதுவரை ஓர் இடம் நம்முடையது ஆகாது” என்று புயெந்தியா சொன்னார். 

உர்சுலா, மெல்லிய, ஆனால் உறுதிப்படப் பதிலளித்தார்: 

“எஞ்சியுள்ள நீங்கள் அனைவரும் இங்கேயே தங்கிவிட வேண்டும் என்பதற்காக நான் இறக்க வேண்டுமெனில் நான் சாகிறேன்.” 

தன்னுடைய மனைவியின் விருப்பம் அவ்வளவு உறுதியுடன் இருக்குமென ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா நினைத்திருக்கவில்லை; அவருடைய கற்பனைப் புனைவுகளை அவிழ்த்துக் கவர்ச்சியூட்டி இணங்கவைக்கப் பார்த்தார். ஒரு விந்தை உலகில் ஒரு மாயத்திரவத்தை நிலத்தில் தெளித்தால் போதும், ஒருவன் விரும்பும்போது செடிகளில் பழங்கள் காய்த்துத் தொங்கும், வலிகளுக்கு மாற்றான கருவிகள் அனைத்தும் மலிவு விலைகளில் கிடைக்கும் என்றெல்லாம் கதைத்துப் பார்த்தார். தொலைவிலுணர்தல் அவருக்கு முடியலாம். ஆனால் அதற்கெல்லாம் செவி கொடுக்கும் நிலையில் உர்சுலா இல்லை. 

“சிறுபிள்ளைத்தனமாக உங்கள் கண்டுபிடிப்புகள் பற்றி நினைத்துக்கொண்டு சுற்றி அலைவதற்குப் பதில் உங்கள் பிள்ளைகளைப் பற்றிக் கவலைப்படுங்கள். அவர்கள் நிலைமையைப் பாருங்கள். தான்தோன்றிக் கழுதைகளைப் போல அலைகிறார்கள்” என்று அவர் பதிலளித்தார். 

மனைவியின் சொற்களை அப்படியே ஒப்புக்கொண்டார் புயெந்தியா. சன்னல் வழியே எட்டிப் பார்த்தார். தகிக்கும் வெயிலில் செருப்புகள் அணியாது குழந்தைகள் ஓடியாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் இருப்பதே அந்தக் கணத்தில் தான் அவருக்கு உறைத்தது. உர்சுலாவின் மந்திரச் சொல் அவரைக் கட்டிப்போட்டது. அவருள் ஏதோ நிகழ்ந்தது. விவரிக்க இயலாத புதிர் அது; ஆனால் கண்டறிய முடிந்த ஒன்று. அப்படியே ஆடிப்போய்விட்டார். அவருடைய அந்த வேளையில் அவருடைய நினைவு மண்டலத்திலிருந்து கட்டுமீறி வெளிவந்துவிட்டார். வீட்டைத் துப்புரவு செய்வதை உர்சுலா தொடர்ந்தார்; இனி அவர் வாழ்நாள் இறுதிவரை இங்குதான் இருப்பார். இப்போது இது பத்திரமான இடம். புயெந்தியா ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார். குழந்தைகளைப் பற்றி எண்ணினார். அவர் கண்கள் பனித்தன; புறங்கையால் துடைத்துக்கொண்டார். மனம் ஒவ்வாத, ஆனால் மாற்ற இயலாத ஒன்றை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் ஆழ்ந்த பெருமூச்சுவிட்டார். 

“எல்லாம் சரி. பெட்டிகளிலிருந்து பொருட்களை வெளியே எடுத்துவைக்க எனக்கு உதவுமாறு அவர்களிடம் கூறு” எனப் புயெந்தியா கூறினார். 

பிள்ளைகளில் மூத்தவன் ஹோஸே ஆர்காடியோ. வயது பதினான்கு. சதுர வடிவத்தில் தலை. அடர்த்தியான தலைமுடி. தந்தை யின் பண்பு நலன்களைக் கொண்டிருந்தான். பலசாலியாக துடிப்புடன் வளர்ந்தாலும் கற்பனை வளம் குறைந்தவன் என்பது முதலிலேயே தெரிந்துவிட்டது. மகெந்தோ கிராமம் உருவாவதற்கு முன்பு, சிரமத்துடன் மலைகளைக் கடந்து வந்தபோது கருக்கொண்டவன், பிறந்தவன். குழந்தையிடம் விலங்கினக் கூறுகள் இல்லை எனத் தெரிந்தபோது வானுலகுக்குப் பெற்றோர் நன்றி கூறினர். மகெந்தோவில் பிறந்த முதல் குழந்தை அவ்ரேலியானோ. மார்ச் மாதம் வந்தால் அவனுக்கு ஆறு வயது. அவன் அமைதியாக, ஒதுங்கி இருப்பான். தாயின் கருப்பையில் இருந்தபோது அழுதவன்; பிறக்கும்போதே அவன் கண்கள் திறந்திருந்தன. தொப்பூள் கொடியை அவர்கள் துண்டித்தபோது தலையை ஒருபுறம் மறுபுறம் திருப்பி அசைந்தவன்; அறையில் இருந்தவற்றை உற்று நோக்கி அச்சமில்லா ஆர்வத்துடன் முகங்களை ஆராய்ந்தவன். அவனை நெருங்கி வந்து மற்றவர்கள் பார்த்தபோது அவனுடைய கவனம் பெரு மழையால் விழுந்துவிடும் போலிருந்த பனை ஓலைக்கூரையில் நிலைத்திருந்தது. அந்த நாள்வரை மீண்டும் உர்சுலா நினைவுகூரவில்லை. ஆனால் அவனுக்கு மூன்று வயதானபோது ஒரு நாள் சமையல் கட்டுக்குள் வந்தான். அப்போது அடுப்பிலிருந்து கொதிக்கும் வடிச்சாறை எடுத்து மேசைமீது உர்சுலா வைத்தார். குழம்பிப்போன அவ்ரேலியானோ, கதவருகில் நின்றவாறே “சிந்தப்போகிறது” என்றான். மேசையின் மத்தியில் ஆடாது அசையாத நிலையில் வைக்கப் பட்டிருந்த பாத்திரம், குழந்தை அந்த அறிவிப்பைச் செய்தவுடன் தெள்ளத் தெளிவாக விளிம்பு நோக்கி அசைந்து ஏதோ உள்ளீடான விசையால் செலுத்தப்பட்டதுபோல நகர்ந்து தரையில் விழுந்து நொறுங்கியது. திடுக்கிட்டுப்போன உர்சுலா இந்த நிகழ்வைக் கணவரிடம் கூறினார். ஆனால் அவர் இதை இயல்பான நேர்வு என்று விளக்கமளித்தார். அவர் அப்படித்தான். தன் பிள்ளை களின் இருப்பே அவர் நினைவுகளில் இருப்பதில்லை; அந்த அளவுக்கு அவர் அன்னியப்பட்டுப்போயிருந் தார். ஏனெனில் அவரைப் பொறுத்த வரை குழந்தைமை, மனத்தளவில் நினைவு பெறாத காலம்; மறுபுறம், கற்பனை ஊகங்களில் அவர் முற்றிலு மாக மூழ்கிப்போயிருந்தது. 

ஆனால் ஆய்வுக் கூடத்தில் அந்த நாள் பிற்பகலில் பண்டங்களை வெளியே எடுத்துவைக்க உதவுமாறு பிள்ளைகளை அழைத்தபோதிருந்து நல்ல பொழுதுகளை அவர்களுடன் செலவிட்டார். சிறிய, தனித்த அறை யில் சுவர்கள் கொஞ்சம் கொஞ்ச மாக வினோதமான வரைபடிவங் களாலும் வளமார்ந்த சித்திரங்க ளாலும் நிரப்பப்பட்டன; படிக்கவும் எழுதவும் கணக்குகளைப் போடவும் அவர்களுக்குக் கற்றுத் தந்தார். உலக அதிசயங்களைப் பற்றி அவர்களிடம் பேசினார். அவருடைய படிப்பறிவு விரிந்தவரை சொல்லிக் கொடுத்தார்; அவருடைய கற்பனை வரம்புகள் மீறி உச்சங்களையும் தொட்டார். இவ்வாறாகத்தான் பையன்களின் கல்விப் பயிற்சி அமைந்தது; ஆப்பிரிக்காவின் தென்கோடியில் வாழ்ந்த மக்கள் மிகுந்த அறிவுடையவர் களாகவும் அமைதி நாட்டம் உடையவர்களாகவும் இருக்கின்றார் கள் என்றும் அவர்களின் ஒரே பொழுது போக்கு அமர்ந்திருந்து சிந்திப்பது மட்டுமே என்றும் கிரேக்கத்துக்கும் துருக்கிக்கும் இடைப்பட்ட ஏஜியன் கடலை நடந்தே கடக்க முடியும் என்றும் ஒரு தீவிலிருந்து மற்றொன் றுக்குத் தாவிச் சென்றே சலோனிகா துறைமுகத்தை அடையலாம் என்றும் அவர் சொல்லிக் கொடுத் திருந்தார். உண்மையில் காணப் படாத ஒன்றைக் காணுதல், மாயக் காட்சிகள், பொய்த் தோற்றங்கள் அவருடைய பாடங்களில் பிரதான அம்சங்கள். இவற்றை உள்வாங்கிய குழந்தைகள் மனத்தில் அவை ஆழப்பதிந்தன. விளைவாகப் பல ஆண்டுகளுக்குப் பின்பு, சுடுமாறு ஆணை பிறந்த அந்த ஒரு விநாடிக்கு முன்புகூட கர்னல் அவ்ரேலியானோ புயெந்தியாவின் கண்முன்னே அந்த மார்ச் மாதப் பிற்பகலும் பௌதீகப் பாடம் நடத்திக்கொண்டிருந்த தன் தந்தை இடையில் நிறுத்திவிட்டுக் கவர்ச்சி வசத்தில் நின்று, தன் கையை மேல் நோக்கி வீச, கண்கள் அசை வற்றிருக்க, தூரத்திலிருந்து அந்த நாடோடிகள் இசைத்த குழல் -முரசு - சிறுமணி ஒலிகளும் அவர் கள் மீண்டும் அந்தக் கிராமத்துக்கு வந்ததும் மெம்பிஸ் ஞானிகளின் வியப்பூட்டும் கண்டுபிடிப்பை அறிவித்ததும்தான் நிழலாடின. 

இப்போது வந்த நாடோடிகள் புதியவர்கள். ஆண்களும் பெண்களுமாக அனைவரும் இளையவயதினர். தங்கள் மொழியை மட்டுமே அறிந்தவர் கள். அழகிய தோற்றம் உடையவர் கள். அவர்களுடைய தோல்கள் பளபளத்தன; கைகளில் சுறுசுறுப்பு. அவர்களுடைய நடனங்களும் இசை யும் ஆரவார மகிழ்ச்சிப் பெருக்கும் தெருக்களை நிறைத்தன, திகில் ஊட்டின. அவர்கள் இசைத்தது இத்தாலியப் பண்களை; பக்கவாத்தி யங்கள் ஒலிக்க ஒருவர் மட்டுமே பாடுவார், அது நீண்ட பாடலாக இருக்கும். ஆப்பிரிக்கக் கஞ்சிரா இசை ஒலி கேட்டதும் ஒரு கோழி ஒரு நூறு பொன்முட்டைகளை இடும். மனித மனங்களில் ஓடுவதைப் படித்துவிடும் பயிற்சி பெற்ற குரங்கு. ஒரே பொறி, ஒரே சமயத்தில் பொத்தான்களைத் தைக்கும், காய்ச்சலைக் கட்டுப் படுத்தும், கெட்ட நினைவுகளை மறக்கச் செய்யும்; ஒரு மெல்லிய துணி, காலத்தை மறக்கச் செய்யும். இன்னும் ஆயிரத்துக்கு மேற்பட்ட கண்டுபிடிப்புகள். அனைத்தும் அவர் களே உருவாக்கியவை, அசாதாரண மானவை. ஹோஸே ஆர்காடி யோவும் ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடிக்க விரும்பினான். அது நினைவுப் பொறி; அதன்மூலம் எல்லா வற்றையும் நினைவுகளில் பதிக்க ஆசைப்பட்டான். ஒரு விநாடியில் அந்த நாடோடிகள் கிராமத்தையே புரட்டிப்போட்டுவிட்டனர். மகெந்தோ வாசிகளுக்கு அவர்கள் தெருக்களே புதியனவாகத் தெரிந்தன. அலை மோதும் களியாட்டம், காட்சி; அவர் கள் திக்குமுக்காடிப் போயினர். 

அந்த ஆரவாரக் குழப்பத்தில் குழந்தைகள் தொலைந்துபோய்விடக் கூடாது என்பதற்காக அவர்களின் கைகளைப் பிடித்து ஹோஸே ஆர் காடியோ புயெந்தியா நடத்திவந்தார். கழைக்கூத்தும் பிற ஆட்டங்களும்; அவர்களுடைய பற்களுக்குத் தங்கக் கவசம். காற்றுவெளியில் பொருட்களைச் சுண்டிவிடுவார் ஒருவர், அவருக்கு ஆறு கைகள்; ஒரே சமயத்தில் பல வித்தைகள் காட்டுவார் மற்றொருவர். கூட்டத்தினரின் மூச்சுகளில் பலவிதக் கழிவு நாற்றங்கள், நறுமணங்கள். புயெந்தியா ஒரு பித்தர்போல எங்கும் சுற்றிவந்தார். அவர் மெல்குயாடெஸைத் தேடினார்; அந்த நேர்த்திமிக்க கொடுங்கனவின் முடிவற்ற ரகசியங்களை அந்த நாடோடி தெரியப்படுத்துவான் என்பதால் அவனைத் தேடினார். அங்கிருந்த பல நாடோடிகளிடமும் விசாரித்தார். அவருடைய மொழி அவர்களுக்குப் புரியவில்லை. இறுதியில் மெல்குயாடெஸ் வழக்கமாகத் தன் கூடாரத்தை அமைக்கும் இடத்தை அடைந்தார். அங்கு ஓர் ஆர்மினியன் (அவனைப் பார்த்தவுடன் புரிந்துகொள்ள முடியும்) ஸ்பானிய மொழியில் பேசி நீர்மம் ஒன்றை விற்றுக்கொண்டிருந்தான். அந்தப் பாகை அருந்தியவன் பிறர் கண்களுக்குத் தெரியமாட்டான் என்று அவன் கூறிக்கொண்டிருந்தான். அதிர்ச்சியூட்டும் காட்சியைக் கண்டு வியப்பில் மூழ்கிப் போயிருந்த கூட்டத்தை விலக்கிக்கொண்டு அவனைப் புயெந்தியா நெருங்கியபோது மஞ்சளும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருந்த அந்தப் பாகை அவன் ஒரேமடக்கில் குடித்தான். அவனிடம் தன் கேள்வியைக் கேட்க அவரால் முடிந்தது. பெருவாரி நோய் விளைவிக்கும் சேற்று மடுவில் மூழ்கியவனைப் போலப் புகைக்களத்தில் கரைவதற்கு முன்பு அவன் பேசினான்: “மெல்குயாடெஸ் செத்துப் போய்விட்டான்.” அந்தச் சொற்களின் எதிரொலி இன்னும் கேட்கிறது. இந்தச் செய்தி புயெந்தியாவை நிலை குலையச் செய்துவிட்டது; அவர் அசைவற்று நின்றுவிட்டார். கூட்டம் கலையும்வரை துயரத்திலிருந்து மீண்டு எழ அவர் முயன்று கொண்டிருந்தார். வியப்பூட்டும் பிற கருவிகளைக் காணக் கூட்டத்தினர் வேறுபுறம் சென்றனர். மெல்குயாடெஸின் சாவை மற்ற நாடோடிகளும் உறுதி செய்தனர்; சிங்கப்பூர் கடற்கரையில் தொற்றிய காய்ச்சலுக்கு அவன் பலியானதையும் ஜாவா கடலின் ஆழப் பகுதியில் சடலம் வீசப்பட்டதையும் அவர்கள் நிச்சயப்படுத்தினர். இச்செய்தி பற்றிக் குழந்தைகள் அக்கறைப்படவில்லை. மெம்பிஸ் ஞானிகளின் புதுமையைக் காண அழைத்துச் செல்லுமாறு அவர்கள் முரண்டுபிடித்தனர். ஒரு கூடாரத்தின் வாயிலில் அப்புதுமைப் பற்றிய விளம்பரம் வைக்கப்பட்டிருந்தது; அது, சாலமோன் அரசருக்குச் சொந்தமானது என்று அதில் கூறப்பட்டிருந்தது. குழந்தைகளின் பிடிவாதத்துக்குப் பணிந்து முப்பது ஸ்பானிய நாணயங்களைச் செலுத்திவிட்டுக் கூடாரத்தின் நடுப்பகுதிக்கு அவர்களை இட்டுச்சென்றார். அங்கே ஒரு பிரமாண்ட உருவம். உடலெங்கும் ரோமம்; தலை மழிக்கப்பட்டிருந்தது. மூக்கில் ஒரு செப்பு வளையம்; கணுக்காலில் கனத்ததொரு இரும்புச் சங்கிலி. ஒரு கனத்த பெட்டியை அந்த உருவம் பார்த்தவாறு இருந்தது. அந்தப் பெட்டியை அது திறந்த போது பனிக்கட்டிப் பாளத்தால் உண்டாக்கப்படும் புகை வெளிவந்தது. உள்ளே ஒரு பெரிய கட்டி. ஒளி ஊடுருவுகின்ற, உள்ளீடு தெரியும் படிகப்பாளம். பேரளவான எண்ணிக்கையில் ஊசிகள். அந்தி நேர ஒளி அவற்றில் ஊடுருவும்போது பல வண்ண நட்சத்திரங்களாக அவை சிதறிய தோற்றம். குழந்தை களுக்கு உடனடி விளக்கம் தேவை. திடுக்குற்ற ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா முணுமுணுத்தார். 

“உலகின் மிகப் பெரிய வைரம்.” 

