Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Thursday, April 14, 2011

நட் ஹாம்சன்:அறிமுகக்குறிப்பு - சுந்தர ராமசாமி

நட் ஹாம்சன் (1859 - 1952)

நட் ஹாம்சன் சிறு வயதில் பல வேலைகள் பார்த்தார். செம்மானின் உதவியாளராக, சுரங்கக் கூலியாக, பாதை வெட்டும் தொழிலாளியாக, கிராமப்பள்ளியில் ஆசிரியராக. அன்றைய நார்வேயில், பல இளைஞர்கள், அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். வாழ்வில் சிறு ஆசுவாசங்களையேனும் தேடிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் ஹாம்சனும் போனார். அங்கும் தோட்டக்காரராகவும், பஸ் கண்டக்டராகவும், சிறு கடைகளில் கணக்குப் பிள்ளையாகவும், முச்சந்திப் பிரசங்கியாகவும் வயிற்றைக் கழுவ முயன்றார். அமெரிக்கா அவருக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை . திருப்தியாக வயிற்றைக் கழுவிக்கொள்ளவும் முடியவில்லை, ரொம்பவும் சங்கடப்படவும் வேண்டியிருந்தது. குளிர் காலத்துக்கு அவசியமான புகையிலையும், ஒரு ஜோடிச் செருப்பும் மிச்சம் பார்த்துவிட வேண்டும் என்ற அவரது எண்ணமும் ஈடேறவில்லை. தமது Hamsun_bldsa_HA0341இலக்கிய ருசி லேசுபட்டதல்ல என்று அவர் பிரசங்கங்களில் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். யாரும் அதைச் சட்டை செய்யவில்லை. கடுமையான வறுமையும், விசித்திரமான அனுபவங்களும், தரித்திரமில்லாமல் கிடைத்தன. நன்றாகச் சுற்றி அலைந்தார். தம் அனுபவங்களைப் பற்றியெல்லாம் குறித்து வைத்துக் கொண்டார். அத்தர் சேர்க்காமல், ஊதுபத்தி புகைக்காமல், காதல் கீதல் என்று புலம்பாமல், சுவாரஸ்யத்தை விட, கெட்டிக்காரத்தனத்தை விட, பிரச்சாரத்தை விட, உண்மை பொருட்படுத்தத் தகுந்தது என்ற நம்பிக்கையில் எழுதினார்.

அமெரிக்காவிலிருந்து ஊர் திரும்பியதும் ‘அமெரிக்கக் கலாச்சார வாழ்க்கை’ என்ற தலைப்பில் ஒரு கிண்டல் புத்தகம் எழுதினார். அமெரிக்க வாழ்க்கையையும் அரசாங்கத்தையும் அரசியல் தலைவர்களையும், நை நை என்று நைத்திருக்கிறார் இதில். இந்நூலைப் படிக்கும் போது அமெரிக்காவைப் பற்றி கிண்டல் செய்து எழுதியுள்ள மாக்சிம் கார்க்கியின் எழுத்து (’அமெரிக்காவிலே’ தமிழ்மொழி பெயர்ப்பு - கு. அழகிரிசாமி) நினைவுக்கு வராமல் போகாது.

இதன் பின், ‘பசி’ என்ற நாவல் எழுதினார். இவரது இலக்கிய நோக்கின் செழுமையை வெளிப்படுத்திய முதல் நூல் இதுதான். தனது மனதைப் பிடுங்கித் தின்று கொண்டிருந்த, பழைய நினைவுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள, இந்நூலை அவர் எழுதினார் என்பார்கள். சொல்லும்படி ‘பசி’யில் கதை என்று ஒன்றுமில்லை. இதில் வரும் கதாநாயகன் பசியினாலும், மனச் சோர்வாலும் இடத்துக்கு இடம் அவனை அணைத்துக் கொள்ளக் காத்திருக்கும் ஏமாற்றங்களாலும் வேதனைப் படுகிறான். ஆசிரியரின் சுய அனுபவத்தின் மெய்ம்மை இந்நூலில் நம்மை ஊடுருவித் தாக்கும்.

நட் ஹாம்சன் ஒரு சில நாடகங்களும் எழுதியிருக்கிறார். விஞ்ஞான முன்னேற்றம் அவர் மனதில் ஏற்படுத்திய சஞ்சலங்களும் சந்தேகங்களும் இந்நாடகத்தில் வெளிப்பட்டுள்ளன. எனினும் நாடகத் துறையில் இவர் அவ்வளவாக வெற்றி பெறவில்லை.

இவரது மிக முக்கியமான நூல் ‘நில வளம்’. இந்த அற்புதமான நாவலை க.நா.சு. தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். வாசகர்கள் அவசியம் தேடிப் படிக்க வேண்டிய நாவல் இது. ‘நான் படித்தவற்றுள்ளேயே இதுதான் மிகச் சிறந்த நாவல்’ என்று எச். ஜி. வெல்ஸ் இந்நூலைக் குறிப்பிட்டுள்ளார். மண்ணைப் பற்றியும், மண்ணில் வேலை செய்யும் கிராமவாசிகளைப் பற்றியும், அவர் தம் ஆசாபாசங்கள் பற்றியும் கலைப்பாங்கோடு இந்நாவல் கூறுகிறது என்றாலும், முற்போக்கு நாவல் என்று இதைச் சொல்ல முடியாது; மிகச் சிறந்த நாவல் என்றுதான் சொல்ல முடியும். கதாபாத்திரங்கள் எல்லாம் தனி மனிதர்கள். தனி மனிதர்களின் ஏக்கங்கள், வெற்றிகள், தோல்விகள். தனி மனிதனைக் கும்பலாக் காணும் ‘தத்துவ தரிசனம்’ இவர் காலத்தில் பரவியிராத ஒன்று போலும்.