“இல்லை” என்று அந்த நாடோடி அடித்துச் சொன்னான். “அது பனிக்கட்டி” 

புயெந்தியாவுக்குப் புரியவில்லை. அந்தக் கட்டியை நோக்கிக் கையை நீட்டினார். ஆனால் அந்தப் பெரிய உருவத்தான் தள்ளிவிட்டான்.” தொடுவதற்கு இன்னும் ஐந்து நாணயங்கள் தர வேண்டும்” என்று அவன் சொன்னான். புயெந்தியா அவ்வாறே செலுத்தினார். பனிக்கட்டிமீது கையைவைத்தார். பல மணித்துளிகள்வரை அதைப் பற்றியவாறே இருந்தார். மர்மத்துடன் ஏற்பட்ட தொடர்பால் அவர் நெஞ்சை அச்சமும் மகிழ்ச்சியும் நிறைத்தன. என்ன சொல்வதெனத் தெரியாத நிலையில் மேற்கொண்டு பத்து நாணயங்களைச் செலுத்தினார். தன் பிள்ளைகளுக்கும் அந்த வியப்பூட்டும் பேரனுபவம் கிடைக்கட்டுமென அவர் நினைத்தார். குட்டி ஹோஸே ஆர்காடியோ அதைத் தொட மறுத்தான். ஆனால் அவ்ரேலியானோ ஓர் எட்டு முன் வந்து அதன்மீது கைவைத்தான். உடனே கையை எடுத்துவிட்டான். “அது சுடுகிறது” என்று கூவினான். அவனுக்கு ஒரே வியப்பு. ஆனால் அதையெல்லாம் தகப்பன் கவனிக்கவில்லை. அதிசயத்தின் சான்றைக் கண்ட மயக்கத்தில் அவர் ஒருகணம் அனைத்தையும் மறந்தார். பிறழ் சிந்தை வயப்பட்ட தன்னுடைய முயற்சிகள், மெல்குயாடெஸின் சடலம், அது எண்கை மீன்களுக்கு உணவாக வீசப்பட்ட பரிதாபம் - அனைத்தையும் மறந்தார். மறுபடியும் ஐந்து நாணயங்களைச் செலுத்திவிட்டு அந்தக் கட்டிமீது தன் கையை வைத்தார், புனித நூல்களின்மீது கை வைத்து சாட்சியம் அளிப்பதுபோல. அவர் குரலில் பெருவியப்பு: 

“நமது காலத்தின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு இது.” 

******

நன்றி: காலச்சுவடு

Author: காப்ரியேல் கார்சியஸ் மார்க்கேஸ்100-00-0001-161-2_b

தனிமையின் நூறு ஆண்டுகள் காப்ரியேல் கார்சியஸ் மார்க்கேஸ் அவர்களின் நோபல் பரிசு பெற்ற, புகழ் பெற்ற நாவலான One Hundred Years of Solitude தமிழில், தனிமையில் நூறு ஆண்டுகள் என வெளிவந்துள்ளது!சென்ற ஐம்பது ஆண்டுகளில் உலக மொழிகளில் மகத்தான படைப்பு என்கிறார் சல்மான் ரஷ்டி. உலக இலக்கியத்தை ஆழமாகப் பாதித்த பெரும் படைப்புகளில் ஒன்று. ஏழு தலைமுறைகளின் வாழ்க்கையை விரிவாகச் சொல்லும் இந்நாவல் இதுவரை 37 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 1982-ல் நோபல் பரிசு பெற்ற இந்நாவல் இதுவரை இரண்டு கோடி பிரதிகளுக்குமேல் விற்பனையாகியுள்ளது.

ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0001-161-2.html

Tuesday, June 28, 2011

ஏதோவொரு நாளில்-கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்

தமிழில்: விமலாதித்த மாமல்லன்

மழையற்ற வெம்மையுடன் திங்கள் விடிந்தது. அதிகாலையில் எழும் வழக்கம் கொண்டவரும் பட்டம் பெறாத பல் டாக்டருமான அரேலியோ எஸ்கவார், அன்று காலை ஆறு மணிக்கு தன் அலுவலகத்தைத் திறந்துவிட்டிருந்தார். வார்ப்பில் பொறுத்தப்பட்டிருந்த பொய்ப் பற்கள் சிலவற்றைக் கண்ணாடி அலமாரியிலிருந்து எடுத்து மேசை மேல் வைத்தார். சில கருவிகளையும் அவற்றின் அளவுகளுக்கேற்ப ஒழுங்குபடுத்தி காட்சிக்கு வைப்பதைப்போல் வைத்தார். கழுத்துப்பட்டி இல்லாத சட்டை அணிந்திருந்தார். கழுத்தில் சட்டை இணையும் இடத்தில் தங்க பித்தான் marquez பொறுத்தப்பட்டிருந்தது. அவரது பேண்டை, தோளைச்சுற்றிய பட்டைகள் தாங்கிக் கொண்டிருந்தன. நிமிர்ந்த பக்கையான உடலுடன் இருந்தவரின் தோற்றமானது சூழலுக்குச் சற்றும் பொருந்தாமல், செவிடர்களின் குவிப்பற்ற பார்வையை ஒத்திருந்தது.

மேசையில் பொருட்கள் ஒழுங்குபடுத்தப்பட்டபின், பல்மருத்துவரின் நாற்காலியில் அமர்ந்தபடி துளைப்பானைக் கீழே இழுத்து பொய்ப்பற்களை மெருகேற்றத் தொடங்கினார். வேறு சிந்தனையற்று, வேலையில மும்முரமாய் ஈடுபட்டிருந்தார். தேவைப்படாத தருணங்களிலும் கூட காலால் உதைத்து துளைப்பானைச் சுழலவிட்டுக் கொண்டிருந்தார். எட்டு மணிக்கு நிறுத்திவிட்டு, ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்தார். அப்போது பக்கத்துவீட்டுக் கூரையின் மேல் யோசனையிலாழ்ந்த இரண்டு பருந்துகள் வெயிலாற்றிக் கொண்டிருப்பதைக் கண்டார். மதியத்திற்கு முன் மழைபெய்யும் என்கிற எண்ணத்துடன் தம் வேலையைத் தொடர்ந்தார். அவரது பதினோரு வயது மகனின் கூக்குரல் அவரது முனைப்பில் குறுக்கிட்டது.

”அப்பா...!”

”என்ன...!”

”நீங்கள் பல்லைப் பிடுங்குவீர்களா என மேயர் அறிய விரும்புகிறார்.”

”நான் இல்லை எனச் சொல்...!”

அப்போது அவர் பொற்பல் ஒன்றை மெருகேற்றிக் கொண்டிருந்தார். சற்றுத் தள்ளிப் பிடித்து அரைக்கண் பார்வையில் அதை பரிசோதித்துக் கொண்டிருந்தார். அவரது மகன், சிறிய வரவேற்பறையில் இருந்து திரும்பவும் கூவினான்.

”நீங்கள் உள்ளேதான் இருக்கிறீர்களாம். உங்கள் குரல் கேட்கிறதே என்கிறார்.”

பல்லை சோதிப்பதிலேயே மும்முரமாய் இருந்த மருத்துவர், சோதித்து முடித்து, மேசையில் அதை வைத்த பிறகே பதிலளித்தார்:

”நல்லதாகப் போயிற்று” என்றார்.

அவர் திரும்பவும் துளைப்பானை இயக்கினார். வேலை மீதமிருந்த பல பல்வரிசைகளை அட்டைப் பெட்டியிலிருந்து எடுத்து வைத்தவராய், பொற்பல்லில் தம் வேலையைத் தொடர்ந்தார்.

”அப்பா...!”

”என்ன...!” என்றார், தமது வெளிப்பாட்டை மாற்றிக்கொளாமல்.

”நீங்கள் பல்லைப் பிடுங்காவிட்டால் அவர் உங்களைச் சுட்டு விடுவாராம்...!”

பதற்றப்படாமல், நிச்சலனமாய், துளைப்பனை இயக்குவதை நிறுத்தி, அதை நாற்காலியிலிருந்து தூர தள்ளினார். பிறகு மேசையின் கீழ் ட்ராயரை முழுக்க வெளியே இழுத்தார்.

அதில் சுழல் துப்பாக்கி இருந்தது. ”சரி, அவரை வந்து என்னைச் சுடச் சொல்” என்றார்.

நாற்காலியைக் கதவிற்கு எதிராய் உருட்டி தள்ளி விட்டவர், மேசை ட்ராயர் முனையில் கையை வைத்துக் கொண்டார்.

அறை வாயிலில் மேயர் தென்பட்டார். அவரது முகத்தை வலப்பக்கம் மட்டுமே மழித்திருந்தார். மறுபக்கம் வலியில் வீங்கியிருந்ததோடு ஐந்து நாள் தாடியுடனும் இருந்தது. மேயரின் சோர்ந்த விழிகளில் பல இரவுகளின் தவிப்பைக் கண்டார். விரல் முனைகளால் மேசையின் ட்ராயரை மூடிவிட்டு, மென்மையாகச் சொன்னார்.

”உட்காருங்கள்”

”காலை வணக்கம்” என்றார் மேயர்.

”வணக்கம்” என்றார் பல் மருத்துவர்.

பல்பிடுங்கும் கருவிகள் கொதித்துக் கொண்டிருக்கையில், நாற்காலியின் தலை-தாங்கியில் மண்டையை சாய்த்துக் கொண்டதில் மேயர் சற்றுத் தெம்பாய் உணர்ந்தார். அந்த அறையில் சுவாசிப்பது கடினமாயிருந்தது. பழைய மர நாற்காலி, காலால் இயக்கவேண்டிய பல் துளைப்பான், கண்ணாடிக் கதவுடைய அலமாராயில் இருந்த பீங்கான் குடுவைகள் என வருமை பீடித்திருந்த அறை. நாற்காலிக்கு எதிர்ப்புறமிருந்த ஜன்னலில் தோளுயரத்திற்கு திரைச்சீலை இடப்பட்டிருந்தது. மருத்துவர் அருகில் வருவதை உணர்ந்ததும், கால்களை உந்தியபடி நிமிர்ந்து உட்கார்ந்து வாயைத் திறந்தார். ஆரிலியோ எஸ்கவார், மேயரின் தலையை விளக்கிற்காய்த் திருப்பினார். நோயுற்ற பல்லை சோதித்த பின்னர், மேயரின் தாடையை மூடிய விரல்களில் அழுத்தி மூடினார்.

”மயக்க மருந்து கொடுக்காமல்தான் இதைச் செய்தாக வேண்டும்” என்றார்.

”ஏன்?”

”ஏனென்றால் உள்ளே சீழ் பிடித்து இருக்கிறது.”

மருத்துவரின் கண்களைப் பார்த்தபடி மேயர் ”சரி” என்றபடி புன்னகைக்க முயன்றார். மருத்துவர் திரும்பப் புன்னகைக்கவில்லை. கொதித்து சுத்தமாகியிருந்த கருவிகளை வட்டிலோடு வேலைபார்க்கும் மேசைக்குக் கொண்டுவந்தவர், குளிர்ந்த இடுக்கியால் நிதானமாக நீரிலிருந்து அவற்றைக் வெளியில் எடுத்து வைத்தார். பிறகு எச்சில் துப்பும் பாத்திரத்தை ஷூ முனையால் தள்ளிவிட்டு, கைகளைக் கழுவிக்கொள்ளச் சென்றார்.

மேயரை ஏறெடுத்தும் பார்க்காமலேயே இவையனைத்தையும் செய்தார். ஆனால் மேயரோ மருத்துவர்மேல் வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி இருந்தார். மருத்துவர் கால்களை அகட்டி நின்றவண்ணம் சூடாக இருந்த குறடால் கீழ் வரிசை கடவாய்ப் பல்லைப் பற்றினார். நாற்காலியின் கைப்பிடிகளை மேயர் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அவரது பலமனைத்தையும் திரட்டி கால்களை அழுத்திக் கொண்டார். மூச்சு முட்டுவதை சிறுநீர்ப்பைகளில் உணர்ந்தார் எனினும் சத்தமெழுப்பவில்லை. பல்மருத்துவர் மணிக்கட்டை மட்டுமே அசைத்தார். காழ்ப்பின்றி, இன்னும் சொன்னால் கசந்த கனிவுடன் பல் மருத்துவர் கூறினார்:

”இறந்துபட்ட எங்களின் இருபது மனிதர்களுக்கான இழப்பை, இப்போது செலுத்தப் போகிறீர்கள்.” எலும்புகள் நொறுங்கிவிடுவது போல தாடையைக் கிட்டித்துக் கொண்ட மேயரின் கண்களைக் கண்ணீர் நிரப்பிற்று. எனினும், பல் வெளியில் வந்துவிட்டது என்பதை உறுதியாய் உணரும்வரை அவர் சுவாசிக்கவேயில்லை. கண்ணீரினூடாக அதைப் பார்த்தார். அதுவரை அனுபவித்திராத அந்த வலி, முந்தைய ஐந்து இரவுகளில் அடைந்த வேதனையெல்லாம் ஒரு வேதனையா என்பதாக ஆக்கிவிட்டிருந்தது. எச்சில் துப்பியை நோக்கி குனிந்தார். வியர்த்துக் கொட்டியது. மூச்சடைப்பதுபோல இருந்தது. சீருடையின் பித்தான்களை அவிழ்த்துக் கொண்டபடியே பேண்டின் சராய்ப் பைக்குள்ளிருந்த கைக்குட்டையை எடுக்க முனைந்தார். பல்மருத்துவர் சுத்தமான துணியைக் கொடுத்தார்.

”கண்ணீரைத் துடைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

மேயர் துடைத்துக் கொண்டார். அவர் நடுங்கிக் கொண்டிருந்தார். மருத்துவர் கையைக் கழுவிக் கொண்டிருக்கையில், காரை உதிர்ந்து கொண்டிருந்த கூரையையும் அழுக்கான சிலந்தி வலையில் இருந்த முட்டைகளையும் இறந்த பூச்சிகளையும் பார்த்தார். மருத்துவர் கைகளை உலர்த்தியபடி திரும்பி வந்தார்.”உப்புத்தண்ணீரில் கொப்பளித்து ஓய்வெடுங்கள்” என்றார். மேயர் எழுந்து நின்று, சென்றுவருவதாய்க் கூறியபடி, இலகுவான ராணுவ சலாம் வைத்து கால்களை நெட்டிமுறித்தபடி, சீருடைப் பித்தான்களைப் போட்டுக் கொள்ளாமல், வாயிலைப் பார்த்து நடந்தார்.

”பில்லை அனுப்பி வை” என்றார்.

”உங்களுக்கா, நகரசபைக்கா?”

மேயர் திரும்பிப்பார்க்கவில்லை. கதவை மூடி வெளியேறிக்கொண்டே திரைச்சீலை வழியே சொன்னார்.

”இரண்டும் ஒரே இழவுதான்!”

*******

Sunday, May 15, 2011

மிகப்பெரும் சிறகுகளுடன் ஒரு வயோதிகன்-கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்

தமிழில் : ஆர்.சிவகுமார்

கொலம்பிய எழுத்தாளர், பத்திரிகையாளர். 1955-ல் வெளியான லீப் ஸ்டார்ம் Leaf storm என்ற நாவல் மூலம் எழுத்தாளராக அறியப்பட்டார். 1967-ல் வெளியான One hundred years of solitude என்ற நாவல் சர்வதேச புகழ் பெற்றது. லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் முக்கி ய கூறான Magical Realism இந்த நூலுக்குப் பிறகே அதிக கவனம் பெற்றது. Autumn of the patriarch (1975), chronicle of a Death foretold (1981), love in time of cholera (1985) ஆகியவை இவருடைய மற்ற படைப்புகள். 1982-ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.

marquez3

வீட்டுக்குள் அவர்கள் கொன்ற ஏராளமான நண்டுகளைக் கடலில் எறிவதற்காக மழை தொடங்கி மூன்றாவது நாள் பெலயோ நனைந்த முற்றத்தைத் தாண்டிப் போனான். இறந்த நண்டுகள் உண்டாக்கிய துர்நாற்றம்தான் பிறந்த குழந்தைக்கு இரவு முழுவதும் காய்ச்சலை உண்டு பண்ணியிருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். செவ்வாய்க்கிழமைக்குப் பிறகு உலகமே சோகமயமாக இருந்தது. கடலும் வானமும் ஒரே சாம்பல் வண்ணத்தில் இணைந்து போயின. மார்ச் மாத இரவுகளில் ஒளித் துகள்களாக மின்னிய கடற்கரை மணல், சேறும் அழுகிய சிப்பியின் நண்டுகளும் கலந்த குழம்பாக மாறியிருந்தது. நண்டுகளை எறிந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிவந்தபோது நடுப்பகல் வெளிச்சம் மிகக் குறைவாக இருந்ததால் முற்றத்தின் பின்பகுதியில் அசைந்துகொண்டும் முனகிக்கொண்டும் இருந்தது எது என்று பார்ப்பது கடினமாக இருந்தது. மிக அருகில் போய்ப் பார்த்தபோதுதான் வயதான மனிதன் என்பதை பெலயோ கண்டான். மண்ணில் முகம் பதிய படுத்துக் கிடந்த வயோதிகனால் கடும் முயற்சி செய்தும் எழ முடியவில்லை. அவனுடைய பெரிய சிறகுகள் முயற்சிக்குத் தடையாக இருந்தன.