‘நில வளம்’ என்ற இந்நாவலுக்குத்தான் 1920-ல், தமது 61-வது வயதில் நோபல் பரிசு பெற்றார் இவர். நன்றாகக் குடித்துக்கொண்டு, சிலபோது இலக்கியக் கூட்டங்களில் கலாட்டா செய்து கொண்டு, (ஸெல்மா லாகர்லாஃப் என்ற சுவீடிஷ் நோபல் பரிசு பெற்ற அம்மையாரின் ரவிக்கையை இழுத்துக் கிழித்தார் இவர் - குடிவெறியில்தான் என்று சொல்லப்படுகிறது.) 93 வயது வரையிலும் வாழ்ந்தார்.

இந்திய மொழிகளில் நட் ஹாம்சன் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறார். இந்தியாவில் காப்பியடிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுள் இவர் முக்கியமானவர். அதிலும் முக்கியமாக இவருடைய ‘பசி’ என்ற நாவல். பசி, நமக்கு மிகவும் அன்னியமான விஷயமல்லவா?

- நன்றி கொல்லிப்பாவை இதழ்த்தொகுப்பு.

http://en.wikipedia.org/wiki/Knut_Hamsun

நில வளம் நட் ஹாம்சன் - மருதா பதிப்பகம்

கொல்லிப்பாவை இதழ்த்தொகுப்பு இணையத்தில் வாங்க இங்கே செல்லவும்

Monday, April 11, 2011

ஸெல்மா லாகர் லெவ்: அறிமுகக்குறிப்பு - சுந்தர ராமசாமி

ஸெல்மா லாகர் லெவ் (1858 - 1940)

ஸெல்மா லாகர் லெவின் ‘மதகுரு’ (கெஸ்டா பெர்லிங்ஸாகா) தமிழில் 1957-ல் வெளிவந்திருக்கிறது. ஸ்வீடிஷ் நாவல். மொழிபெயர்ப்பு: க. நா. சுப்ரமணியம்.

முன்னுரையில் க.நா.சு. சொல்லுகிறார். ‘1931-ல் கல்கத்தாவில் இம்பீரியல் லைப்ரரியில் (இப்பொழுது இதன் பெயர் நேஷனல் லைப்ரரி) என்னுடைய பத்தொன்பதாவது வயதில் நான் முதன் முதலாக கெஸ்டா பெர்லிங்ஸாகாவைப் படித்தேன். அன்றுமுதல் இன்றுவரை இந்த இருபத்தைந்து 240px-Selma_Lagerlöf வருடங்களில் நான் இதை ஆதி முதல் அந்தம் வரை ஐம்பது தடவைகளாவது படித்திருப்பேன். இப்பொழுது மொழி பெயர்க்க உட்காரும்போது கூட நாலு பக்கம் மொழிபெயர்த்தால் தொடர்ந்து நாற்பது பக்கம் படித்துவிட்டுத்தான் அடுத்த நாலுபக்கம் மொழிபெயர்ப்பது என்று ஏற்பட்டுவிட்டது. படிக்குந்தோறும், படிக்குந்தோறும் இந் நாவலில் என் ஈடுபாடு அதிகரிக்கிறது. ஒவ்வொரு தடவையும் புதிதுபுதிதாக நான் பல உணர்ச்சி அனுபவங்களைப் பெறுகிறேன். முந்திய தடவை கவனிக்காத பல புதுப்புது அர்த்தங்கள் ஒவ்வொரு தடவை வாசிக்கும் போதும் எனக்குத் தோன்றுகின்றன. ஸெல்மா லாகர் லெவ் என்ற ஸ்வீடிஷ் ஆசிரியையிடம் எனக்கு ஒவ்வொரு தடவையும் கெஸ்டா பெர்லிங்க்ஸாகாவைப் படிக்கும்போது பயமும் பக்தியும் அதிகரிக்கிறது. உலக இலக்கியத்தின் முதல் வரிசையில் நிற்கக்கூடியவை என்று நினைக்கத்தக்க நூல்களில் கெஸ்டா பெர்லிங்க்ஸாகாவும் ஒன்று என்பதை ஒவ்வொரு தடவையும் நான் ஊர்ஜிதப்படுத்துகிறேன்.’  (’மதகுரு’ முன்னுரையில்)

க.நா.சு. இந்த நாவல் மீது கொண்டுள்ள ஈடுபாடு மிக ஆழமானது. ‘மதகுரு போன்ற நூல்கள் உலக இலக்கியத்திலேயே ஒரு சிலதான்’ என்றும் சொல்கிறார். க.நா.சு. உலக விமர்சன அரங்கில் ஸெல்மா லாகர் லெவின் பெயர் கண்ணில் தென்படுவதே அபூர்வம். ஆங்கில மொழிக்குள் வராத விமர்சன உலகத்தில் அவர் சிறப்பாகக் கருதக்கூடியவராக இருக்கலாம். அப்பொழுதும் ஸெல்மா லாகர் லெவ் எனும் ஸ்வீடிஷ் நாவலாசிரியையின் மிகச்சிறந்த வாசகர் தமிழர் க.நா.சு.தான் என்று சொன்னால் தவற வாய்ப்பில்லை.

ஸெல்மா லாகர் லெவ் 1958-ம் ஆண்டு ஸ்வீடிஷ் மாகாணத்தில் வாம்லேண்ட் என்கிற இடத்தில் பிறந்தார். சிறுவயதில் இளம்பிள்ளை வாதம் தாக்க, ஊனமுற்று, இளமைக்காலத்தை அநேகமாக மருத்துவ மனைகளிலும், வீட்டுக்குள்ளும் கழித்தார். பின் ஆசிரியர் தேர்ச்சிப் பள்ளியில் பயின்று ஆசிரியையானார்.

ஸெல்மாவின் முதல் புத்தகமான ‘மதகுரு’தான் அவருடைய மிகச் சிறந்த புத்தகமாகவும் கமதகுரு ருதப்படுகிறது. இப்புத்தகத்திலுள்ள கதைகள் அவர் வாழ்ந்த வான்லேண்ட் பிராந்தியத்தில், அவர் பிறப்புக்கு அரை நூற்றாண்டுக்கு முன் நிலவிய வாழ்வு குறித்த அவருடைய பாட்டியார் கூறியவற்றிலிருந்து, கிளைத்தவையாகும். 1909-ல் இவர் நோபல் பரிசு பெற்றார். பின் ஸ்வீடிவ் அக்காடமியும் இவரை உறுப்பினராக்கிக் கவுரவித்தது. அரசியல் பற்றியோ, மதம் பற்றியோ தீவிரமான அபிப்ராயங்கள் சொல்லாமல், பெண் எழுத்தாளர்களின் பட்டுக்கொள்ளாத ஜாக்கிரதையுடன் வாழ்ந்தார்.  1940-ல் காலமானர்.

லாகர் லெவின் மிக முக்கியமான வேறு நூல்கள் ‘போர்த்துகலியாவின் சக்ரவர்த்தி’, ‘ஜெருசலம்’ ஆகியவை. அதே போல் ‘நில்லின் அதிசய வீரக்கதைகள்’ இவர் எழுதிய மற்றொரு புகழ் பெற்ற புத்தகம். குழந்தைகளுக்காக எழுதியது. மொழிபெயர்ப்பில் பல தேசக் குழந்தைகளுக்கும் பரிச்சயப்பட்டது.

‘மதகுரு’ விவலிய நூல் போல் மேலிட்ட எளிமையும், உள்ளே ஆழமும் கொண்டது. நாடோடிக் கதைகள், புராணக் கதைகள் ஆகியவற்றின் சூழல் நிறைந்தஹ்டு. அவர் காலத்தைத் தாண்டிய ஒரு சுதந்திர உலகம் அது. குஸ்தாஃபிளாபர்ட், எமலி ஜோலா ஆகியோர் எதார்த்தக் கொடியை உயரப் பறக்கவிட்டுக் கொண்டிருக்கும்போது, ஸெல்மா அவருடைய சொந்த உலகில் ஆழ்ந்து, தர்க்க மூளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சம்பவங்களை விதைத்து, புராண மரபுடன் ஒரு கதையைப் பல்வேறு அர்த்தங்கள் தொனிக்கும்படி எழுதிக்காட்டி, அதில் வெற்றியும் பெறுகிறபோது, எதார்த்தம் நாவலின் தவிர்க்க முடியாத அம்சம் அல்ல என்றும் சொல்லலாம், அல்லது மிகச்சிறந்த இக்கதை நாவல் அல்ல என்றும் சொல்லலாம். புராண மரபு கொண்ட இந்திய மனம் இந்நாவலை விசேஷமாக ஏற்கக் கூடியதுதான். ஸாகா என்ற வார்த்தையின் மூலப்பொருளே பழைய சாகசக் கதைகள் என்பதுதானாம்.

இந்த நாவலைத் தமிழில் படித்திருப்பவர்களாக நான் நாலைந்து பேர்களை நிச்சயம் சந்தித்திருப்பேன். உவகையுடன் இச்செய்தியை இங்கு குறிக்கிறேன். கிருஷ்ணன் நம்பிக்கு இந்த நாவல் ரொம்பவும் பிடித்திருந்தது. கி. ராஜநாராயணனும், தீப. நடராஜனும் இந்த நாவலைப் படித்தார்கள் என, போன ஜென்ம வாசனைப் போல் ஒரு நினைவு. வல்லிக்கண்ணன் படித்திருக்கக்கூடும். நகுலன் ஆங்கிலத்திலோ, தமிழிலோ அவசியம் படித்திருப்பார். G.M.L. பிரகாஷ் படித்திருக்கக் கூடும். இதுதவிர இன்னும் ஒரு அரை டஜன் பேர்கள் அல்லது ஒரு டஜன் பேர்கள் கூட நிச்சயம் படித்திருப்பார்கள். தமிழில் வெளி வந்து 22 வருடங்கள் ஆகியிருக்கின்றன. சிறந்த புத்தகங்கள் மெல்ல மெல்ல இலக்கிய பீடத்தைப் பற்றிக் கொண்டுவிடும் என விமர்சகர்கள் தொடர்ந்து நம்பிக்கைத் தெரிவித்து வருகிறார்கள். க.நா.சு.வின் தமிழ் சேவை வீண் போகாது என நம்புவோமாக.

- நன்றி கொல்லிப்பாவை இதழ்த்தொகுப்பு.