கோரக்காட்சியால் பயந்துபோன பெலயோ குழந்தையின் காய்ச்சலைக் குறைப்பதற்காக அதன்மீது ஈரத்துணியைப் போட்டு எடுத்துக்கொண்டிருந்த மனைவி எலிùஸண்டாவைக் கூட்டிக்கொண்டு வர ஓடினான். அவளை முற்றத்தின் பின்பகுதிக்கு அழைத்துப் போனான். இருவரும் பேச்சற்ற திகைப்புடன் தரையிலிருந்த உடலைப் பார்த்தார்கள். குப்பை பொறுக்குபவனைப்போல வயோதிகன் உடையணிந்திருந்தான். வழுக்கை மண்டையில் சில வெளுத்த முடிகளும் வாயில் மிகக் குறைந்த பற்களுமே இருந்தன. இருந்திருக்கக்கூடிய பெருமித உணர்வு நனைந்திருந்த குடுகுடு கிழவனின் பரிதாப நிலையால் மறைந்து போய்விட்டது. அழுக்காகவும் பாதி பிடுங்கப்பட்டும் இருந்த பெரிய பருந்துச் சிறகுகள் சேற்றில் சிக்கிக்கொண்டிருந்தன. பெலயோவும் எலிùஸண்டாவும் நீண்ட நேரம் மிக அருகில் பார்த்ததால் சீக்கிரத்திலேயே ஆச்சரியம் நீங்கி சகஜமாகப் பாவிக்க ஆரம்பித்தார்கள். பேசக்கூட முற்பட்டார்கள். மாலுமியின் வலிமையான குரலில் புரிந்துகொள்ள முடியாத மொழி வழக்கில் பதில் சொன்னான். கணவனும் மனைவியும் சிறகுகள் ஏற்படுத்திய அசெüகரிய உணர்வை இப்படியாகத்தான் ஒதுக்கிவிட்டு; சூறாவளியால் உடைந்துபோன வெளிநாட்டுக் கப்பலிலிருந்து வீசியெறியப்பட்டவன் என்று விவேகமாக முடிவு செய்தார்கள். இருந்தாலும் வாழ்வையும் சாவையும் பற்றி எல்லாம் தெரிந்த அண்டைவீட்டுப் பெண்ணைக் கூப்பிட்டு அவனைக் காண்பித்தார்கள். ஒரே பார்வையில் அவள் அவர்களுடைய தவறைச் சுட்டிக்காட்டினாள். ""தேவதூதன். குழந்தைக்காகத்தான் வந்து கொண்டிருந்திருக்க வேண்டும். வயோதிகம் காரணமாக மழை அவனைக் கீழே வீழ்த்திவிட்டது'' என்று சொன்னாள்.

பெலயோவின் வீட்டில் உயிருடன் தேவதூதன் பிடிபட்டிருக்கும் விஷயம் அடுத்த நாள் எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. விண்ணுலக சதியிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களே அந்த நாளைய தேவதூதர்கள் என்று அபிப்பிராயம் கொண்ட அண்டை வீட்டுப் பெண்ணின் கருத்துக்கு மாறாக வயோதிகனை அடித்துக் கொல்ல மனம் வரவில்லை. மாவட்ட நிர்வாகியின் உதவியாளனான பெலயோ தன் குண்டாந் தடியைக் கையில் பிடித்தபடியே சமையலறையிலிருந்து பிற்பகல் முழுக்க கண்காணித்துக் கொண்டிருந்தான். இரவு படுக்கைக்குப் போகும் முன்பாக சேற்றிலிருந்து இழுத்துக்கொண்டு போய் கம்பிவலை போட்ட கூண்டுக்குள் கோழிகளோடு அடைத்தான். மழை நடு இரவில் நின்ற பிறகும் பெலயோவும் எலிùஸண்டாவும் நண்டுகளைக் கொன்றுகொண்டிருந்தார்கள். சிறிது நேரம் கழித்து காய்ச்சல் நீங்கிக் கண்விழித்த குழந்தைக்குப் பசித்தது. தோணியில் மூன்று நாளைக்குத் தேவையான குடிநீரும் வைத்து தேவதூதனை ஏற்றி விதிப்படி நடக்கட்டும் என்று பெருங்கடலுக்குள் அனுப்பிவிட கணவனும் மனைவியும் பெருந்தன்மை பொங்கத் தீர்மானித்தார்கள். ஆனால் விடிந்தவுடன் முற்றத்துக்குப் போய் பார்த்தபோது சுற்று வட்டத்தார் அனைவரும் கோழிக்கூண்டுக்கு முன்னால் திரண்டிருந்ததைக் கவனித்தார்கள். கூட்டம் கொஞ்சம் பயமின்றி கம்பிவலை வழியாகத் தின்பண்டங்களை எறிந்தபடி விளையாடிக் கொண்டிருந்தது. தெய்வீக உயிரினம் என்று கருதாமல் சர்க்கஸ் மிருகத்தைப்போல நடத்தினார்கள்.

விசித்திர செய்தியைக் கேள்விப்பட்ட அருட்தந்தை கொன்ஸôகோ பதற்றமடைந்து ஏழு மணிக்கு முன்பாக வந்து சேர்ந்தார். இதற்குள் விடியற்காலை வந்த கூட்டத்தைவிட குறைவான விளையாட்டுப் புத்தி கொண்ட பார்வையாளர்கள் வந்து அடைத்து வைக்கப்பட்டவனின் எதிர்காலம் குறித்து பலவகையான யூகங்களில் ஈடுபட்டார்கள். அவர்களிலே மிகவும் எளிமையான ஒருவன் வயோதிகனை உலகின் மேயராக்கவேண்டும் என்று நினைத்தான். இன்னும் கொஞ்சம் கண்டிப்புப் பேர்வழிகள் எல்லா யுத்தங்களையும் வெற்றிக் கொள்வதற்காக அவனை ஐந்து நட்சத்திர தளபதியாக்க வேண்டும் என்று எண்ணினார்கள். பிரபஞ்ச நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்கும் சிறகுகள் கொண்ட புத்திசாலிகளின் இனமொன்றை பூமியில் உண்டாக்க அவனைச் சினைக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும் என்று சில கனவுலவாதிகள் ஆசைப்பட்டார்கள். அருட்தந்தை கொன்ஸôகவோ பாதிரியாவதற்கு முன்பு வீரியம் மிக்க விறகு வெட்டியாக இருந்தவர். கம்பிவலை பக்கத்தில் நின்றபடியே சமயத்துறை வினாவிடைப் புத்தகத்தை சில விநாடிகள் மேலோட்டமாகப் பார்த்தார். பிறகு வசீகரமான கோழிக்குஞ்சுகளுக்கு மத்தியில் முதுமையான பெட்டைக் கோழி போலத் தோன்றிய பரிதாபமான வயோதிகனை நெருக்கத்தில் பார்ப்பதற்காகக் கதவைத் திறந்துவிடச் சொன்னார். விடியற்காலையில் வந்த பார்வையாளர்கள் எறிந்த பழத்தோல்கள் மற்றும் காலை உணவின் மிச்சங்கள் ஆகியவற்றுக்கிடையே மூலையில் படுத்துக்கிடந்த அவன் தன் சிறகுகளைச் சூரிய ஒளியில் உலர்த்திக் கொண்டிருந்தான். பாதிரியார் கூண்டுக்குள் நுழைந்து லத்தீனில் காலை வணக்கம் சொன்னபோது மனிதர்களின் துடுக்குத் தனங்களைப் பற்றி கவலைப்படாத அவன் பழமையான கண்களை மட்டும் உயர்த்தி அவனுடைய மொழியில் ஏதோ முணுமுணுத்தான். கடவுளின் மொழியையோ அவருடைய மதகுருமார்களுக்கு எப்படி வந்தனம் சொல்வது என்பதையோ தெரிந்திராத அவனை மோசடிக்காரன் என்று பங்குத்தந்தை சந்தேகப்பட்டார். மிக அருகில் கவனித்தபோது அதிக மனிதச்சாயல் இருப்பதைப் பார்த்தார். அவனிடம் சகித்துக் கொள்ள முடியாத திறந்தவெளி மணம் ஒன்று. சிறகுகளின் பின்புறத்தை புல்லுருவிகள் அடைத்திருந்தன. பிரதான இறகுகள் அண்டவெளியின் காற்றால் சீர்கெட்டிருந்தன. அவனைச் சார்ந்த எதுவுமே தேவதூதர்களின் பெருமித மேன்மைக்கு ஒத்துவரவில்லை. கோழிக்கூண்டிலிருந்து வெளிவந்த அவர் வயோதிகன் மீது ஆர்வம் கொண்டிருந்தவர்கள் கள்ளங்கபடில்லாமல் அவனை நடத்துவதில் உள்ள ஆபத்துகள் குறித்து சிறு பிரசங்கம் செய்தார். சூதுவாது தெரியாதவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்த பிசாசு சில கேளிக்கைத் தந்திரங்களைக் கையாளும் என்பதை நினைவுறுத்தினார். பருந்துக்கும் விமானத்துக்கும் உள்ள வேறுபாட்டைத் தீர்மானிப்பதில் சிறகுகள் முக்கிய அம்சம் இல்லையென்றால் தேவதூதர்களை அடையாளம் காண்பதில் இன்னும் அவை முக்கியத்துவம் குறைந்தவை என்று வாதம் செய்தார். என்றாலும் இதுபற்றி பிஷப்புகளுக்குக் கடிதம் எழுதுவதாக உறுதி அளித்தார். பிஷப் அவருடைய தலைமைக் குருவுக்கும் தலைமைக் குரு போப்புக்கும் எழுதி மிக உயர்ந்த மத நீதிமன்றங்களிலிருந்து இறுதித் தீர்ப்பைப் பெற்றுத் தருவார்கள் என்றும் சொன்னார்.

பாதிரியுடைய விவேகம் பாறை மீது தூவப்பட்ட விதை போலானது. பிடிபட்ட தேவதூதன் பற்றிய செய்தி காட்டுத்தீ போல் பரவி சில மணி நேரங்களில் பெலயோ வீட்டு முற்றம் சந்தைக்கடையின் ஆரவாரப் பரபரப்பைப் பெற்றது. வீட்டையே தகர்த்துவிடும் அளவுக்குச் சேர்ந்து விட்ட கும்பலைத் துரத்த முனையில் கத்தி பொருத்தப்பட்ட துப்பாக்கிகள் ஏந்தி துருப்புகளை வரவழைக்க வேண்டியதாயிற்று. கும்பல் எறிந்துவிட்டுப் போன குப்பையைப் பெருக்கித் தள்ளியதால் எலிùஸண்டாவின் முதுகுத்தண்டு முறிந்து போனதைப்போல வலித்தது. தடுப்பு போட்டு தேவதையைப் பார்க்க ஐந்து ùஸன்ட் அனுமதிக் கட்டணமாக வசூலிக்கலாம் என்ற எண்ணம் அவளுக்கு அப்போதுதான் உண்டானது.

மிகத்தொலைவிலிருந்து வித்தை காட்டுபவர்களின் கூட்டம் ஊருக்கு வந்தது. கழைக்கூத்தாடி கூட்டத்தின் மீது "சர்சர்' என்று சில முறை பறந்து போனான். யாருமே அவனைக் கவனிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. காரணம் சிறகுகள் ஒத்தன தேவதூதனுடையவை அன்றி வெüவாலினதை. உலகிலேயே துயரமிக்க நோயாளிகள் ஆரோக்கியம் நாடி வந்தார்கள். குழந்தைப் பருவத்திலிருந்தே இதயத்துடிப்புகளை எண்ணிக்கொண்டு வந்து தற்போது எண்களே இல்லாமல் போய்விட்ட ஏழைப்பெண், நட்சத்திரங்களின் சப்தம் தொல்லைப்படுத்துவதால் தூங்க முடியாமல் போய்விட்ட போர்த்துக்கீசியன், விழித்திருந்தபோது செய்தவற்றை மாற்றிச்செய்ய இரவில் தூக்கத்தில் நடக்கும் ஒருவன், இவற்றைவிட ஆபத்து குறைந்த நேரங்களில் அவஸ்தைப்படும் மற்றும் பலர் வந்தார்கள். பூமியையே நடுங்க வைத்த அந்தக் கப்பல் விநாசம் ஏற்படுத்திய நிர்மூலத்துக்கிடையில் பெலயோவுக்கும் எலிùஸண்டாவுக்கும் சுகக்களைப்பும் உண்டானது. காரணம் ஒரு வாரத்திற்குள்ளாகவே தங்கள் வீட்டின் அறைகளைப் பணத்தால் நிரப்பியதுதான். தேவதூதனைப் பார்க்கக் காத்திருக்கும் யாத்ரீகர் வரிசை தொடுவானத்தையும் தாண்டிப் போயிற்று.

தன்னுடைய நாடகத்தில் தனக்கே பங்கு இல்லாத நபர் தேவதூதன் ஒருவன்தான். கம்பிவலையை ஒட்டி வைக்கப்பட்டிருந்த எண்ணெய் விளக்குகளும் புனிதச்சடங்கு சார்ந்த மெழுகுவர்த்திகளும் உண்டாக்கிய தாங்க முடியாத வெப்பத்தால் வெகுவாக அவதிப்பட்டாலும் தன்னுடைய கடன் வாங்கிய கூட்டில் முடிந்த அளவு செüகரியத்தை அடைய முயன்றான். முதலில் அவனை அந்துருண்டைகளைச் சாப்பிட வைக்க முயற்சி செய்தார்கள். தேவதூதர்களுக்கு வகுத்துக் கொடுக்கப்பட்ட உணவு அதுதான் என்று புத்திசாலி அண்டைவீட்டுப் பெண் சொன்னதற்கு ஏற்ப அப்படிச் செய்தார்கள். செய்த தவறுகளுக்குக் கழுவாய் மேற்கொள்பவர்கள் அவனுக்காகக் கொண்டு வந்த, போப்பாண்டவர் கொடுத்த, உணவை நிராகரித்ததுபோலவே அந்துருண்டைகளையும் நிராகரித்தான். கடைசியில் கத்திரிக்காய் மசியலைத் தவிர வேறெதையும் சாப்பிடாததற்குக் காரணம் அவன் தேவதூதனாக இருந்ததாலா வயோதிகனாக இருந்ததாலா என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. அமானுஷ்யமாக அவனிடம் இருந்த ஒரே நற்குணம் பொறுமைதான். குறிப்பாக சிறகுகளில் பல்கிப் பெருகிய நட்சத்திர மண்டல புல்லுருவிகளைத் தேடி கோழிகள் அவனைக் கொத்திய போதும், உடல் ஊனமுற்றவர்கள் தங்களுடைய ஊனமுற்ற பகுதிகளைத் தொட அவனுடைய சிறகுகளைப் பிடுங்கியபோதும், நிற்க வைத்துப் பார்ப்பதற்காக மேலதிக இரக்க குணம் உடையவர்கள் கூட அவன்மீது கற்களை எறிந்தபோதும் அசாத்திய பொறுமையைக் கடைப்பிடித்தான். ஒரு சமயம் பல மணி நேரங்களுக்கு அசைவற்றுக் கிடந்ததால் இறந்துவிட்டானோ என்று சந்தேகப்பட்டு எருதுக்குச் சூடு போடும் இரும்புக் கம்பியால் விலாவை எரித்தபோதுதான் அவர்களால் அவனை எழுப்ப முடிந்தது. திடுக்கிட்டு எழுந்த அவன் தன்னுடைய மாய உலக மொழியில் அவர்களை வசை பாடினான். கண்களில் நீர் வழிய இரண்டு முறை சிறகுகளை அடித்துக்கொண்டபோது கோழி எச்சமும் நிலாக்கோள தூசியும் கலந்த சூறைக்காற்றும் பீதிப்புயலும் தோன்றின். அவை இந்த உலகைச் சேர்ந்தவையாகத் தோன்றவில்லை. சூடு போட்டதற்கு அவனுடைய எதிர்வினை கோபத்தினாலன்றி வலியால்தான் உண்டானது என்று நிறைய பேர் நினைத்தாலும் அதன் பிறகு அவனைத் தொல்லைப் படுத்தாமலிருப்பதில் விழப்பாக இருந்தார்கள். காரணம், அவனுடைய சாத்வீகம் மாவீரனுக்குரிய சாந்தம் அல்ல, பிரளயத்தின் இளைப்பாறுதல் என்பதைப் பெரும்பான்மையோர் புரிந்துகொண்டதுதான்.

அருட்தந்தை கொன்ஸôகோ வேலைக்காரியின் வக்கணையும் பவ்வயமும் கலந்த வார்த்தைகளை உபயோகித்து தேவதூதனைப் பார்க்க வந்த கூட்டத்தின் துடுக்குத் தனத்தைத் தடுத்து நிறுத்தினார். அதேசமயம் சிறைப்பட்ட தேவதூதனின் தன்மை பற்றிய இறுதித் தீர்ப்பையும் மேலிடத்திலிருந்து எதிர்நோக்கியிருந்தார். ஆனால் ரோமிலிருந்து வந்த கடிதங்கள் எவ்வித அவசரத்தையும் வெளிப்படுத்தவில்லை. கைதிக்கு தொப்புள் இருந்ததா, அவனுடைய மொழி வழக்கு மேற்காசிய மொழி வகையோடு தொடர்பு ஏதும் கொண்டிருந்ததா, குண்டூசியன் தலைக்கு அவனுடைய உடலின் எத்தனை மடங்கு ஈடாகும், அவன் சிறகுகள் கொண்ட வெறும் நார்வேக்காரன்தானா என்பதையெல்லாம் ஆராய்வதிலேயே மேலிடத்தார் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்தார்கள். பாதிரியாரின் சிக்கல்களுக்குத் தெய்வீக சம்பவம் ஒன்று முற்றுப்புள்ளி வைக்காமலிருந்திருந்தால் அப்படியான அரைகுறையான கடிதங்களே வந்து போய்க்கொண்டு இருந்திருக்கும்.

அப்போதிருந்த பலவகையான கேளிக்கை ஈர்ப்புகளுக்கிடையே பெற்றோர் சொல்லுக்குக் கீழ்படியாததால் சிலந்தியாக மாற்றப்பட்ட பெண் ஒருத்தியைக் காட்சிப் பொருளாக்கும் குழு ஊருக்கு வந்தது. பார்க்க தேவதூதனை விட அவளுக்குக் கட்டணம் குறைவாக இருந்தது மட்டுமின்றி அவளுடைய அபத்தமான நிலை பற்றி அவளைக் கேள்விகள் கேட்கவும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். அவளுடைய கோரத்தைப் பற்றிய உண்மையை யாரும் சந்தேகிக்க அவசியம் ஏற்படாமலிருக்க அவளை முழுக்கத் துருவி ஆராயவும் அனுமதிக்கப்பட்டார்கள். ஆட்டுக்கடா அளவுக்கு உருவமும் சோகமான இளம் பெண்ணின் முகமும் கொண்ட பயங்கரமான சிலந்தி அவள். அசாதாரண உருவத்தை விடவும் துயரத்தை விவரங்களுடன் உண்மையான வேதனையுடன் சொன்ன விதம் நெஞ்சைப் பிளப்பதாக இருந்தது. குழந்தையாக இருந்தபோது நடனமாடுவதற்காக வீட்டைவிட்டு திருட்டுத்தனமாகப் போனாள். அனுமதியின்றி விடியவிடிய நடனமாடிப் பின் காட்டு வழியே வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பயங்கரமான இடி வானத்தையே இரண்டாகப் பிளந்தது. பிளவின் வழியாக வெளிப்பட்ட கந்தக மின்னல் அவளைச் சிலந்தியாக மாற்றிவிட்டது. தயாள குணமுடைய சிலர் அவளை நோக்கி எறிந்த கொத்துக்கறி உருண்டைகளே அவளுக்குக் கிடைத்த உணவு. மனித அனுபவ மெய்மையும் பயங்கர படிப்பினையும் கொண்ட இப்பெண்ணின் காட்சி, மனிதர்களை அபூர்வமாகவே அன்புடன் பார்க்கும் இறுமாப்பு கொண்ட தேவதூதனின் காட்சியை எளிதாகத் தோற்கடித்தது. மேலும் தேவதூதனால் நிகழ்த்தப்பட்டதாகச் சொல்லப்பட்ட சில அற்புதங்கள் ஒரு வகையான மனப்பிறழ்வைக் கொண்டிருந்தன. உதாரணமாக, பார்வை திரும்பப் பெறாத குருடனுக்கு மூன்று புதிய பற்கள் முளைத்தது. பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டவன் நடப்பதற்கு பதிலாக லாட்டரியில் ஜெயித்தது, தொழுநோயாளியின் புண்களிலிருந்து சூரியகாந்திப் பூக்கள் முளைவிட்டது போன்றவை. இதுமாதிரியான கேலிக்கிடமான, ஆறுதல் பரிசு போன்ற அற்புதங்கள் தேவதூதனின் புகழைச் சிதைத்திருந்தன. இப்படியாகத்தான் அருட்தந்தை கொன்ஸôகோவின் தூக்கமின்மை பூரணமாக நீங்கியது. மூன்று நாட்கள் மழை பெய்தபோது இருந்ததைப்போல பெலயோவின் முற்றம் வெறுமை அடைந்தது. படுக்கையறைக்குள் நண்டுகள் நடந்து திரிந்தன.

வீட்டுச் சொந்தக்காரர்கள் கவலைப்பட காரணமேயில்லை. குளிர் காலத்தில் வண்டுகள் நுழையாதபடி இரும்புச் சட்டங்கள் பொருத்தப்பட்ட ஜன்னல்களும் தோட்டங்களும் இரும்புச் சட்டங்கள் நிர்மாணிக்கப்பட்ட இரண்டடுக்கு மாளிகை ஒன்றையும் சேமித்த பணத்தில் கட்டினார்கள். நகரத்துக்கு அருகில் பெலயோ முயல் பண்ணை அமைத்து வேலையையும் நிரந்தரமாக விட்டுவிட்டான். அந்த நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் அழகான பெண்கள் அணியும் வானவில் வண்ணங்களைக் காட்டும் பட்டு ஆடைகளையும் குதி உயர்ந்த ஸôட்டின் காலணிகளையும் எலிùஸண்டா வாங்கினாள். கோழிக்கூண்டைப் பற்றி மட்டும் அவர்கள் நினைக்கவேயில்லை. கிருமிநாசினி உபயோகப்படுத்திக் கழுவி அடிக்கடி நறுமணப் பிசினை வைத்து அவர்கள் எரித்தது தேவதூதனை வழிபாடு செய்வதற்கு அல்ல. பூதத்தைப் போல எல்லா இடங்களிலும் பரவி புதிய வீட்டைப் பழையதாக மாற்றிக் கொண்டிருந்த கழிவுக் குவியலின் துர்நாற்றத்தைப் போக்கத்தான். முதலில் குழந்தை நடக்கக் கற்றுக்கொண்டபோது கோழிக்கூண்டு அருகில் போகாதவாறு கவனமுடன் பார்த்துக் கொண்டார்கள். ஆனால் பிறகு பயம் நீங்கி நாற்றத்துக்குப் பழகிப் போனார்கள். இரண்டாவது பல் முளைப்பதற்கு முன்பாக குழந்தை கோழிக்கூண்டுக்குள் நுழைந்து விளையாடினான். கூண்டின் கம்பிகள் இற்று விழ ஆரம்பித்தன. மற்ற மனிதர்களிடமிருந்து ஒதுங்கியிருந்ததைப் போலவே குழந்தையிடம் இருந்தும் தேவதூதன் ஒதுங்கியே இருந்தான். ஆனாலும் ஏற்பட்ட பெருத்த அவமானங்களை மாயத் தோற்றங்களால் மயங்காத நாயின் பொறுமையோடு சகித்துக் கொண்டான். அவனுக்கும் குழந்தைக்கும் ஒரே சமயத்தில் தட்டம்மை வந்தது. குழந்தையைக் கவனித்த டாக்டருக்கு தேவதூதனுடைய இதயத்தின் சப்தத்தைக் கேட்கும் ஆவலை அடக்க முடியவில்லை. இதயத்திலிருந்து விஸில் சப்தத்தையும் சிறுநீரகங்களிலிருந்து பல வகையான சப்தங்களையும் கேட்ட டாக்டருக்கு அவன் இனி உயிர் வாழ்வது முடியாத காரியம் என்று பட்டது. அவருக்கு அதிக ஆச்சரியத்தை அளித்தது சிறகுகள் மனித உருவத்துக்கு மிக இயல்பாகக் பொருந்தியிருந்ததுதான். மற்ற மனிதர்களுக்கும் ஏன் சிறகுகள் இல்லை என்பதைத்தான் அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை.

மழையும் வெயிலும் கோழிக்கூண்டை முற்றிலும் சிதைத்த சில நாட்களுக்குப் பிறகு குழந்தை பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தது. மரணத் தறுவாயில் இருக்கும் திக்கற்றவனைப்போல தேவதூதன் இங்கேயும் அங்கேயும் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தான். படுக்கையறையிலிருந்து துடைப்பத்தால் அவனை அவர்கள் துரத்திய சில விநாடிகளில் சமையலறையில் இருப்பதைப் பார்ப்பார்கள். ஒரே சமயத்தில் பல இடங்களில் அவன் இருப்பதைப்போல உணர்ந்த அவர்கள், தன்னை இரட்டிப்பாக்கிக் கொண்டானோ, தன்னை இனப்பெருக்கம் செய்து கொண்டானோ என்றும் சந்தேகப்பட்டார்கள். எரிச்சலும் மனநலக்கேடும் அடைந்த எலிùஸண்டா தேவதூதர்கள் நிரம்பிய அந்த நரகத்தில் வாழ்வது பயங்கரமானது என்று கத்திச் சொன்னாள். அவனால் அரிதாகவே சாப்பிட முடிந்தது. மூப்புற்ற கண்களில் திரை விழுந்ததால் கம்பங்களில் மோதிக்கொண்டான். இறகுகளே உதிர்ந்து போனதால் நாணற் புல் போன்ற எலும்பமைப்பை சிறகுகள் பெற்றன. பெலயோ இரக்கம் கொண்டு அவன் மீது கம்பளியைப் போட்டு கொட்டகையில் படுத்துத் தூங்க அனுமதித்தான். பிறகுதான் இரவில் அவனுக்குக் காய்ச்சல் வந்ததையும் உச்சரிக்க சிரமமான வார்த்தைகளை அவன் பிதற்றுவதையும் கவனிக்க முடிந்தது. அவர்கள் கலவரமடைந்த சில தருணங்களில் அதுவும் ஒன்று. காரணம் இறந்துவிடப் போகிறான் என்று அவர்கள் நினைத்ததும், இறந்துபோன தேவதூதர்களை என்ன செய்வது என்று புத்திசாலியான அண்டை வீட்டுப் பெண்ணால்கூட சொல்ல முடியாததும்தான்.

இருந்தும் மோசமான குளிர்காலத்துக்கு ஈடுகொடுத்து வாழ்ந்தது மட்டுமன்றி வெயில் காயும் நாட்கள் ஆரம்பித்தவுடன் உடல் ரீதியாக முன்னேறவும் செய்தான். முற்றத்தில் யாரும் பார்க்காத மூலையில் அசைவின்றிப் பல நாட்கள் இருந்தான். டிசம்பர் மாத ஆரம்பத்தில் சிறகுகளில் சோளக் கொல்லைப் பொம்மைக் காக்கையின் இறகுகளைப் போன்ற விரைப்பான இறகுகள் வளர ஆரம்பித்தன. முதுமையின் இன்னொரு துயரமாகத் தோன்றியது. மாற்றங்களுக்கான காரணம் அவனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் மாற்றங்களை யாரும் பார்க்கக் கூடாது என்பதிலும் நட்சத்திரங்களுக்குக் கீழே சமயங்களில் அவன் பாடிய கடலோடிகளின் பாடல்களை யாரும் கேட்டுவிடக் கூடாது என்பதிலும் மிக கவனமாக இருந்தான். ஒரு காலையில் எலிùஸண்டா மதிய உணவுக்காக வெங்காயங்களை நறுக்கிக்கொண்டிருந்த போது நடுக்கடலிலிருந்து வந்ததைப் போன்ற காற்று சமையலறைக்குள் வீசியது. ஜன்னலருகே போன அவள் பறப்பதாகத் தேவதூதன் செய்த முதல் முயற்சிகளைப் பார்த்தாள். முயற்சிகள் அலங்கோலமாக இருந்ததால் விரல் நகங்கள் காய்கறிப் பாத்தியில் பள்ளத்தை உண்டாக்கின. சிறகடித்து மேலெழும்பி காற்றில் நிலைகொள்ள முடியாமல் கொட்டகையை இடித்துத் தள்ளி விடுபவன்போல திணறினான். ஆனால் விரைவில் உயரே பறக்க முடிந்தது. வயோதிக வல்லூறின் ஆபத்தான சிறகடிப்போடு அவன் கடைசி வீடுகளைக் கடந்து போனதைப் பார்த்த எலிùஸண்டா அவனுக்கும் தனக்குமான நிம்மதிப் பெருமூச்சை விட்டாள். வெங்காயங்களை நறுக்கிக்கொண்டிருந்தபோது அவனைக் கவனித்தபடியே இருந்தாள். கண் பார்வையிலிருந்து மறையும்வரை பார்த்தாள். ஏனென்றால் அவளுடைய வாழ்க்கையில் இனிமேல் அவன் தொல்லையாக இல்லாமல் கடலின் தொடுவானத்தில் கற்பனைப் புள்ளியாக மட்டுமே இருக்கப் போகிறான்.

*******

நூல்: பிறமொழிக் கதைகள்; தமிழில் : ஆர்.சிவகுமார் பதிப்பகம்: யுனைடெட் ரைட்டர்ஸ்

ஆங்கிலத்தில் படிக்க இங்கே செல்லவும்

Tuesday, April 19, 2011

கர்லூ பறவைகள்-கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்

த‌மி‌ழி‌ல் : கால சு‌ப்‌பிரம‌ணிய‌ம்

நாங்கள் மூவரும், மேஜையைச் சுற்றி உட்கார்ந்திருந்தோம், நாணயத்தை யாரோ துளைக்குள் போட வுல்லிட்ஸர் மீண்டும் இசைத்தட்டினை - இரவு முழுதும் பாடிக் கொண்டிருந்த அதே இசைத்தட்டினை - மறுபடியும் இசைத்தது. பின்பு எங்களுக்கு யோசித்துப் பார்க்கக் கூட நேரம்  வைக்காமல், அதிவேகமாக நிகழ்ந்துவிட்டது அந்த பின் நிகழ்வு. எங்கிருக்கிறோம் என்று நினைத்துப் பார்க்குமுன் - இருக்குமிடத்தின் ஞாபகத்தை நாங்கள் திரும்ப நினைவுக்குக் கொண்டு வருமுன் - அது நிகழ்ந்தது.

எங்களில் ஒருத்தன், தன் கரத்தைக் கெளண்டருக்கு மேல் நீட்டி (அந்தக் கையைப் பார்க்கவில்லை - கேட்டோம்) இருட்டில் தடவினான். ஒரு தம்ளரை அது தள்ளிவிடவே, இருகரங்களையும்ட கரடு முரடான தரை‌யில் ஊன்றிக் கொண்டு இருட்டில் துளாவினான். marquez_gabriel

பின்பு மூவரும் இருட்டுக்குள் எங்களை நாங்கள் பார்த்துக் கொள்ள முயன்றோம். முப்பது விரல்கள் இணைந்ததை வைத்து நாங்கள் அங்கிருப்பதை உணர்ந்து கொண்டோம். கல்லாவின் கெளண்டரைப் பற்றிப் பிடித்துக் கொண்டோம். நாம் கிளம்பலாம் என்று எங்களில் ஒருத்தன் சொன்னான். பின்பு எதுவும் நிகழாதது போல், எழுந்து நின்றோம். நாங்கள் திகைப்படைவதற்குக் கூட இன்னும் நேரம் கிடைக்கவில்லை.

முற்றம் வழியாகச் சென்றபோது, அருகிலிருந்து இசை சுழன்று வந்து எங்களை அடைவதைக் கேட்டோம். சோகித்த பெண்கள், உட்கார்ந்தபடியே காத்துக் கொண்டிருக்கும் வாசனையைப் பிடித்தோம். கதவை நாங்கள் அடைவதற்குள அந்த ஹாலின் நீண்ட வெறுமையினை உணர்ந்தோம். வேறு வாசனைகள் எங்களைச் சூழ்ந்து கொள்ளுமுன், கதவுக்கருகில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணின் புளித்த மணத்தை நோக்கிச் சொன்னோம், போய் வருகிறோம்.

அந்தப் பெண் எந்தப் பதிலும் கூறவில்லை. அவள் எழுந்து நின்றதால், ஆடும் நாற்காலி கிரீச்சிட்டது. தளர்ந்த பலகைத் தரையில், காலடிகளை உதைந்துச் சென்றதையும் திரும்பி வந்து அப்பெண் உட்கார்ந்ததையும் அப்போது திரும்பவும் ஒரு முறை கீல்கள் கிரீச்சிட்டதையும் பின்பு எங்களுக்குப் பின் கதவு மூடிக் கொண்டதையும் கேட்டோம்.

நாங்கள் சுற்றிச் சுற்றி நடந்தோம். நேர் எதிரே - பார்க்க முடியாத ஓர் கடும் விடியலின் மென்காற்று;அதை வெட்டுவது போல எங்களுக்கு பின் ஒரு குரல் இதைச் சொன்து, வழி விடுங்கள் உள்ளே போக வேண்டும்.

நாங்கள் பின்னுக்கு நகர்ந்தோம். அந்தக் குரல் மீண்டும் சொன்னது. நீங்கள் இன்னும் கதவுக்கு எதிரில்தான் இருக்கிறீர்கள்.

அதன்பிறகு எல்லாப் பக்கமு‌ம் நகர்ந்து பார்த்துவிட்டு, அந்தக் குரலை எல்லா இடத்திலும் கேட்டு, நாங்கள் இதைச் சொன்னோம். கல்லூக்கள் எங்கள் கண்களைக் கொத்திக் கொண்டு போய்விட்டன. நாங்கள் இங்கிருந்து போக வழி தெரியாமல் நிற்கிறோம்.

உடனே பல கதவுகள் திறந்து கொள்வதைக் கேட்டோம். பின்பு, எங்கள் கரங்களிலிருந்து எங்களில் ஒருவனை, வழி பார்த்து வர விடுத்துவிட்டோம். அவன் இருட்டுக்குள நகர்ந்து செல்வதைக் கேட்டோம். பல்வேறு பொருட்களை எங்களை அடர்ந்து சூழ்ந்து கொண்டிருக்க, எங்கோ இருட்டுக்குள் இருந்து அவன் பேசினான். நாம் போக வேண்டிய இடம், அருகில் எங்கேயோதான் இருக்க வேணும்.

அவன் மேலும் சொன்னான். நிறைந்து வழியும்படி குவிக்கப்பட்ட தொட்டிகளின் நாற்றம் இங்கே சுற்றிலும் இருக்கிறது.

மறுபடியும் அவனுடைய கரங்கள் இணைவதை உணர்ந்தோம். எதிரிலிருந்த ஒரு சுவரில் சாய்ந்து கொண்டு நின்றோம். எங்கள் கூடவே வந்த வேறொரு குரல், இப்போது எங்களைக் கடந்து சென்றது - ஆனால் எதிர்த்திசையில்.

`இவைகள் சவப்பெட்டிகளாய்த்தான் இருக்க வேண்டும்' எங்களில் ஒருத்தன் சொன்னான். அவனாகவே, எங்களை ஒரு மூலைக்கு இழுத்துச் சென்றான், எங்களுக்குப் பக்கத்தில் மூச்சு விட்டுக் கொண்டு பின்பு சொன்னான். `இவை பெட்டிகள்தான். குவித்து வைக்கப்பட்ட துணிகளின் நாற்றத்தைக் கண்டு சொல்லும் திறமை எனக்குச் சின்ன வயசிலிருந்தே இருக்கிறது'

பின்பு நாங்கள் அத்திசையில் நகர்ந்தோம். தரை மிருதுவாயும், மெத்தென்றுமிருந்தது. நாங்கள் நடந்து சென்றது வளமான ஒரு நிலத்தின் மீது. எங்களில் யாரோ ஒருத்தன் கரத்தை நீட்டி எங்களை நிறுத்தினான். ஆரோக்கியமான உயிர்த்துடிப்புள்ள ஒரு தோலின் தொடர்பை உணர்ந்தோம். ஆனால் எதிரிலிருந்த சுவரையோ, நாங்கள் நீண்ட நேரமாக உணரவேயில்லை.

`இது ஒரு பெண்' நாங்கள் சொல்லிக் கொண்டோம். எங்களில் ஒருத்தன் - பெட்டிகளைப் பற்றி பேசியவன் - சொன்னான். `அவள் தூங்குகிறாள் என்று நினைக்கிறேன்.'

எங்கள் கரங்களின் ஸ்பரிசத்தில், அவள் உடல் அசைந்தது; நெளிந்தது. எங்களின் கையெல்லையை மீறி அது போகவில்லை என்றாலும், அது நழுவிச் செல்வதை உணர்ந்தோம். ஆனால் அது இன்னும் எழுந்து நிற்கவில்லை.