*******

http://en.wikipedia.org/wiki/Selma_Lagerl%C3%B6f

மதகுரு புத்தகம் ‘மருதா’ பதிப்பகம் வெளியீடு கிடைக்குமிடம்: புக்லேண்ட், டிஸ்கவரி புக் பேலஸ்

மதகுரு  இணையத்தில் வாங்க இங்கே செல்லவும்

கொல்லிப்பாவை இதழ்த்தொகுப்பு இணையத்தில் வாங்க இங்கே செல்லவும்

Saturday, April 9, 2011

ஹெர்மன் ஹெஸே: அறிமுகக்குறிப்பு - சுந்தர ராமசாமி

ஹெர்மன் ஹெஸே எழுதிய ‘சித்தார்த்தா’வின் திரைப்படத்தில், ஓர் இந்தி நடிகை அம்மணமாக நடித்ததை ஒட்டி ஏற்பட்ட பரபரப்பில், இந்திய ‘அறிவாளி’களின் மத்தியில் இந்hermann_hesseத ஆசிரியரின் பெயரும் கொஞ்சம் அடிபட்டது. புத்த நிர்வாணத் தத்துவத்தில் வெகுவாக ஈடுபாடு கொண்ட ஆசிரியருக்கு இந்த விதமாய் புகழ் வந்து சேர்ந்தது! இந்த விளம்பரத்துக்கு முன்னாலும் அவர் சில குறிப்பிட்ட வட்டங்களில் தெரிய வந்தவர்தான். ஹெர்மன் ஹெஸே இந்தியாவின் மீதும், இந்திய ஆத்மீகத் தத்துவங்கள் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவருடைய மிக நெருங்கிய உறவினர்கள் கிறிஸ்துவ மதப் பணியில் மிக நீண்டகாலம் இந்தியாவில் செயல்பட்டிருக்கிறார்கள்.  இவர் மிக விரும்பிப் படித்த புத்தகங்களில் பகவத் கீதையும் ஒன்று. வெளிநாட்டு அறிஞர் ஒருவர் இந்தியாவின் மீது இவ்வளவு ஆழ்ந்த அக்கறை கொண்டு விட்டாரென்றால் ஒரு பதில் உபகாரமாய் அவரை சற்று கவனிப்பது இந்திய அறிவாளிகளின் பண்புகளில் ஒன்றல்லவா. மார்க்ஸ் முல்லர், எமர்சன், தோரோ, எலியட், ரோமா ரோலண்ட் ஆகியோர் அடங்கிய பட்டியலில் ஹேஸேயும் சேர்த்துக் கொள்ளப்பட்டார். இந்திய ஆத்மீக சிந்தனை வெளிநாட்டில் கொடிகட்டிப் பறப்பதை பற்றி பீத்திக்கொள்ளும்போது பிற ஆசிரியர்களுடன் இவருடைய பெயரும் அவர்களுக்கு நினைவில் வரும்.  ஹெஸேயின் புத்தகத்தையும் படித்துப் பார்க்கலாம்தான். அவை மிக உயர்ந்தவை. ஆனால் படிப்பது, பொறுப்புடன் படிப்பது, அவ்வளவு எளிமையான காரியம் இல்லை. பெயர் உதிர்ப்போ செல்லுபடியாகிக் கொண்டும் இருக்கிறது.

ஹெஸேயைத் தமிழில் படிக்க வேண்டும் என்றால் ‘சித்தார்த்தா’ இருக்கிறது. திருலோக சீதாராம் மொழி பெயர்த்திருக்கிறார். ‘கவித்துவ’ நடையில் செய்து தந்திருக்கிறார். இந்த ‘கவித்துவ’ நடையும் ஆத்மீக விஷயமும் இந்திய நாவலை படிப்பது போன்ற தன்மையை ஏற்படுத்துவதால் சிலர் விரும்பிப் படித்திருக்கிறார்கள். பலர் படிக்க வேண்டும். ஒரு சிறந்த நாவல் இது.

இவர் ஜெர்மனியில் பிறந்தவர். ஜெர்மன் மொழியில் எழுதியவர். மத நம்பிக்கை ஊறிப்போன குடும்பம் அவருடையது. சிறுவயதில் இவரும் பாதிரிப் படிப்புக்குச் சேர்க்கப்பட்டார். ஆனால் இவர் படித்து முடிக்கவில்லை. பாதியில் நிறுத்திக்கொண்டு விட்டார். இவர் பல வேலைகள் பார்த்திருக்கிறார். ஒரு மெக்கானிக்காக, புத்தக விற்பனையாளராக, புராதன கலைப் பொருட்களின் விற்பனையாளராக.

150px-Hermann_Hesse_-_Siddhartha_(book_cover) இவர் பிரயாணம் செய்வதில் மிகுந்த விருப்பம் உள்ளவர். பல தேசங்களில் சுற்றி இருக்கிறார். இத்தாலியும், இந்தியாவும் அவருக்கு பிடித்த தேசங்கள். ஹெஸேயை வசனத்தில் எழுதிய கவி என்று சொல்ல வேண்டும். இவருடைய படைப்புகளும் உள்நோக்கியது. மதங்களோ தத்துவங்களோ மனிதப் புதிருக்கு, துக்கத்திற்கு விடை கற்றுத் தரவில்லை என்று மனிதன் இன்னும் அவனுடைய துக்கத்திற்கு அவனே விடைதேடி கண்டுபிடித்துக் கொள்ளும் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறான் என்றும், அவர் எண்ணுவது போல் தோன்றுகிறது, அவருடைய நாவல்களை படிக்கும்போது.