அசையாமல் சிறிது நேரம் நின்றோம். பின்பு மற்றவர் தோள்களில் சாய்ந்து உறுதிப்படுத்திக் கொண்டு நின்றோம். பிறகு அவர் குரலைக் கேட்டோம்.

`யாரது?' என்று அது கேட்டது.

"நாங்கள்தான்" நாங்கள் நகராமல் பதிலளித்தோம். கிரீச்சும் கேட்டன. இருட்டுக்குள் காலணிகளுக்காகத் தேடி நகர்ந்தன அந்தப் பாதங்கள். இன்னும் முழுசாக விழித்துக் கொள்ளாமல், உட்கார்ந்தபடியே எங்களைப் பார்க்கும் ஒரு பெண்ணை மனதில் வரைந்து கொண்டோம்.

`இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?' அவள் கேட்டாள். உடனே நாங்கள் பதிலளித்தோம் : `எங்கிருக்கிறோம் என்று எங்களுக்குத் தெரியவில்லை. கர்லூக்கள் எங்கள் கண்களைக் கொத்தி எடுத்துவிட்டன.'

இந்த விஷயம் பற்றி தான் ஏதோ கேள்விப்பட்டதாக அவள் சொன்னாள். செய்தித்தாள்கள் இதைப் பற்றிச் சொல்லியிருந்தன. மூன்று மனிதர்கள், ஏழு கர்லூக்கள் (ஐந்து அல்லது ஆறு கர்லூக்கள்) இருந்த ஒரு முற்றத்தில் குடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களின் ஒருவன் கர்லூக்களைப் போலவே பாடத் தொடங்கினான். அவைகளைப் போலி செ‌ய்தான். `இதில் மோசம் என்னவென்றால், ஒரு மணி நேரத்திற்குப் பின்னால் அங்கே போய் அவர்களோடு சேர்ந்து கொண்டவன் அவன்' அவள் சொன்னாள். மேஜைமேல் அந்தப் பறவைகள் தாவிக்குதித்து, அவர்களின் கண்களைக் கொத்தி எடுத்துச் சென்றுவிட்டன.

செய்தித்தாள்களில் சொல்லியதை அவள் எல்லோருக்கும் சொன்னாள். ஆனால் யாரும் அதை நம்பவில்லை.

நாங்கள் சொன்னோம் :`ஜனங்கள் அங்கே போயிருந்தால், அந்தக் கர்லூக்களைப் பார்த்திருக்கலாம்.'

உடனே அந்தப் பெண் சொ‌ன்னாள் :`அடுத்த நாள் அந்த முற்றம் நிறைய, ஜனங்கள் கூடி விட்டார்கள் என்றுதான் சொன்னார்கள். ஆனால் அந்த பெண் முன்னதாகவே அந்தக் கர்லூக்களை எடுத்துக் கொண்டு எங்கோ சென்றுவிட்டாள்.'

நாங்கள் சுற்றித் திரும்பி நடக்கத் தொடங்கியதும் அந்தப் பெண் சொல்வதை நிறுத்திவிட்டாள். மறுபடியும் அந்தச் சுவர்தான் எதிரிலிருந்தது. சும்மா சுற்றித் திரும்பியதுமே நாங்கள் அந்தச் சுவரைக் கண்டுபிடித்துவிட்டோம். எங்களைச் சுற்றி, எங்களைச் சூழ்ந்து எப்போதும் ஒரு சுவர். ஒருத்தனை மறுபடியும் எங்கள் கரங்களிலிருந்து விடுவித்தோம். அவன் மீண்டும் தவழ்ந்து செல்வதையும் நிலத்தை முகர்வதையும் பின்பு தொடர்வதையும் கேட்டோம்.

இப்போது அந்தப் பெட்டிகள் எங்கே என்று எங்களுக்குத் தெரியவில்லை.`இப்போது நாம் வேறு எங்கோ வந்துவிட்டோம் என்று நினைக்கிறேன்' கூடவே இதையும் சொன்னோம்: `இங்கே வா. இங்கே நமக்கு அருகில் யாரோ இருக்கிறார்கள்.

பிரிந்து சென்றவன் அருகில் வருவதைக் கேட்டோம். அவன் எங்களுக்குப் பக்கத்தில் நிற்பதையும் அவனது சூடான மூச்சு எங்கள் முகத்தைத் தாக்குவதையும் உணர்ந்தோம். `அந்த வழியாகப் போ' அவனுக்குக் கூறினோம். `நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஏதோ ஒன்று அங்கே இருக்கிறது.'

அவன் அதைச் சென்று அடைந்திருக்க வேண்டும். நாங்கள் குறிப்பிட்ட இடத்தை அவன் நகர்ந்து சென்று சேர்ந்திருக்க வேண்டும். ஏனென்றால் அடுத்த கணம், உடனே அவன் திரும்பி வந்து எங்களிடம் சொன்னான்.

`அது ஒரு பையன் என்று நினைக்கிறேன்'

உடனே நாங்கள் அவனுக்குச் சொன்னோம் : `சரி... அவனுக்கு நம்மைத் தெரியுமா என்று கேள்.'

அவன் அந்தக் கேள்வியைக் கேட்டான். அந்தப் பையனின் கவலையற்ற சன்னக் குரலை நாங்கள் கேட்டோம். அவன் சொன்னான் : `ஆம் உங்களைத் தெரியும். நீங்கள்தானே கர்லூக்களால் கண்கள் கொத்தி எடுக்கப்பட்ட அந்த மூன்று பேர்?'

பின் ஒரு வயதான குரல் பேசியது, மூடிய கதவுக்குப் பின்னாலிருந்து வந்தது போல் தோன்றிய அந்தப் பெண் குரல் சொன்னது :`மறுபடியும் நீ உனக்குள் பேச ஆரம்பித்துவிட்டாயா?'

அந்தக் குழந்தையின் சாவதானமான குரல் சொன்னது :`இல்ல¨.. கர்லூக்களால் கண்கள் கொத்தி எடுக்கப்பட்ட மனிதர்கள்.. மறுபடியும் இங்கே வந்திருக்கிறார்கள்.'

கீல்களின் சத்தம். பிறகு முதல் தடவையைவிட மிக அருகில் அந்த வயதான குரல் :`அவர்களை வீட்டுக்கு அழைத்துப் போ.' அவள் சொன்னாள்.

அந்தப் பையன் சொன்னான் :`அவர்கள் எங்கே வசிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது.'

அந்த வயதான குரல் சொன்னது :`அர்த்தம் இல்லாமல் உளராதே. இவர்கள் இங்கே வசிக்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அந்த கர்லூக்கள் இவர்கள் கண்களைக் கொத்திச் சென்ற இரவிலிருந்தே இது இங்கே எல்லோருக்கும் தெரியும்.'

பின்பு, அவள் மாறுபட்ட குரலில், எங்களை நோக்கிப் பேசுவது போல் தொடர்ந்து கூறினாள் :`என்ன நடந்தது என்பது யாராலும் நம்ப முடியாததாகத்தான் இருக்கிறது. மேலும் இது பேப்பர்காரர்களால் அவைகளின் வியாபாரத்தை அதிகரிக்க, மிகைப்படுத்தப்பட்ட ஒரு ஆதாரமற்ற தகவல் என்றும் சிலர் சொல்கிறார்கள். யாரும் அந்த கர்லூக்களைப் பார்க்கவில்லை.'

உடனே அச்சிறுவன் சொன்னான் :`ஆனால் இவர்களைத் தெரு வழியே இட்டுச் சென்றால், என்னை யாரும் நம்பமாட்டார்கள்.'

நாங்கள் நகரவில்லை. சுவரில் எதிரிட்டுச் சாய்ந்து நிலைத்து நின்று, அவளைக் கவனித்துக் கேட்டோம். மேலும் அந்தப் பெண் சொன்னாள் :`இவன் உங்களைக் கூட்டிச் செல்லலாம் என்று நினைத்தான் என்றால் மட்டும் அது வேறு விதமாகிவிடும். ஒரு சிறு பையன் சொல்வது பற்றி யாரும் பெரிசாகக் கவனம் செலுத்த மாட்டார்கள்.'

அந்தக் குழந்தையின் குரல் குறுக்கிட்டது. `இவர்களுடன் நான் தெருவில் சென்றாலோ, இவர்கள்தான் அந்தக் கர்லூக்களால் கண்கள் இழந்த மனிதர்கள் என்று சொன்னாலோ, பையன்கள் என் மேல் கல்லை விட்டெறிந்தார்கள். தெருக்காரர்கள் ஒவ்வொருவரும் சொல்கிறார்கள், அது ஒருபோதும் நடந்திருக்காது என்று.'

அங்கு ஒரு கணநேர அமைதி. பின்பு அந்தக் கதவு மறுபடியும் மூடிக் கொண்டது. அந்தப் பையன் பேசினான் : அதில்லாமல் நான் இப்போது `டெர்ரியும் கடற்கொள்ளைக்காரர்களும்' படித்துக் கொண்டிருக்கிறேன்.

காதுக்குள் எங்களில் யாரோ ஒருத்தன் சொன்னான் : `அவனை நான் வழிக்குக் கொண்டு வருகிறேன்.' குரல் வந்த இடத்துக்கு அவன் தவழ்ந்து சென்றான். `அந்தக் கதை எனக்கு ரொம்பப் பிடிக்கும்' என்றான். : `இந்த வாரம் டெர்ரிக்கு என்ன நடந்தது என்பதையாவது எங்களுக்குச் சொல்லேன்.'

தன் சாதுரியத்தால் அவன் காரியம் சாதிக்க முயற்சி செய்கிறான் என நினைத்தோம். ஆனால் அந்தப் பையன் சொன்னான் : `எனக்கு அந்த கதையென்றும் பிடித்தமானதில்லை. நான் ஆசைப்படும் ஒரே ஒரு பொருள், பெயிண்ட்தான்.'

`டெர்ரி ஒரு ஆபத்தான கட்டத்தில் இருக்கிறான்' நாங்கள் சொன்னோம்.

உடனே அந்தப் பையன் சொன்னான் :`அது வெள்ளிக்கிழமை. இன்று ஞாயிற்றுக்கிழமை. மேலும் நான் விரும்புவது பெயிண்ட் மட்டும்தான்' அவன் இதை உணர்ச்சியற்ற வேறுபட்ட குரலில் உஷ்ணத்துடன் சொன்னான்.

மற்றவன் திரும்பி வந்ததும் நாங்கள் சொன்னோம். `நாங்கள் மூன்று நாட்களுக்கு மேல் அலைந்து திரிகிறோம். ஒரு நிமிஷம் கூட இளைப்பாற முடியாமல் கிடந்து தவிக்கிறோம்.'

ஒருத்தன் சொன்னான் :`சரி. கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்வோம். ஆனால் ஒருவர் கையை மற்றவர் போக விட்டுவிட வேண்டாம்.'

கீழே அமர்ந்தோம். பார்க்க முடியாத சூரியன் எங்களின் தோள்களைச் சூடாக்கத் தொடங்கினான். சூரியனின் புறப்பாடு கூட எங்கள் ஆவலைத் தூண்டவில்லை. முன்பே தொலைந்து போய்விட்ட தூரம் பற்றிய ஞாபகத்தால் காலம், திசை எல்லாவற்றிலும் நாங்கள் அந்த தூரத்தையே நினைவுகொண்டோம். பல குரல்கள் கடந்தன.

`கர்லூக்கள் எங்கள் கண்களைக் கொத்திக் கொண்டு போய்விட்டன' - நாங்கள் சொன்னோம்.

அதில் ஒரு குரல் சொன்னது : `இது உண்மைதானா என்று செய்தித்தாள்களைப் படித்துப் பார்க்க வேண்டும்.'

அந்தக் குரல்கள் சென்று தேய்ந்தன. தோளோடு தோள் இணைய நாங்கள் அப்படியே உட்கார்ந்திருந்தோம். கடந்து செல்லும் குரல்களை, கடந்து செல்லும் மன உருவங்களை, மணத்தாலோ ஒலியாலோ - அவை கடந்து செல்வதை உணர்ந்தபடி காத்திருந்தோம். எங்களின் உச்சந்தலைக்கு மேல் சூரியன் மேலும் அதிகச் சூட்டைக் கிளப்பினான். பின்பு எங்களுள் ஒருவன் சொன்னான் :`அந்தச் சுவரை நோக்கி மறுபடியும் போவோம்.'

பார்க்க முடியாத வெளிச்சத்தை தலைகளை அண்ணாந்து நோக்கியபடி அசையாமலிருந்துகொண்டு மற்ற இருவரும் சொன்னோம்.

`இப்போது வேண்டாம். சூரியன் சாய்ந்து நம் முகத்தில் காயத் தொடங்கும் வரை நாம் காத்திருப்போம்.'

****

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் நோப‌ல் ப‌ரிசு பெ‌ற்ற ல‌த்‌தீ‌ன் அமெ‌ரி‌க்க எழு‌த்தாள‌ர். மே‌ஜிக‌ல் ‌ரிய‌லிச‌ம் எ‌ன்ற வகை எழு‌த்தா‌ல், ‌மிக‌ப் ‌பிரபல‌ம் பெ‌ற்றவ‌ர். இவரது `ஒரு நூ‌ற்றா‌ண்டு‌த் த‌னிமை' நாவ‌ல், உல‌கி‌ன் ‌சிற‌ந்த நாவ‌ல்களு‌ள் ஒ‌ன்றாக‌க் கருத‌ப்படு‌கிறது. ‌சிற‌ந்த ‌சிறுகதைகளையு‌ம் இவ‌ர் படை‌த்த‌ளி‌த்து‌ள்ளா‌ர்.

 ந‌ன்‌றி - ச‌‌ங்கேத‌ங்களு‌ம் கு‌றி‌யீடுகளு‌ம் - மேலைநா‌ட்டு‌ச் ‌சிறுகதைக‌ள் : விலை: ரூ 85

வெ‌ளி‌யீடு : குரு‌த்து, பிச்சாண்டம் பளையம், பொலவக்காளி பாளையம் அஞ்சல், கோபிச்செட்டிப்பாளையம், ஈரோடு மாவட்டம்-638476

Saturday, April 2, 2011

விஷமருந்தி இறந்த பதினேழு ஆங்கிலேயர்கள்-கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்

தமிழில்: சுகுமாரன்

நேப்பிள்ஸ் துறைமுகத்தை அடைந்ததும் திருமதி.புருடென்ஷியா லினெரோ முதலில் கவனித்தது அந்தத் துறைமுகத்துக்கும் ரியோஹாச்சா துறைமுகத்தின் அதே வாடை இருக்கிறது என்பதைத்தான். அவர் அதை யாரிடமும் சொல்லவில்லை. சொன்னாலும்  யாருக்கும் புரியாது. பியூனஸ் அயர்சிலிருந்து வரும் அந்தக் கப்பல் போர் முடிந்த பின்பு முதல்முறையாக சொந்த நாட்டுக்குத் திரும்பும் இத்தாலியர்களால் நிரம்பியிருந்தது. எனினும் எழுபத்திரண்டாம் வயதில் உறவினர்களையும் சொந்த மண்ணையும் விட்டு கொந்தளிக்கும் கடலில் பதினெட்டு நாட்கள் garcia-marquez-300x210 பயணம் செய்த அவருக்கு பெரும் தனிமையோ பயமோ இழப்புணர்வோ எதுவும் தோன்றவில்லை.

விடியற்காலையிலிருந்தே கரை விளக்குகள் தெரிந்து கொண்டிருந்தன. பயணிகள் வழக்கத்தைவிடச் சீக்கிரமாக எழுந்திருந்தார்கள். புத்தாடைகளை அணிந்துகொண்டு கரையிறங்கியதும் நேரக்கூடிய நிச்சமின்மைகளை யோசித்து மனம் கனத்துக்கொண்டிருந்தார்கள். அதனால் கப்பல் தளத்தில் அந்தக் கடைசி ஞாயிற்றுக்கிழமைக்கு மட்டும் மொத்தப் பயண நாட்களில் கிடைக்காமற்போன அசலான ஞாயிற்றுக் கிழமைத்தனம் வாய்த்திருந்தது. திருப்பலி பூசையில் கலந்துகொண்ட வெகு சிலரில் திருமதி.புருடென்ஷியா லினெரோவும் ஒருவராக இருந்தார். ஏறக்குறைய இரங்கலுக்குரிய உடைகள் அணிந்து கப்பலில் நடமாடிக்கொண்டிருந்த அவர் வழக்கத்துக்கு மாறாக, இன்று கெட்டியானதும் தளர்ந்ததுமான பழுப்பு நிற ஆடையை அணிந்திருந்தார். புனித பிரான்சிசைப் போல ஒரு கயிறையும் இடுப்பில் கட்டியிருந்தார். புனித யாத்திரிகருடையது போலத் தோற்றம் தராத புதிய முரட்டுத் தோல் செருப்புகளை அணிந்திருந்தார். அது ஒரு முன்னோட்டமாக இருந்தது. ரோமாபுரிக்குப்போய் போப்பாண்டவரைத் தரிசிக்கக்கூடிய பயணம் தனக்கு ஆசீர்வதிக்கப்படுமானால் மீதமுள்ள வாழ்நாள் முழுவதும் பாதத்தை மறைக்கும் உடைகளையே அணிவேன் என்று கடவுளுக்கு அவர் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த ஆசீர்வாதம் இப்போதே கிடைத்து விட்டதாகவும் நினைத்தார். திருப்பலி பூசை முடிந்தவுடன் கரீபியக் கடலின் புயற்காற்றுகளை சமாளிக்கும் தைரியத்தைக் கொடுத்ததற்கு நன்றிக்கடனாக பரிசுத்த ஆவிக்கு ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்தார். ரியோஹாச்சாவில் காற்று வீசியடிக்கும் வீட்டில், இப்போதும் தன்னைப் பற்றி நினைத்துக் கனவு கண்டு உறங்கும் ஒன்பதுபிள்ளைகளுக்காகவும் பதினான்கு பேரக் குழந்தைகளுக்காகவும் அவர் பிரார்த்தனை செய்துகொண்டார்.

காலையுணவை முடித்துக்கொண்டு மேல்தளத்துக்குப் போனபோது கப்பல் வாழ்க்கையே மாறியிருந்தது.ஆண்டிலிசிலிருக்கும் வசீகரமான சந்தையிலிருந்து இத்தாலியர்கள் வாங்கிக் குவித்த சாமான்கள் நடன அறையில் அடுக்கப்பட்டிருந்தன. மதுவருந்தும் அறையில் பெர்னாம்புக்கோவிலிருந்து கொண்டு வரப்பட்ட மக்காக்கஸ் குரங்கை அடைத்து வைத்திருக்கும் ஒரு வார்ப்பிரும்புக் கூண்டும் இருந்தது.ஆகஸ்ட் மாததொடக்கத்தின் நேர்த்தியான காலைப்பொழுது அது.வெளிச்சம் ஒரு புனிதமான வெளிப்படுத்தல் என்று தோன்றச் செய்கிற போருக்குப் பிந்தைய அருமையான ஞாயிற்றுக்கிழமை.சலனமில்லாத நீரில்  நோயாளியின் கடினமான சுவாசம்போல அந்த பெரிய கப்பல் நகர்ந்து கொண்டிருந்தது.அஞ்சௌ பிரபுக்களின் கோட்டை மங்கலான உருவமாக அடிவானத்தில் தெரியத் தொடங்கியது. ஆனால் கப்பல்தளத்தில் நின்றிருந்த பயணிகளிடம் தொலைவில் தெரிந்த பரிச்சய முகங்களை அடையாளம் கண்டு கொண்ட பாவனை இருந்தது.சில பயணிகள் தெளிவாகத் தென்பட முடியாதவர்களுக்கு நேராக விரல்களைச் சுட்டிக்காட்டி தெற்கத்திய மொழிகளில் மகிழ்ச்சியுடன் என்னவெல்லாமோ சொல்லிக்கொண்டிருந்தார்கள். கப்பல் பயணம் முழுவதும் எல்லாருடனும் நட்பு பாராட்டியிருந்த திருமதி. புருடென்ஷியா லினெரோவுக்கு- (பெற்றோர் நடனத்தில் பங்கேற்றிருக்கும்போது குழந்தைகளைக் கவனித்துக் கொண்டார், கப்பலின் தலைமை அதிகாரியின் சட்டையில் பித்தானைத் தைத்துக் கொடுத்தார்) - திடீரென்று அவர்கள் எல்லாரும் அந்நியர்களாகவும் மாறிப்போனவர்களாகவும் தெரிந்தார்கள். இந்த வெப்ப மண்டலத்தில் தோன்றிய வீட்டைப் பிரிந்த ஏக்கத்திலிருந்து தப்பிக்க அவருக்கு உதவிய கூட்டுணர்வும் மானுட இதமும் மறைந்து போயிருந்தன .கரை கண்ணில்பட்டதும் கடலுடன் தோன்றியிருந்த முடிவற்ற காதல் முடிந்து போனது. இத்தாலியர்களின் வாயாடித்தனம் பற்றி திருமதி.புருடென்ஷியா லினெரோவுக்கு அதிகம் தெரியாது. பிரச்சனையின் காரணம் கிடப்பது மற்றவர்களின்மனதிலல்ல;  தன்னுடைய இதயத்தில்தான் என்று நினைத்தார்.சொந்த ஊருக்குத் திரும்புகிறவர்களின் மத்தியில் தான் மட்டுமே வெளிநாட்டுப் பயணி என்று நினைத்தார்.ஒவ்வொரு கப்பல் பயணமும் இப்படித்தான்இருக்கும் என்றும் யோசித்தார்.கப்பல் தளத்தில் கம்பி மீது சாய்ந்து கொண்டு கடலின் ஆழத்தைப் பார்த்தபடி அதில் மூழ்கி மறைந்த உலகங்களைப் பற்றி யோசித்தார்.வாழ்க்கையில் முதன் முதலாக ஒரு வெளிநாட்டுக்காரியாக இருப்பதன் வேதனையை உணர்ந்தார்.திடீரென்று பக்கத்தில் நின்றிருந்த அழகிய பெண்ணின் கூச்சல் அவரை நிலைகுலையச் செய்தது.

''அம்மா அம்மா இங்கே பாருங்கள்'' என்று கடல் நீரைச் சுட்டிக் காட்டிக் கத்தினாள்.

அது மூழ்கி இறந்துபோன ஒருவனின் பிணம். திருமதி. புருடென்ஷியா லினெரோ பார்த்தார்.பிணம் மல்லாந்து கிடந்தது.நடுத்தர வயதினன்.வழுக்கைத் தலை.விடியற் காலை வானத்தின் நிறத்தில் திறந்து கிடந்த சந்தோஷமான கண்கள். மாலை விருந்துக்குப் போகிறவனின் உடையணிந் திருந்தான். விலை உயர்ந்தஷூக்களைப் போட்டிருந்தான்.சூட்டில் ஒரு வாடாத கார்டேனியாப் பூ செருகியிருந்தது.வலது கையில் பரிசளிப்புத்தாள் சுற்றிய ஒரு சதுரமான பொட்டலத்தை பிடித்திருந்தான்.வெளிறிய இடதுகை விரல்கள் டையின் முடிச்சைப் பற்றியிருந்தன.மரணவேளையில் அவனுக்குப் பற்றிக்கொள்ளக் கிடைத்தது அதுமட்டுமாக இருக்கலாம்.

''ஏதாவது திருமண விருந்தில் கலந்துகொண்டிருக்கும்போது தவறி விழுந்திருக்கலாம். கோடைக்காலங்களில் அப்படி நடப்பது இங்கே சாதாரணம்'' என்று கப்பல் அதிகாரிகளில் ஒருவர் சொன்னார்.

அந்தக் காட்சி தற்காலிகமானதாக இருந்தது.ஏனெனில் அதற்குள் கப்பல் உட்கடலுக்குள் நுழைந்திருந்தது.தவிர துக்கந்தராத வேறு சில விஷயங்கள் பயணிகளின் கவனத்தைப் பின்னுக்கு இழுத்திருந்தன. ஆனால்,திருமதி.புருடென்ஷியா லினெரோ இறந்துபோன அந்த மனிதனைப் பற்றியும் அவனுடைய நீளமான கோட்டு அலைகளில் மோதிக்கொண்டிருந்ததைப் பற்றியும் தொடர்ந்து யோசித்துக்கொண்டிருந்தார்.

கப்பல் துறைமுகத்துக்குள் நுழைந்ததும் உடைசலான ஒரு  படகு கப்பலின் மூக்கைப் பிடித்து இழுத்துக்கொண்டு போக வந்தது. யுத்தத்தில் நாசமடைந்து போயிருந்த ஏராளமான கப்பல்களின் சிதிலங்களாலும் படகுகளின்  சிதிலங்களாலும் கடல் நிரம்பி யிருந்தது.

துருப்பிடித்துக்கொண்டிருக்கும் சிதைவுகளுக்கிடையில் கப்பல் நகர்ந்தபோது தண்ணீர் எண்ணெய் வடிவமாக மாறியது. ரியோஹாச்சாவில் மத்தியான்னம் இரண்டு மணிக்கு அடிக்கிற வெயிலை விட உக்கிரமானவெப்பம்.குறுகிய கால்வாயின் மறுபக்கம் நேப்பிள்ஸ் நகரம் பதினோரு மணி வெயிலில் மின்னியது. நகரத்தின் கனவுத்தோற்றமுள்ள அரண்மனைகளும் பழைய சாயமடித்த குடிசைகளும் குன்றின் மேல் நெருக்கியடித்து நிற்பது தெரிந்தது.அப்போதுதான் கலங்கிய தண்ணீரிலிருந்து சகிக்க முடியாத துர்வாடை எழுந்தது.பின்னர் தன்னுடைய வீட்டு வாசலில் நின்றபோதுதான் அழுகிய நண்டுகளின் நாற்றம் அதுவென்று திருமதி.புருடென்ஷியா லினெரோவுக்குப் புரிந்தது.

இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும்போது பெரும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் பயணிகள்  படகுத்துறையில் முண்டியடித்து நின்ற கூட்டத்தில் தங்களுடைய உறவினர்களை அடையாளம் கண்டார்கள்.அவர்களில் அதிகமும் நடுத்தர வயதைத் தாண்டிய பெரிய மார்பகங்கள் கொண்ட கிழவிகளாக இருந்தார்கள்.இரங்கலுக்குரிய ஆடைகள் அவர்களை மூச்சுத் திணறச் செய்வதாகத் தோன்றியது.அவர்களுக்கு மிக அழகான குழந்தைகள்

இருந்தார்கள். அவர்களும் எண்ணிக்கையில் அதிகம்.அவர்களின் இளம் கணவர்கள் உழைப்பாளிகளாக இருந்தார்கள்; மனைவி வாசித்த பிறகே பத்திரிகை வாசிக்கும் தொந்தரவு தராத ஜீவிகள்.கடுமையான வெக்கையிலும் கனவான்களான வழக்குரைஞர்கள்போல உடையணிபவர்கள்.

திருவிழா போலிருந்த அந்த ஆரவாரத்துக்கு இடையில் பிச்சைக்காரனின் மேற்சட்டை மட்டுமே அணிந்திருந்த கிழவன் தன்னுடைய கோட்டு பாக்கெட்டுகளிருந்து ஏராளமான கோழிக் குஞ்சுகளை இரண்டுக் கைகளாலும் எடுத்து சுற்றிலும் வீசினான். நொடி நேரத்தில் அவை படகுத்துறை முழுவதும் பரவின. கீ கீ என்று கத்திக்கொண்டு பைத்தியம் பிடித்தவைபோல ஓடித் திரிந்தன.அது மந்திர வித்தை என்பதனால் மனிதர்களிடம் மிதிபட்டும் கோழிக்குஞ்சுகளில் பெரும்பாலானவை தப்பிப் பிழைத்தன.ஆனால் அது ஒரு மந்திரவித்தை என்பது மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. வித்தைக்காரன்  தன்னுடையை

தொப்பியைக் கவிழ்த்து வைத்தான்.ஆனால் கம்பிக்கு அப்பால் நின்றிருந்தவர்களில் ஒருவரும் அவனுக்கு ஒரு நாணயத்தைக் கூடப் போடவில்லை.

தன்னை கெளரவப்படுத்துவதற்காகத்தான் அந்த மந்திர ஜாலம் என்று நினைத்த திருமதி.புருடென்ஷியா லினெரோ அதில் வசீகரிக்கப்பட்டார். அதை ரசிக்க ஆரம்பித்தார். அதனால் படகுத்துறையையும் கப்பலையும் இணைக்கும் பாலம் எப்போது பொருத்தப் பட்டது என்பது அவருக்குத் தெரியவில்லை.திடீரென்று கடற்கொள்ளைக்காரர்களின் தாக்குதல் போல ஒரு மனிதப் பிரவாகம் கரையிலிருந்து கப்பலுக்குள் புகுந்தது. ஆரவாரக் கொண்டாட்டத்துடன் உள்ளே மோதி நுழைந்த வெங்காய வாடை வீசும் கூட்டம்  திருமதி. புருடென்ஷியா லினெரோவை திணறச் செய்தது.சுமைதூக்குவோர் முட்டி மோதிக்கொண்டு சாமான்களை எடுக்கும் சந்தடியில் கைகலப்பிலும் ஈடுபட்டார்கள். இந்த நெரிசலில் சில கோழிக்குஞ்சுகளுக்கு நேர்ந்த வெட்கம் கெட்ட ரீதியிலான மரணம் தன்னையும் பற்றிக்கொள்ளுமோ என்று அவர் பதறினார்.அந்த நேரத்தில்தான் மூலைகளில் இரும்புப் பட்டைபோட்ட தன்னுடைய மரப்பெட்டி மேல் பயமில்லாமல் உட்காரவும் ஆரம்பித்தார். இந்த அவிசுவாசிகளின் ஊரில் நிகழும் விபத்துகளுக்கும் சச்சரவுகளுக்கும் எதிராக அவர் நிறைய பிரார்த்தனை செய்தார்.சந்தடிகளெல்லாம் ஓய்ந்ததும் கப்பலின் தலைமை அதிகாரி அவரைத் தேடி வந்தார். நடன அரங்கில் கைவிடப்பட்டு மிச்சமிருந்த ஒரே நபர் அவராகவே இருந்தார்.

''இனி இங்கே யாரும் வரமாட்டார்கள் என்று தோன்றுகிறது'' என்று நட்பு நிரம்பிய குரலில் சொன்னார்.''நான் உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா?'' என்று கேட்டார்.

''நான் தூதருக்காகக் காத்திருக்கிறேன்'' என்றார் திருமதி. புருடென்ஷியா லினெரோ.

அது உண்மைதான்.அவர் புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே அவருடைய மூத்த மகன், அம்மா வரும் விவரத்தை நேப்பிள்ஸ் தூதராக இருக்கும்  தன்னுடைய நண்பனுக்குத் தந்தி மூலம் தெரிவித்திருந்தான். துறைமுகத்திலேயே அம்மாவைச் சென்று பார்க்கவேண்டுமென்றும் தொடர்ந்து ரோமில் அம்மாவின் பயணத்துக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டு மென்றும் கேட்டுக்கொண்டிருந்தான்.அம்மா வரும் கப்பலின் பெயரையும் வந்து சேரும் நேரத்தையும் தெரிவித்திருந்தான். தவிரவும் அம்மா புனித பிரான்சிசின் தோற்றத்தில் இருப்பார் என்பதையும் நினைவு படுத்தியிருந்தான். ஏற்கனவே செய்திருந்த இந்த ஏற்பாடுகளில் எந்த சமரசத்துக்கும் இடமில்லாமலிருந்தது. எனவே கப்பற் பணியாளர்களின் பகலுணவு இடைவேளை நெருங்கியிருந்த போதும் தலைமை அதிகாரி இன்னும் சிறிது நேரம் அவர் அங்கேயே உட்கார்ந்திருக்க அனுமதித்தார். அப்போதே நாற்காலிகளையெல்லாம் மேஜைமீது எடுத்து அடுக்கி முதல் தளத்தின் தரையைக் கழுவிச் சுத்தம் செய்யத் தொடங்கி யிருந்தார்கள்.  ஈரமாகி விடாமலிருக்க புருடென்ஷியாவின் பெட்டியை அவர்கள்  பல இடங்களிலும் மாற்றி மாற்றி வைக்க வேண்டியிருந்த்து. எந்த உணர்ச்சி மாற்றமும் இல்லாமல் திருமதி. புருடென்ஷியா லினெரோ இடம் மாறி இடம் மாறி  உட்கார்ந்து தன்னுடைய பிரார்த்தனையைத் தொடர்ந்து கொண்டிருந்தார். கடைசியில் பணியாளர்கள் அவரை வெளியே லைஃப் போட்டுகளுக்கு மத்தியில் உட்காரவைத்தார்கள். இரண்டு மணி வாக்கில் தலைமை அதிகாரி மறுபடியும் அவரை அங்கே பார்த்தார்.முரட்டு உடையணிந்து வியர்வையில் ஊறி ஜெப மாலையை உருட்டிக் கொண்டிருந்த அவருக்கு நம்பிக்கை மறைந்து போயிருந்ததது. அழாமலிருக்க அதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.

''நீங்கள் இப்படிப் பிரார்த்தனை செய்துகொண்டிருப்பதில் பயனில்லை'' என்று முன்பிருந்த தோழமை வறண்டுபோன குரலில் அதிகாரி சொன்னார்.

''ஆகஸ்டு மாதத்தில் கடவுள்கூட விடுமுறையில் போய்விடுவார்'' என்றார்.

வெயில் காலத்தில் இத்தாலியில் சரி பாதி மக்களும் கடற் கரையில்தான் இருப்பார்கள்; குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் என்று சொன்னார் அதிகாரி. பொறுப்பை வைத்துப் பார்த்தால் தூதர் விடுமுறையில் போயிருக்க முடியாது.எனினும் திங்கள் கிழமை வரை அவருடைய அலுவலகம் திறந்திருக்க வாய்ப்பில்லை.அதனால் திருமதி.புருடென்ஷியா லினெரோ நியாயமாகச் செய்யக்கூடியது ஏதாவது ஒரு ஹோட்டலில் அறையெடுத்து இரவு நிம்மதியாகத் தூங்கிவிட்டு மறுநாள் தூதருடன் தொலை பேசியில் தொடர்பு கொள்ளுவது மட்டுமே. தொலைபேசிக் குறிப்பேட்டில் நிச்சயமாக அவருடைய எண் இருக்கும்.இந்த அறிவுரையை ஏற்றுக் கொள்வதைத் தவிர திருமதி. புருடென்ஷியாவுக்கு  வேறு வழியில்லை.இமிக்ரேஷன்,கஸ்டம்ஸ், அந்நியச் செலாவணி எல்லாவற்றிலும் அந்த அதிகாரி அவருக்கு ஒத்தாசை செய்தார். ஒரு டாக்சி வரவழைத்துக் கொடுத்ததுடன் அவரை கௌரவமான ஒரு ஹோட்டலில்  கொண்டுபோய் விடவேண்டுமென்றும் டிரைவரிடம் சொல்லி யிருந்தார்.

ஒரு சவ ஊர்தியின் லட்சணங்களுடனிருந்த அந்த டாக்சி ஆள் நடமாட்டமில்லாத தெருக்கள் வழியாக ஊர்ந்து நகர்ந்தது.அந்த ஆவி நகரத்தில் தானும் டிரைவரும் மட்டுமே உயிரோடிருப்பதாக திருமதி. புருடென்ஷியா லினாரோவுக்குத்  தோன்றியது. தெருக்களில்  கொடிக்கம்பிகளில் ஆவிகள் கட்டித் தொங்க விடப்பட்டிருப்பதாகத் தோன்றியது. இத்தனை ஆவேசத்துடனும் வாயாடித்தனத்துடனும் பேசுகிறவன் போப்பாண்டவரைப் பார்ப்பதற்காகக் கடல் கடந்து வந்திருக்கும் தனிமைப் பயணியான தன்னைத் துன்புறுத்தமாட்டான் என்று அவர் நினைத்தார்.