‘சித்தார்த்தா’ 1922-ல் எழுதியது. ஆத்ம ஞானத்தைத் தேடி அலைகிறான் ஒரு இளைஞன். அவன் சீரும் செழிப்புமாய் வாழ்ந்தவன். சுற்றத்தையும், செல்வத்தையும் துறந்து ஊர் ஊராக அலைகிறான். தவ வாழ்க்கையை மேற்கொள்கிறான். அதில் அலுப்புற்று மனந்திரும்பி பெண்ணுறவில் திளைக்கிறான். மீண்டும் ஆத்மீக வாழ்க்கைக்கே திரும்புகிறான். ஒரு சமயம் புத்த பகவானை இவன் நேரில் சந்திக்க நேருகிறது. உண்மைத் தேடலுக்கு பிறர் தரும் தத்துவங்கள் பயன்படா என்றும் ஒவ்வொருவனும் அவனே நொந்து, அறிந்து, ஆராய்ந்தே சத்திய தரிசனத்தை அடைய முடியும் என்றும் கூறி, இவன் புத்த பகவானை விட்டு விலகிச் செல்கிறான்.

இவருக்கு 1946-ம் வருடம் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இவர் எழுதிய பிற நாவல்கள் டெமியன், ஸ்டெப்பன் வூல்ப், நார்ஸிஸ் அன்டு கோல்டுமண்ட், மாஜிஸ்டர் லூடி ஆகியவையாகும்.

ஆங்கிலம் அறிந்தோர் படிக்க வசதியாய் இவருடைய நாவலின் மொழிபெயர்ப்புகள் காகித அட்டையில் கிடைக்கின்றன.

- நன்றி கொல்லிப்பாவை இதழ்த்தொகுப்பு.

http://en.wikipedia.org/wiki/Hermann_Hesse

கொல்லிப்பாவை இதழ்த்தொகுப்பு இணையத்தில் வாங்க இங்கே செல்லவும்

Thursday, April 7, 2011

பேர்லாகர் குவிஸ்டு: அறிமுகக்குறிப்பு - சுந்தர ராமசாமி

ஸ்வீடிஸ் தேசத்து இலக்கிய கர்த்தா, 1951ல் நோபல் பரிசு பெற்றவர். ‘பாரபாஸ்’ என்னும் நாவல் எழுதி உலகப்புகழ் பெற்றவர். இந்நாவல் வெளிவந்த முதலாண்டிலேயே பதினொரு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதாம். திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது.

‘பாரபாஸ்’ நாவல் தமிழிலும் ‘அன்பு வழி’ என்ற தலைப்பில், க.நா.சு.வால் Lagerkvist மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒரு பதிப்பு வந்ததோடு சரி. வாசகர்கள் கண்டுபிடித்துப் படித்துப் பார்க்க வேண்டிய நாவல் இது.

‘அன்புவழி’ நாவலில் திருடன் ஒருவன் தண்டனைக்கு உள்ளாகிறான். அவனுக்குப் பதிலாக இயேசு குருசில் அறையப்பட்டுத் தண்டனை பெறுகிறார். இயேசுவுக்குப் பதிலாக ‘பாரபாஸ்’ விடுதலை பெறுகிறான். இயேசு குரிசில் அறையப்படும் காட்சியை  கண்ணால் பார்க்க நேரும் ‘பாரபாஸ்’ பெரும் பாதிப்புக்குள்ளாகிறான். இயேசு குரிசில் அறையப்பட்ட காட்சி அவன் மனதில் நீங்காது இடம் பெறுகிறது. ஆனால் அவனால் இயேசுவை முழுமையாக ஏற்றுக்கொள்ளவோ, பின்பற்றவோ முடியவில்லை. செம்புச் சுரங்கம் ஒன்றில் அடிமையாக வேலை பார்க்கும் பாரபாஸ் மன உளைச்சல் என்ற குரிசில் ஓயாது தன்னை அறைந்து அவதிக்குள்ளாகிறான். ஆத்மீக ஒளியை ஏற்றுக்கொள்ள விரும்பியும், ஏற்றுக்கொள்ள இயலாத, தருக்க உலகுக்கு ஆட்பட்டுவிட்ட நவீன மனிதனின் இரண்டுங்கெட்டான் நிலையை பாரபாஸ் காட்டுவதாக கொள்ளலாம்.

பேர்லார்கர் குவிஸ்டு 1891ல் பிறந்தவர். அவருடையது விவசாயிகளின் குடும்பம். மிகுந்த மத நம்பிக்கைக்கு உட்பட்டது. வைதீகமானது. கிறிஸ்துவ வைதீக மத நம்பிக்கைகளை பேர்லாகர் குவிஸ்ட்டால் முழுமையாக ஏற்க முடியவில்லை. முழுமையாக நிராகரிக்கவும் முடியவில்லை.