வளைந்து நெளிந்து கிடக்கும் தெருக்கள் வழியான பயணம் அவர்களை மறுபடியும் கடற்கரைக்கே கொண்டுவந்து சேர்த்தது. பளீரென்ற நிறங்களில் சாயமடிக்கப்பட்ட சிறிய ஹோட்டல்கள் இருந்த பளீரென்ற பிரகாசமுள்ள கடற்கரை வழியாகக் கார் நகர்ந்தது.அந்த ஹோட்டல்கலளில் எதன்  முன்னாலும் நிற்காமல் ஓடிய கார் பெரும் பகட்டெதுவுமில்லாத ஒரு ஹோட்டல் வாசலில் நின்றது.ஏராளமான பனை மரங்களும் பச்சை நிறப் பெஞ்சுகளுமிருந்த பூங்காவின் மத்தியில் இருந்தது அந்த ஹோட்டல்.டிரைவர் பெட்டியைக் காரிலிருந்து எடுத்து நிழல் படர்ந்த நடைபாதையில் வைத்தான்.திருமதி புருடென்ஷியா லினெரோவின் சந்தேகத்தைப் பார்த்து அதுதான் நேப்பிள்ஸில் மிக கௌரவமான ஹோட்டல்  என்று உறுதியாகச் சொன்னான்.

அழகானவனும் இரக்கமுள்ளவனுமான ஒரு பணியாள் பெட்டியைத் தோளில் ஏற்றி வைத்துக் கொண்டு அவரை ஹோட்டலுக்குள்ளே அழைத்துச் சென்றான். அவரை அழைத்துக் கொண்டு லிப்டில் நுழைந்தவன் ஒரு புக்கினி பாடலை உரக்கப் பாடத் தொடங்கினான். புதுப்பிக்கப்ப்பட்ட ஒன்பது தளங்களிலும் ஒன்பது ஹோட்டல்கள் இருக்கும் கௌரமான கட்டடம் அது. லிப்ட் சட்டென்று உயரத்தொடங்கியதும் திருமதி.புருடென்ஷியா லினெரோவுக்கு தானொரு கோழிக் கூண்டுக்குள் அகப்பட்டுக் கொண்டதுபோன்ற மனக் குழப்பம் ஏற்பட்டது.எதிரொலி எழும்பும் சலவைக்கல் படிக்கட்டுகளுக்கு மத்தியில் மேலே போகும்போது வெவ்வேறு விதமான மனிதர்களை அவர்களின் தனிமையான சூழ்நிலைகளில் அவரால் பார்க்க முடிந்தது.வீட்டுக்குள்ளே இருப்பதனால் கிழிந்த உள்ளாடைகள் அணிந்திருப்பவர்களையும் ஏப்பமிடுபவர்களையும் எல்லாரையும். லிப்ட் மூன்றாவது மாடியில் ஒரு உலுக்கலுடன் நின்றது. பணியாள் தன்னுடைய பாட்டை நிறுத்திவிட்டு லிப்டின் கதவைத் திறந்தான்.குனிந்து வணங்கி அவருடைய இடம் வந்துவிட்டது என்றான்.

ஹோட்டலின் தளத்தில் வர்ணக் கண்ணாடிகளாலும் நிழற் செடிகள் வைத்திருக்கும் தாமிர ஜாடிகளாலும் அலங்கரிக் கப் பட்டிருந்த மரத்தாலான கௌண்டருக்குப் பின்னால் கிறக்கமாகத் தெரிகிற ஒரு பதின் பருவத்தினனைப்பார்த்தார்.பார்த்த உடனேயே அவருக்கு அவனைப் பிடித்துப் போயிர்று. ஏனெனில் அவருடைய கடைசிப் பேரனைப் போல அவனுக்கும் அழகான சுருட்டை முடியிருந்தது. ஒரு வெண்கலத் தகட்டில் பதிக்கப்பட்டிருந்த அந்த ஹோட்டலின் பெயரும் அவருக்குப் பிடித்திருந்தது.அங்கே பரவியிருந்த கார்பாலிக் அமிலத்தின் வாசனை பிடித்திருந்தது. அங்கே தொங்க விடப் பட்டிருந்த பெரணிச் செடிகளைப் பிடித்திருந்தது.அங்கே நிலவிய அமைதி, சுவர்க் காகிததில் செய்திருந்த சித்திர வேலைப்பாடுகள் எல்லாம் அவருக்குப்பிடித்திருந்தது.ஆனால் லிப்டை விட்டு வெளியே வந்ததும் அவருடைய மனம் அமுங்கிப் போனது. குட்டைச் சராயும் கடற்கரைச் செருப்பும் அணிந்த ஆங்கிலேய சுற்றுலாப் பயணிகளின் கூட்டமொன்று நீண்ட வரிசையிலிருந்த சாய்வு நாற்காலிகளில் தூங்கிக்கொண்டிருந்தார்கள். பதினேழு பேர்.பதினேழு பேரும் ஒரே ஆளின் பதினேழு பிரதிபிம்பங்கள் போலக் கிடந்தார்கள். ஒரேபோலத் தோற்றமளிக்கும் எல்லாரையும் திருமதி.புருடென்ஷியா லினெரோ எந்த வித்தியாசமும் தென்படாமல் ஒருமுறை பார்த்தார். கசாப்புக் கொட்டடியில் வரிசையாகக் கட்டித் தொங்கவிடப்பட்ட பன்றி மாமிசம்போல வெளிர் சிவப்பான அந்தக் கால்கள் மட்டுமே அவருடைய பார்வையில் பட்டன.கௌண்டரை நோக்கி அடுத்த எட்டு வைக்காமல் லிப்ட் பக்கமாகத் திரும்பி நடந்தார் அவர்.

''வேறு மாடிக்குப் போகலாம்'' என்றார்.

''சாப்பாட்டு அறையுள்ள ஒரே இடம் இதுதான்'' என்றான் பணியாள்.

''அது பரவாயில்லை'' என்றார்.

பணியாள் அதை ஏற்றுக்கொண்டதாக சமிக்ஞை செய்துவிட்டு அவருடன் லிப்டில் நுழைந்து கதவை மூடினான். ஐந்தாம் தளத்திலிருக்கும் ஹோட்டலுக்கு வந்து சேரும்வரை மீதிப் பாட்டைப் பாடிக் கொண்டிருந்தான்.

அந்த ஹோட்டலில் எதுவும் சீராக இருக்கவில்லை. அதன் உரிமையாளர் அருமையாக ஸ்பானிஷ் மொழி பேசத் தெரிந்த ஸ்பிரிங்க் போன்ற நடுத்தர வயது பெண்மணி. ஹோட்டல் வரவேற்பறையில் யாரும் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்க வில்லை.அங்கே சாப்பாட்டு அறையும் இருக்கவில்லை. ஆனால் அங்கே தங்கியிருப்பவர்களுக்கு பக்கத்திலிருக்கும் உணவகத்திலிருந்து குறைந்த செலவில் உணவைக் கொண்டு வந்து தருவதற்கான ஏற்பாடுகளை ஹோட்டல் செய்திருந்தது. எனவே, அன்றைய இரவை அங்கே கழிப்பதென்றுதிருமதி. புருடென்ஷியா லினெரோ தீர்மானித்தார்.ஹோட்டல் உரிமையாளரின் பேச்சும் இணக்கமும் மட்டுமல்ல வரவேற் பறையில் படுத்துத் தூங்கும் எந்த ஆங்கிலேயனின் சிவந்த தொடைகளையும் பார்க்க வேண்டியிராது என்பதும் அவரை அங்கேயே தங்கிவிடத் தூண்டியது.

பிற்பகல் மூன்று மணியானதும் அவர் ஜன்னல் திரைகளை இழுத்து விட்டார்.அறைக்குள் மங்கலான வெளிச்சம் மறைவான தோப்பின் குளிர்ச்சியைத் தேக்கிவைத்திருந்தது.அழுவதற்குப் பொருத்தமான இடம். அறைக்குள் தனித்து விடப்பட்டதும் திருமதி.புருடென்ஷியா லினெரோ கதவை மூடித் தாழிட்டார்.குளியலறைக்குள் புகுந்து அன்றைக்கு முதன் முதலாக ஒன்றுக்கிருந்தார். மெல்லிய பீச்சலாக இடைவெளிவிட்டுப் பெருகிய மூத்திரக் கழிப்புக்குப் பிறகு அந்தப் பயணம் முழுவதும் அவர் இழந்து விட்டிருந்த சுயம் திரும்பக் கிடைத்ததுபோல உணர்ந்தார். அதன் பிறகு அவர் செருப்புகளைக் கழற்றினார். இடுப்பில் கட்டியிருந்த கயிறை அவிழ்த்தார். அப்புறம் அகலமான அந்த இரட்டைக் கட்டிலில் இடது பக்கமாகச் சாய்ந்து படுத்துக்கொண்டு அடக்கி வைத்திருந்த கண்ணீர் வெள்ளத்தைத் திறந்து விட்டார்.

ரியோஹாச்சாவை விட்டு அவர்  வெளியே தங்குவது இதுதான் முதன் முறை. பிள்ளைகள் திருமணம் முடிந்து தனியாக வாழத் தொடங்கிய பிறகும், செருப்புப் போடாத இரண்டு இந்தியப் பெண்களின் உதவியுடன் நடைப் பிணமாகக் கிடந்த கணவரைப் பராமரித்தபோதும் அவர் தனியாகத்தான் இருந்திருக்கிறார். ஆனால் முதல் முறையாக வீட்டை விட்டு விலகியிருப்பது இப்போதுதான். அவர் வாழ்நாளில் நேசித்த ஒரே ஆண் மகனும் முப்பது வருடங்களுக்கு மேலாக நினைவிழந்து கிடப்பவருமான கணவனின் உடல் கிடந்த படுக்கையறைக்கு எதிரிலிருந்த அறையில்தான் அவருடைய வாழ்க்கையின் பாதியும் கழிந்திருந்தது. இளமைக் காலத்தில் காதலைக் கொண்டாடிய அதே அறையில் அதே ஆட்டுத்தோல் படுக்கையில் அந்த உடல்கிடந்திருந்தது.

கடந்த அக்டோபரில் உயிருள்ள பிணமாகக் கிடந்த அவர் திடீரென்று கண் விழித்தார்.குடும்ப நபர்களை இனங்கண்டு கொண்டார்.ஒரு புகைப்படக்காரரை அழைத்துவரச் சொன்னார். துருத்தி வைத்த உலை மாதிரியான பழைய காமிராவையும் வீட்டுக்குள் படமெடுப்பதற்கான மக்னீசியம் தகடையும் வைத்திருந்த ஒரு கிழவனை அவர்கள் வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்.எந்த மாதிரிப் புகைப்sukumaran-3 படங்கள் எடுக்கவேண்டும் என்பதையும் நோயாளிதான் முடிவு செய்தார்.''வாழ்க்கை முழுவதும் அன்பையும் மகிழ்ச்சியையும் எனக்குக்கொடுத்த புருடென்ஷியாவுக்காக ஒன்று'' என்றார். முதலாவது மக்னீஷிய வெளிச்சத்தில் அந்தப் படம் எடுக்கப்பட்டது. ''என்னுடைய அருமை மகள்கள் புருடென்சிடாவுக்கும், நடாலியாவுக்குமாக இரண்டு''என்றார். அவையும் எடுக்கப்பட்டன.''அடுத்த இரண்டும் என்னுடைய பிள்ளைகள் இரண்டு பேருக்கும். தங்களுடைய அன்பாலும் நியாய உணர்வாலும் இந்தக் குடும்பத்துக்கு உதாரணமாக இருப்பவர்கள்''.என்றார்.புகைப்படக்காரர் வீட்டுக்கு ஓடிப்போய் பிலிமும் காகிதமும் எடுத்து வரவேண்டியவரைக்கும் படமெடுப்பது நீண்டது. மாலை நான்கு மணியானதும் மக்னீஷியச் சுடரின் புகையும் புகைப்படமெடுப்பதற்காகவும் எடுத்த  புகைப்படங்களை வாங்குவதற்காகவும் நிரம்பியிருந்த  உறவினர்களின் கூட்டமும் படுக்கையறைக்குள்ளிருந்த காற்றை சுவாசிக்கமுடியாததாக்கியிருந்தது.அதற்குள் படுக்கையில் கிடந்த நோயாளிக்கு நினைவு தப்பியது. கப்பலின் மேல்தளத்திலிருந்து விடை பெறும் ஒருவரைப் போல ஒவ்வொருவருக்கும் கையசைத்து வாழ்விலிருந்து விடை பெற்றுக்கொண்டார்.

எல்லாரும் நம்பியதுபோல அவருடைய மரணம் அந்த விதவைக்கு ஆறுதலாக இருக்கவில்லை. நேர் மாறாக பெரும் துக்கத்தில் ஆழ்ந்துவிட்டார். அவரை சமாதானப்படுத்த தாங்கள் என்ன செய்யவேண்டும் என்று பிள்ளைகள் கேட்டார்கள். ரோமுக்குப் போய்ப் போப்பாண்டவரைப் பார்க்க விரும்புவதாக அவர் பதில் சொன்னார்.

''நான் தனியாகவே போய்க்கொள்ளுகிறேன்.புனித பிரான்ஸிசின் உடையில் .அப்படி ஒரு வேண்டுதல் இருக்கிறது'' என்று அவர்களிடம் தெரிவித்தார்.

கணவரைப் பராமரித்துக் கொண்டிருந்த காலத்தில் அவருக்கு மிஞ்சியிருந்த  ஒரே ஆறுதல் அழுவதிலுள்ள மகிழ்ச்சி மட்டுந்தான். கப்பலில் அவருடைய காபினைப் பகிர்ந்து கொண்டவர்களில் மார்செய்ஸ்வரை பயணம் செய்த இரண்டு கிளாரிசின் கன்னியாஸ்திரீகளும் இருந்தார்கள்.யாரும் பார்க்காமல் அவர் குளியலறைக்குப் போய் அழுவார். அதனால் ரியோஹாச்சாவை விட்டு வந்த பின்பு நேப்பிள்ஸ் ஹோட்டலுக்குள் புகுந்த பிறகே மனநிறைவுடன் அழ அவரால் முடிந்தது.அடுத்த நாளும் அவர் தொடர்ந்து அழுது கொண்டிருந்திருக்கலாம். ஆனால் மறுநாள் அவர் ரயிலில் ரோமுக்குப் போகவேண்டியிருந்தது. ஏழு மணிக்கெல்லாம் ஹோட்டல் உரிமையாளர் கதவைத் தட்டி தாமதம் செய்யாமல் பக்கத்திலுள்ள உணவகத்துக்குப் போகவில்லையென்றால் பட்டினி கிடக்கவேண்டியிருக்கும் என்று சொல்லியிருந்தார்.

பணியாள் அவருடன் வந்தான்.கடலிலிருந்து மெல்லிய காற்று வீசத் தொடங்கியிருந்தது. ஏழு மணீ வெயிலிலும் சில குளியல் காரர்கள் கடற்கரையில் இருந்தார்கள்.திருமதி.புருடென்ஷியா லினெரோ செங்குத்தாகவும் குறுகலாகவும் இருந்த தெருக்களில் பணியாளைப் பின் தொடர்ந்தார்.ஞாயிற்றுக் கிழமை அரைத் தூக்கத்திலிருந்து நகரம் அப்போதுதான் விழிக்கத் தொடங்கி யிருந்தது. கடைசியில் நிழல் பரவியிருந்த குடில் போன்ற உணவகத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.மேஜைகளில் சிவப்புக் கட்டங்கள் போட்ட விரிப்புகள் இருந்தன.கூஜாக்களில் பூக்களைச் செருகி பூ ஜாடிகளாக வைத்திருந்தார்கள். அந்தக் காலை வேளையில் அவருடன் சாப்பிடுவதற்கு அந்த உணவகத்தின் பணியாட்களும் பணிப்பெண்களும் மட்டுமே இருந்தார்கள். பின்னால் ஒரு மேஜையருகில் அப்பாவிப் பாதிரியார் ஒருவர் வெங்காயத்தைக் கடித்துக் கொண்டு ரொட்டியைத் தின்று கொண்டிருந்தார்.திருமதி.புருடென்ஷியா லினெரோ நுழைந்ததும் எல்லாருடைய பார்வையும் அவருடைய தவிட்டு நிற உடை மீது பதிந்தது.ஆனால் அது அவரைப் பாதிக்கவில்லை. மற்றவர்களின் கேலியும் தன்னுடைய பாவ பரிகாரத்தின் பாகம் என்று அவருக்குத் தெரியும். ஆனால் அங்கே பார்த்த அழகான பணிப்பெண் அவருக்குள் இரக்கத்தை உண்டாக்கினாள்.அவள் அழகாக இருந்தாள். மாநிறம். அவள் பேச்சே பாட்டுப் பாடுவது போல இருந்தது.போருக்குப் பின் இத்தாலியில் நிலைமைகள் மோசமாகியிருக்கவேண்டும்.இல்லையென்றால் அவளைப் போன்ற ஒருத்தி எதற்காக உணவகத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்யவேண்டும்? ஆனாலும்  பூக்கள் நிரம்பிய அந்த குடில் அவருக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.பகல் நேரப் பதற்றங்கள் போக்கடித்திருந்த அவருடைய பசியைத் தூண்டி விட பே இலைகள் போட்ட ஸ்டூ வாசனையால் முடிந்தது. நீண்ட நாட்களில் முதல் முறையாக அவருக்கு அழவேண்டுமென்ற ஆசையில்லாமலிருந்தது.

இருந்தாலும் ஆசைப்பட்டதுபோல அவரால் சாப்பிட முடிய வில்லை. மாநிறமான அந்தப் பணிப்பெண் அன்பாகவும் பொறுமையாகவும் இருந்தபோதும் அவளுடன்  கருத்துப் பரிமாற்றம் நடத்த அவரால் முடியவில்லை என்பது ஒரு காரணம்.இன்னொரு காரணம் ரியோஹாச்சாவில் கூண்டுகளில் வைத்து வீட்டில் வளர்க்கப்படும் ஒருவகை  பாடும் பறவைகள்தான் அங்கே கிடைக்கும் மாமிச உணவாக இருந்தது. மூலையில் சாப்பிட்டுக்கொண்டிருந்த பாதிரியார் மொழி பெயர்ப்பாளராக மாறி அவருக்கு உதவினார். விஷயங்களை அவருக்குப் புரியவைக்க முயற்சி செய்தார்.ஐரோப்பாவில் அப்போதும் போர்க்கால நெருக்கடிகள் தீர்ந்து விடவில்லை என்றும் இந்தப் பறவைகளின் இறைச்சி சாப்பிடக் கிடைப்பதே அதிசயமென்றும் சொன்னார். ஆனால் அவர் அந்தத் தட்டைத் தள்ளி வைத்தார்.

''என்னைப் பொறுத்தவரை இதைச் சாப்பிடுவது என்னுடைய குழந்தைகளைத் தின்பதுபோல'' என்றார்.

அதனால் கொஞ்சம் சேமியா சூப்பையும் பன்றி மாமிசம் சேர்த்து வேகவைத்த பூசணித் துண்டுகளையும் கல் மாதிரி இருந்த ஒரு துண்டு ரொட்டியையும் அருந்தி திருப்திப்பட வேண்டியிருந்தது. அவர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது பாதிரியார் அவருடைய மேஜைக்கருகில் வந்து தர்மத்தின் பேரால் தனக்கு ஒரு கப் காப்பி வாங்கித் தரும்படிக் கேட்டுக்கொண்டே அவரருகில் உட்கார்ந்தார். யூகோஸ்லாவியரான அவர் பொலிவியாவில் ஊழியம் செய்தவர்.

திக்கித் திக்கி ஸ்பானிய மொழி பேசினார்.திருமதி புருடென்ஷியா லினெரோவுக்கு அவர் எந்தவிதமான தெய்வாம்சமும் இல்லாத சாதாரண மனிதராகவே  தோன்றினார்.அவருடைய கைகள் பிய்ந்துபோன அசுத்தமான நகங்களுடன் அருவருப்பாக இருப்பதைக் கவனித்தார்.தவிர அவருடைய சுவாசத்தில் வெங்காய வாடை ஒரு குணம்போல நிரந்தரமாக இருந்தது.

இருந்தாலும் அவர் தேவ ஊழியம் செய்பவர்.அதுமட்டுமல்லாமல் வீட்டை விட்டு இவ்வளவு தொலைவில் தன்னுடைய மொழியில் பேசக் கூடிய ஒருவரைப் பார்த்ததே மகிழ்ச்சிக்குரியது என்று தோன்றியது.

தானியக் கிடங்குகளிலிருந்து வந்த இரைச்சல் அவர்களைச் சுற்றி வந்து தொந்தரவு செய்தும் அவர்கள் பேச்சைத் தொடர்ந்தார்கள். பக்கத்து மேஜைகளில் ஆட்கள் வந்து நிறைந்து கொண்டி ருந்தார்கள். திருமதி. புருடென்ஷியா லினெரோவுக்கு ஏற்கனவே இத்தாலியைப் பற்றி அபிப்பிராயம் உருவாகி விட்டிருந்தது. அவருக்கு இத்தாலி பிடிக்கவில்லை.அங்குள்ள ஆட்கள் கொஞ்சம் முறைகேடர்களா இருக்கிறார்கள் என்பது ஒரு காரணம். பாடும் பறவைகளைத் தின்கிறார்கள் என்பது இன்னும் கொஞ்சம் அதிகம். ஆனால் இறந்த மனிதனைத் தண்ணீரிலேயே மிதக்கவிடும்

தந்திர புத்திக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியமான காரணம்.

பாதிரியார் காப்பியுடன் திருமதி.புருடென்ஷியா லினெரோவின் செலவில் ஒரு கிராப்பாவையும் வாங்கிக் கொண்டு அவருடைய அபிப்பிராயம் மேலோட்டமானது என்பதைப் புரியவைக்க முயன்றார்.போர்க்காலங்களில்  நேப்பிள்ஸ் வளைகுடாக்களில் மிதக்கும் சடலங்களை கண்டுபிடித்து அடையாளம் காணவும் மரியாதையுடன் அடக்கம் செய்யவும் தேவையான ஏற்பாடுகள் இருக்கின்றன.

'' இருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான் என்பதைநூற்றாண்டுகளுக்கு முன்பே இத்தாலியர்கள் கற்றுக்கொண்டார்கள். அதனால் அதை எவ்வளவு சிறப்பாக வாழ முடியுமோ அப்படி வாழ முயற்சி செய்கிறார்கள். அதனால் அவர்கள் வாயாடிகளாகவும் கணக்குப் பார்க்கிறவர்களாகவும் மாறிவிட்டார்கள்.அதே சமயம் அதுதான் அவர்கள் மத்தியில் கொடூரத்தைக் கட்டுப்படுத்தியிருக்கிறது'' என்று முடித்தார் பாதிரியார்.

''ஆனால் அவர்கள் கப்பலை நிறுத்தவே இல்லையே?'' என்றார் திருமதி. புருடென்ஷியா லினெரோ.

''துறைமுக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிப்பதுதான் அவர்கள் வேலை. இதற்குள் அவர்கள் அந்த சடலத்தை எடுத்து கடவுளின் பெயரால் நல்லடக்கம் செய்திருப்பார்கள்'' என்றார் பாதிரியார்.

இந்த விவாதம் இருவர் மனநிலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. திருமதி.புருடென்ஷியா லினெரோ சாப்பிட்டு முடித்திருந்தார்.அப்போதுதான் எல்லா சாப்பாட்டு மேஜைகளும் நிறைந்திருப்பதை உணர்ந்தார். பக்கத்திலிருந்த  மேஜைகளில் கிட்டத்தட்ட நிர்வாணமாக இருந்த  சுற்றுலாப் பயணிகள் சிலர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். சில ஜோடிகள் உணவருந்தாமல் முத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள்.பின்னால் பாருக்குப் பக்கத்தில் உள்ளூர்வாசிகள் சிலர் பகடை விளையாடிக்கொண்டும் நிறமில்லாத ஒயினைக் குடித்துக்கொண்டுமிருந்தார்கள். அந்த சுவாரசியமில்லாத நாட்டுக்கு வர தனக்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது என்று திருமதி.புருடென்ஷியா லினெரோ புரிந்து கொண்டார்.

''போப்பாண்டவரைப் பார்ப்பது சிரமமென்று நினைக்கிறீர்களா?'' என்று கேட்டார்.

''கோடைக்காலமாக இருந்தால் அது சுலபமாக இருந்திருக்கும்'' என்றார் பாதிரியார். காண்டோல்ஃபோ கோட்டையில் கோடைக் காலத்தைக் கழிப்பதற்காக போப்பாண்டவர் வந்திருந்தார். ஒவ்வொரு புதன் கிழமையும் பிற்பகலுக்கு அப்புறம் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து வரும் புனித யாத்திரீகர்களுக்கு அவர் பொது தரிசனம் கொடுப்பது வழக்கம் என்று சொன்னார் பாதிரியார்.அதற்கான அனுமதிக் கட்டணம் ரொம்ப மலிவு: இருபது லிராக்கள்.

''ஒருவரின் பாவ மன்னிப்பைக் கேட்க எவ்வளவு கட்டணம் ஆகும்?'' என்று கேட்டார் திருமதி.புருடென்ஷியா லினெரோ.

''பரிசுத்த தந்தையானவர் யாருடைய பாவ மன்னிப்பையும் கேட்க மாட்டார்'' என்றார்.கொஞ்சம்  புரளிபோல'' அரசர்கள் போன்ற சிலரைத் தவிர'' என்றும் சொன்னார்.

''தூரத்திலிருந்து வரும்  என்னைப் போன்ற ஒரு அப்பாவியை உதாசீனம் செய்வது ஏனென்று எனக்குப் புரியவில்லை'' என்றார்.

''சில அரசர்கள், அவர்கள்  அரசர்களாக இருந்தபோதும் காத்திருந்தே இறந்து போயிருக்கிறார்கள்'' என்றார் பாதிரியார். பிறகு,''சொல்லுங்கள் புனிதத் தந்தையை நேரில் பார்த்து பாவ மன்னிப்புக் கோருவதற்காகவே  தனியாக இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள்.அப்படியென்றால் நீங்கள் கொடிய பாவம் செய்திருக்க வேண்டும். இல்லையா?'' என்று கேட்டார்.

திருமதி.புருடென்ஷியா லினெரோ ஒரு நொடி யோசித்தார்.முதல் முறையாக அவர் புன்னகைப்பதைப் பாதிரியார் பார்த்தார்.

''தேவ மைந்தனின் தாயே! அவரை சும்மா பார்த்தாலே எனக்கு திருப்தி '' என்று உயிரிலிருந்து எழுந்தது போன்ற பெருமூச்சுடன் சொன்னார். ''அது என்னுடைய வாழ்நாள் கனவு''

உண்மை என்னவென்றால் அவர் இன்னும் பயத்துடனும் துக்கத்துடனும்தான் இருந்தார்.அந்த உணவகத்தை விட்டு வெளியேற விரும்பினார், அதேபோல தாமதமில்லாமல் இத்தாலியைவிட்டும். எதிர்பார்ப்பில் ஆழ்ந்திருக்கும் அந்த பெண்மணியிடமிருந்து தனக்குக் கிடைக்க வேண்டியதெல்லாம் கிடைத்தாயிற்று என்று பாதிரியார் யோசித்திருக்க வேண்டும். அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டு இன்னொரு மேஜைக்கு அருகில்போய் அங்கிருந்தவர்களிடம் தர்மத்தின் பேரால் தனக்கு ஒரு கப் காப்பி வாங்கித் தரும்படி இரந்து கொண்டிருந்தார்.

உணவகத்திலிருந்து வெளியே வந்தபோது திருமதி.புருடென்ஷியா லினெரோ மாறிப் போயிருந்த நகரத்தைப் பார்த்தார்.ஒன்பது மணிக்கும் இவ்வளவு சூரிய வெளிச்சம் இருப்பது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.அதே நேரம் மாலைக் காற்றை அனுபவிக்க தெருக்களில் இறங்கியிருந்த கூட்டத்தின் ஆரவாரம் அவரைப் பயமுறுத்தியது.ஏராளமான வெஸ்பா ஸ்கூட்டர்களின் கிறுக்குத்தனமான இயந்திர ஓசைகள் வாழ்க்கையை சகிக்க முடியாததாக்கின.திறந்த மார்பைக் காட்டியபடி அவற்றை ஓட்டும் ஆண்களின்  இடுப்பைக் கட்டிக்கொண்டு அழகிகள் உட்கார்ந்திருந்தார்கள். தொங்கிக் கொண்டிருக்கும் பன்றிஇறைச்சிகளுக்கும் தர்பூசணிப் பழங்கள் அடுக்கியிருந்த மேஜைகளுக்கும் நடுவில் தாறுமாறாக வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தார்கள்.

அது ஒரு திருவிழாக் கோலமாக இருந்தது.ஆனால் திருமதி. புருடென்ஷியா லினெரோவுக்கு அது ஒரு அபாயமாகத் தோன்றியது.அவர் வழி தவறி ஒழுங்கீனமான ஒரு தெருவுக்கு வந்து சேர்ந்திருந்தார். வாசலில் சிவப்பு விளக்குகள் பொருத்திய ஒரே மாதிரியான வீடுகள்; அவற்றின் முன்னால் ஒப்பனை செய்து மௌனமாகக் காத்திருக்கும் பெண்கள்.அந்தக் காட்சி அவரை பயத்தில் நடுங்கச் செய்தது. நன்றாக உடையணிந்து கையில் கனமான மோதிரம்  போட்டு டையில் வைரம் பதித்திருந்த ஒருவன் சிறிது தூரம் அவரைப் பின் தொடர்ந்து வந்தான். முதலில் இத்தாலியிலும் பிறகு ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலுமாக என்னவோ சொல்லிக்கொண்டே வந்தான்.பதில் கிடைக்காமல் போனதும் சட்டைப் பையிலிருந்து ஒரு கத்தை பட அட்டைகளை எடுத்து அதில் ஒன்றை அவரிடம் காட்டினான்.அதை ஒரு தடவை பார்த்ததுமே தான் நரகத்தில் நடந்துகொண்டிருப்பதாக அவர் உணர்ந்தார்.

பெரும் பயத்துடன் அவர் அங்கேயிருந்து ஓடினார். தெரு முடிகிற இடத்தில் அந்தி மாலைக் கடல் தெரிந்தது.ரியோஹாச்சா துறைமுகத்தில்  பழக்கப்பட்டிருந்த அதே அழுகிய நண்டுகளின் வாடை துளைத்தது.அத்தோடு அவருடைய இதயம் அதன் இடத்துக்குத் திரும்பியதாகத் தோன்றியது.

ஆள் நடமாட்டமில்லாத கடற்கரையோரமிருக்கும் சாயமடித்த ஹோட்டல்களையும் சவ ஊர்திகளையும் விரிந்த வானத்தில் முதல் நடத்திர வைரத்தையும் அவரால் அடையாளம் காண முடிந்தது.நடுக்கடலில் அவர் வந்த பிரம்மாண்டமான கப்பல் தனியாக நின்றுகொண்டிருந்தது.அந்தக் கப்பலுக்கும் தனக்கும் இப்போது எந்தத் தொடர்புமில்லை என்று அவருக்குத் தோன்றியது. தெரு முனைக்கு வந்ததும் இடது பக்கமாகத் திரும்பப் பார்த்தார்.ஆனால் மக்கள் கூட்டத்தை படை வீரர்கள் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தார்கள்.அவருடைய ஹோட்டல் கட்டடத்தின் முன்னால் வரிசையாக ஏராளமான ஆம்புலன்ஸ் வண்டிகள் கதவைத் திறந்து வைத்துக் காத்திருந்தன.

கால் கட்டை விரலில் ஊன்றி நின்று ஆட்களின் தோள்களுக்கு மேலிருந்து அவர் எட்டிப்பார்த்தார்.அந்த ஆங்கிலேயப் பயணிகளை திருமதி.புருடென்ஷியா லினெரோ மறுபடியும் பார்த்தார்.அவர்களை ஒவ்வொருவராக ஸ்டிரெட்சரில் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அசைவில்லாமலிருந்தாலும்கௌரவமானவர்களாக இருந்தார்கள்.இரவு உணவுக்கான உடையில் ஒருவரே பல மடங்காக இருப்பதுபோல இருந்தார்கள். பிளானல் டிரௌசர்கள், குறுக்குக் கோடுகள் போட்ட டை, டிரினிட்டி கல்லூரியின் இலச்சினை பதித்த அடர்ந்த நிறக் கோட்டுகள்.அவர்களை வெளியே கொண்டுவருவதைப் பார்த்து அண்டையிலிருப்பவர்கள் தங்களுடைய மாடிகளிலிருந்தும், தடுத்து  நிறுத்தப்பட்ட மக்கள் தெருவிலிருந்தும் எண்ணிக் கொண்டிருந்தார்கள் – ஒரு விளையாட்டு அரங்கிலிருந்து கொண்டு வரப்பட்டது போல பதினேழு சடலங்கள்.ஒரு ஆம்புலன்சில் இரண்டு என்று ஏற்றப்பட்ட பின்பு சைரன் ஒலித்துக் கொண்டு ஆம்புலன்சுகள் நகர்ந்தன.

மனம் பேதலிக்கச் செய்யும் இந்த அனுபவங்களால் அதிர்ந்துபோன திருமதி.புருடென்ஷியா லினெரோ, மற்ற ஹோட்டல்களில் தங்கியிருக்கும் விருந்தினாரால் நிரம்பிய லிப்டில் ஏறி மேலே போனார். லிப்டுக்குள்ளே இருந்தவர்கள் வெவ்வேறு மொழிகளில் பேசிக்கொண்டிருந்தார்கள்.மூன்றாவது தளத்தைத் தவிர எல்லாத் தளத்திலும் ஆட்கள் இறங்கினார்கள். திறந்து கிடந்த அந்த தளத்தில் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. கௌண்டருக்கு அருகில் யாரும் இல்லை.அவர் பார்த்தபோது வெளிர்சிவப்புத் தொடைகள்  தெரிய பதினேழு ஆங்கிலேயர்கள் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த வரவேற் பறையின் சாய்வு நாற்காலிகளில் இப்போது யாருமில்லை. ஐந்தாவது மாடியில் ஹோட்டல் உரிமையாளர் கட்டுப்படுத்த முடியாத ஆவேசத்துடன் விபத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

''எல்லாரும் இறந்து போய்விட்டார்கள்'' என்று ஸ்பானிய மொழியில் சொன்னாள். '' அவர்கள் செத்துப்போனது இரவு உணவுடன் சாப்பிட்ட சிப்பி சூப்பில் விஷம் கலந்திருந்ததனாலாம். யோசித்துப் பாருங்கள். ஆகஸ்டு மாதத்தில் சிப்பி சூப்''

அந்தப் பெண்மணி அறைச் சாவியைதிருமதி.புருடென்ஷியா லினெரோவிடம் கொடுத்து விட்டு அவரைக் கவனிக்காமல் மற்ற விருந்தாளிகளுடன்  அவளுடைய மொழியில் சொன்னாள்: ”இங்கே உணவகம் இல்லாததனால் தூங்குவதற்காகப் படுப்பவர்கள் உயிரோடு எழுந்திருக்கிறார்கள்.'' தொண்டைக்குள் சிக்கிய கண்ணீர் முடிச்சுடன் திருமதி.புருடென்ஷியா லினெரோ, அறைக்குள் புகுந்து கதவை மூடித் தாழிட்டார்.அதற்குப் பிறகு சிறிய எழுத்து மேஜையையும் சாய்வு நாற்காலியையும் தன்னுடைய பெட்டியையும் இழுத்து கதவையொட்டி தடுப்புச் சுவர்போலப் போட்டார். ஒரே நேரத்தில் அநேக கொடூரங்கள் நடந்த ஒரு நாட்டிலிருந்து பாதுகாப்புத் தேடியே அந்த தடுப்புச் சுவரை ஏற்படுத்தியிருந்தார். பிறகு விதவைக்குரிய இரவு உடையை அணிந்து படுக்கையில் மல்லாந்து படுத்தார். விஷ மருந்தி  இறந்த பதினேழு ஆங்கிலேர்களுக்காக ஜெபமாலையை உருட்டி பதினேழு முறை பிரார்த்தனை செய்தார்.  

(ஏப்ரல் 1980)

ஆங்கிலத்தில் படிக்க இங்கே செல்லவும்