பேர்லாகர் குவிஸ்ட் சுமார் 35 புத்தகங்கள் வரையிலும் எழுதியிருக்கிறார். 1913ல் சுவீடனிலிருந்து அவர் பாரீஸ் சென்றார். பாரீஸில் கூபிஸ்டு இயக்கம் மும்முரப்பட்டுக் கொண்டிருந்த காலம். இவ்வியக்கம் இவர் மனதை பாதித்தது. நுண் கலைகள், முக்கியமாக ஓவியம் தன் தடைகளை முறித்துக்கொண்டு, வாழும் காலத்தின் பிரதிபலிப்பை ஏற்று பயணத்தை முடுக்கிக்கொண்டிருப்பதாயும், இலக்கியம் தயங்கி பின் நிற்பதாகவும் அவருக்குத் தோன்ற ஆரம்பித்தது. barabbas பாரபாஸ்

பேர்லாகர் குவிஸ்டு ஒரு கவியாக தன் இலக்கிய வாழ்வை ஆரம்பித்தவர். ‘துக்கம்’ என்ற தலைப்பில் இவர் வெளியிட்ட முதல் கவிதைத்தொகுதி இவருடைய 25வது வயதில் வெளியாயிற்று.

இளமைக் காலத்தில் பேர்லாகர் குவிஸ்ட்டை சங்கடப்படுத்திய பிரச்சனைகள் இரண்டு. ஒன்று அவருடைய மனோபாவத்துக்கு மாறாக வைதீக கிறிஸ்துவ மதம் கொண்டிருந்த நிலை. இரண்டு முதல் உலகப் போரின் விளைவாக ஏற்பட்ட நாசங்கள். இவர் எழுதிய முதல் நாடகம் ‘கடைசி மனிதன்’ என்பது. பைபிளைத் தழுவி எழுதிய நாடகம் இது. முப்பது வயதில் லாகர் குவிஸ்டு பிரஞ்சு தேசத்திலும் இத்தாலியிலும் வாழ்ந்தார். இவருடைய வாழ்க்கைப் பார்வையில் நம்பிக்கையின் ஒளியைச் சேர்க்க இவ்வெளிநாட்டு வாழ்க்கை உதவிற்று. மீண்டும் 1930 வாக்கில் ஐரோப்பியச் சூழ்நிலையில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. வன்முறையும், எதேச்சதிகாரமும், பயமுறுத்தல்களும் வாழ்க்கையை மிக மோசமாக கெடுத்துக் கொண்டிருந்தன. இச்சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு பேர்லாகர் குவிஸ்ட்  ஏகாதிபத்தியத்தின் பரம வைரியாக மாறினார். இக்காலத்தில் இவர் எழுதிய நூல் ‘தூக்குத்தூக்கி’ என்பது. ஏகாதிபத்தியத்தைக் கேலி செய்து முகத்திரையைக் கிழிக்கும் நூல் இது. இந்நாவல் நாடகமாக மாற்றப்பட்டு அரங்கேறியபொழுது ஸ்காண்டிநேவிய நாடக உலகில் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளாயிற்று.

இவருடைய  ’ஆத்மாவை இழந்த மனிதன்’ என்ற நாவலில் பலாத்காரவாதியான ஒரு அரசியல்வாதி காதல் வாழ்க்கை மூலம் பக்குவப்பட்டு மனித வாழ்வைக் கருணையோடு பார்க்கும் மாற்றாத்தைப் படிப்போர் ஏற்றுக்கொள்ளும்படி மிக அழகாக சொல்லி இருக்கிறார். இதற்குப் பின் இவர் எழுதிய பிரபல நாடகம் ‘மனிதன் வாழட்டும்’ என்பது. நாடகத்தில் இயேசு நாதர், சோக்ரதர், ஜாண் ஆப் ஆக், ஒரு அமெரிக்க நீக்ரோ ஆகியோர்கள் வருகிறார்கள். இவர்களுடைய தலைவிதியின் பொதுத்தன்மையை ஆராய்கிறார் பேர்லாகர் குவிஸ்டு இந்நாடகத்தில்.

பேர்லாகர் குவிஸ்டு பேச்சில் நம்பிக்கை அற்றவர். பொதுக் கூட்டங்களின் கோலாகலங்களில் அவர் எப்போதுமே கலந்து கொண்டதில்லை. நோபல் பரிசு பெற்றபொழுது நிருபர்கள் அவரை அணுகி உலக மக்களுக்கு ஒரு விசேஷ செய்தி தர வேண்டும் என்று கேட்டதற்கு பேர்லாகர் குவிஸ்டு, ‘சொல்ல எதுவும் இல்லை என புத்தகங்களில் அனைத்தும் சொல்லி இருக்கிறேன்’ என்றார்.

- நன்றி கொல்லிப்பாவை இதழ்த்தொகுப்பு.

http://en.wikipedia.org/wiki/P%C3%A4r_Lagerkvist

பாரபாஸ்  இணையத்தில் வாங்க இங்கே செல்லவும்

கொல்லிப்பாவை இதழ்த்தொகுப்பு இணையத்தில் வாங்க இங்கே செல்லவும்

Monday, March 21, 2011

ஃபிரான்ஸ் காஃப்கா (1883-1924)ஓர் அறிமுகம்-பிரம்மராஜன்

ஃபிரான்ஸ் காஃப்காவின் பெயர் ஆஸ்திரிய-ஐரோப்பிய நவீனத்துவத்தில், குறிப்பாக நாவல் இலக்கியத்தில் ஸ்திரமாக நிலைபெற்றிருக்கிறது. ராபர்ட் மியூசில், தாமஸ் மன், ஸ்ஃடெபன் ஸ்வெய்க், ஹெர்மன் ப்ரோக் ஆகிய எழுத்தாளர்களுக்கு மத்தியில் காஃfranz-kafka1ப்காவின் எழுத்து தனித்து தெரிகிறது. நீட்ஷேவுக்குப் பிறகு வந்த எழுத்தாளர்களில்–குறிப்பாக புனைகதை எழுதியவர்களில்–தனித்த இடத்தைப் பெறக்கூடியவராக இருப்பவர் ஃபிரான்ஸ் காஃப்கா. காஃப்காவின் நம்பிக்கை இழப்பை மட்டும் இங்கு நாம் தனிப்படுத்திச் சொல்லவில்லை.  காஃப்காவின் வாழ்வியல் பார்வை  அவரது நாவல்களிலும் சிறுகதைகளிலும் வெளிப்படும் விதம் பீதிக் கனவுத்தன்மையானது. பொறுத்துக் கொள்ளமுடியாத மனிதச் சூழ்நிலைகளை உருவாக்கி அதில் வாசகனைச் சிக்கவைப்பவர்  காஃப்கா. ஷோப்பன்ஹீர் மற்றும் நீட்ஷே ஆகிய ஜெர்மானிய தத்துவவாதிகள் அவர் மீது தனித்த ஆளுமை செலுத்தியிருக்கின்றனர். ஆனால் காஃப்கா  அதிகம் சுயசரிதைத் தன்மை உடைய புதினங்களை விரும்பிப் படித்தார். இந்தப் பட்டியலில் வருபவர்கள் Goethe, Dostoyevsky, August Strindberg, Grillparzer, Kleist  மற்றும் Kierkegaardஆவர். செக் நாவலாசிரியரான Knut Hamsenஇன் நூல்கள் மீது காஃப்காவுக்கு தனிப்பட்ட விருப்பம் இருந்தது.

ஃபிரான்ஸ் காஃப்காவின் பிரதான படைப்புகள் எதுவும் அவருடைய இறப்புவரை வாசகர்களுக்குக் கிடைக்கவில்லை.  அவருடைய ஆரம்ப கதைகளான The Judgement (1912), Metamorphosis ( 1916 ), In the Penal Colony (1919)  மூன்றினையும் Punishments என்ற தலைப்பில் அவர் வாழ்நாளுக்குள் ஒரு தொகுதியாக ஆக்கிப்பார்க்க விரும்பினார். ஆனால் விருப்பம் நிறைவேற வில்லை. அவருக்குப் புகழ் தேடித்தந்த The Trial மற்றும்  The Castle ஆகிய நாவல்கள் அவர் இறந்த பிறகே நூல் வடிவம் பெற்றன. தனது நண்பரும் இலக்கியவாதியுமான Max Brod என்பவரிடம் காஃப்கா   எழுதிய எல்லா சிறுகதை, நாவல்கள் மற்றும் அனைத்துக் கையெழுத்துப் பிரதிகளையும் தீயிட்டு எரித்துவிட வேண்டும் என்ற கடைசி விருப்பத்தினை தெரிவித்துச் சென்றார். 1921ல் காஃப்கா எழுதிய உயிலிலும்  இதை அழுத்தமாக எழுதியிருக்கிறார். Max Brod  அவரது நண்பரின் கடைசி விருப்பத்தைப் பூர்த்தி செய்திருந்தால் இன்று எவருக்கும் காஃப்கா என்ற முதல்தர  நவீனத்துவ எழுத்தாளனைத் தெரியாமலேயே போயிருக்கும். அவரே குறிப்பிட்டது போல இந்த வாழ்க்கையை ” borderland between loneliness and fellowship” என்ற அளவிலேயே வாழ்ந்துவிட்டுப் போன காஃப்கா இலக்கியத்தை ஒரு நிறுவனமாகப் பார்க்க விரும்பவில்லை. அவர் அந்தக் கருத்தை நம்ப மறுத்தார்.

இந்த வாழ்உலகினை மீறிச் சென்றுவிட வேண்டுமென்ற மனிதனின் அடக்க முடியாத ஆன்மீகத் தூண்டல் காஃப்காவின் எழுத்துக்களில் காணப்படுகிறது. பெரும்பாலோரால் ஏற்றுக் கொள்ளப் பட்ட, மதவியல் தேடல்களை நோக்கிப் பயணங்களை மேற்கொள்பவர்கள் போல காஃப்காவின் பாத்திரங்கள் தோன்றினாலும் கூட ”ஆஸ்திரிய மனதின் நோயுற்ற தன்மை”யையும்  ”ஆன்மீகக் குழப்பத்தையும்” வெளிக்காட்டுபவர்களாகவும் இருக்கின்றனர். விசாரணை என்கிற தாட்சண்யமற்ற செயல்பாடு பெரும்பான்மையான சமயங்களில் முக்கிய கதாபாத்திரங்களை மௌனமாக்குவதற்கே பயன்பட்டது. காஃப்காவின் The Trial  நாவலில் வரும் Joseph.K இதற்கு ஒரு எடுத்துக் காட்டு. பிற நாவலாசிரியர்களான Musil, Schnitzler, Broch ஆகியோர் சமூகத்தின் கூட்டு நோய்க்கூற்றுத் தன்மையை குவிமையப்படுத்த விரும்பியபோது காஃப்கா ஒரு தனிநபரிடம் இத்தன்மை இயங்கும் விதத்தை மிகுந்த உக்கிரத்துடன் தனது நாவல்களில் பதிவு செய்தார்.

காஃப்கா எழுதியவற்றிலேயே America (1927)என்ற நாவல் மாத்திரம் வெளிச்சம் நிரம்பியதாயும், மகிழ்ச்சி நிரம்பியதாயும் இருக்கிறது. காரணம் இதில் தனிநபரை வதைக்க வரும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இடம் பெறுவதில்லை. மேலும் முதல் இரண்டு நாவல்களின் (விசாரணை, கோட்டை) இடம்பெறும் நாயகர்களின் பெயர்களுக்குப் பதிலாக சுருக்கப்பட்ட முதல் எழுத்துக்களே பெயர்களாய்த் தரப்பட்டுள்ளன. இதற்கு மாறாக ”அமெரிக்கா” நாவலில் வரும் நாயகனின் பெயர் Karl Rossman.

ஒரு ஆன்மீகத் தேடலில் ஈடுபடக்கூடிய அருகதை மனிதனுக்கு உண்டா என்ற கேள்வியையும் காஃப்காவின் நாயகர்கள் எழுப்பத்தான் செய்கின்றனர். மனிதத்தோல்வியும் மனித நிராசையும் காஃப்காவின் கதைகளிலும் நாவல்களிலும் சகஜமாகக் காணப்படுபவை.  வாழ்தலின் பயங்கரங்களை மிக எளிமையான மொழியில் மிகவும் பரிச்சயமான சூழ்நிலைகளில் சாதாரண நபர்களைக் கொண்டு காஃப்கா சித்தரிக்கிறார். நிறுவனங் களிடமிருந்து இவர்கள் அந்நியமாகிப் போவது மட்டுமன்றி, அவை இயங்கும் விதத்தினை எந்த அறிவார்த்தக் கருவிகளைக் கொண்டும் இந்தக் கதாபாத்திரங்களால் புரிந்து கொள்ளவும் முடிவதில்லை. வாழ்வின் நச்சரிப்பும், இருத்தல் பற்றிய அர்த்தக்குழப்பங்களும் நெட்டித் தள்ளும்போது இவர்களில் சிலர் (கிரெகர் ஸாம்ஸாவைப் போல) திடீரென்று ஒரு நாள் காலையில் பூச்சியாக மாறிவிடுகின்றனர்.

ஃபிரான்ஸ் காஃப்கா 1883ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3ஆம் தேதி ப்ராக் நகரில் ஒரு நடுத்தர யூதக் குடும்பத்தில் பிறந்தார். சட்டம் படித்துப் பட்டம் பெற்று பல ஆண்டுகள் (அவரது காச நோய் முற்றிய நிலையில் அவர் வேலையை விட வேண்டி வந்தது ) Workers Accident Insurance Companyயில் தொடர்ந்து பணியாற்றினார். ஆனால் அவரது நிஜமான விருப்பம் எழுதுவதற்காக கூடுதலான நேரத்தை கண்டுபிடித்துக் கொள்வதற்காகவோ அல்லது உண்டாக்கிக் கொள்வதற்காகவோ இருந்தது. ஒரு வேலையில் இருந்து பணம் சம்பாதித்தல்-என்பது போன்ற புறவயமான கட்டாயங்கள் மிக அகவயமான எழுதுதலுடன் முரண்பட்டு ஒருவித முடிவற்ற மன உளைச்சலை காஃப்காவுக்கு உண்டாக்கின. இந்த முரண்பாடுகளுக்கிடையிலும், பிறகு அவருக்கு ஏற்பட்ட காசநோயின் துன்புறுத்தல்களுக்கு இடையிலும்தான் அவரது எழுத்துச் சாதனைகளை அவர் மேற்கொள்ள வேண்டியிருந்தது. இதைவிடக் கடுமையான முரண்பாடாய் இருந்தது காஃப்காவின் தந்தைக்கு இலக்கியத்தின் மீதும் எழுத்தின் மீதும் இருந்த வெறுப்பு.   மிக வெளிப்படையாகவே காஃப்காவின் தந்தை, காஃப்கா எழுதக் கூடாது என்று தடை விதித்தார். ஒரு முறை அவர் காஃப்காவை ஒரு ”பூச்சி”  என்று வைதுவிட்டார். இதன் விளைவாக, ஒரு மௌன எதிர்வினையாக உருவானதுதான் காஃப்காவின் Metamorphosis என்று கருதுபவர்களும் உண்டு. (Franz Kuna : Vienna and Prague 1890-1928 )

அக மற்றும் புற உலக முரண்பாடுகளுடன் வாழ்வில் ஈடுபடும் கலைஞர்களுக்கு, இருத்தலின் சிதைமானம் மிக நெருக்கமான அர்த்தத்துடன் புரிந்து விடுகிறது. காஃப்காவின் புதினம் சாராத எழுத்துக்களும் அவருடைய நாவல்கள் அளவுக்கே முக்கியத்துவம் உடையவை. அவற்றில் காஃப்காவின் டயரிகளும், அவருடைய காதலிகளுக்கும் பெண்நண்பிகளுக்கும் எழுதிய கடிதங்களும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. ஆயினும் அவர் பிற ஐரோப்பிய எழுத்தாளர் களைப் போல விமர்சனக் கட்டுரைகள் ஏதும் எழுதியதாகத் தெரியவில்லை. காஃப்கா அவருடைய தந்தைக்கு எழுதிய Letter to His Father மிக விஷேசமானது. இந்தக் கடிதத்திற்கு நிறைய மனோவியல் விளக்கங்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. எனினும் காஃப்கா மனோவியல் விளக்கமுறைகள் பற்றி நம்பிக்கையின்மையையும் சந்தேகத்தையும் கொண்டிருந்தார். காஃப்காவின் எழுத்துக்களின் மூலமாக விளக்கமுறும் மதரீதியான வடிவாக்கம் குறித்து Max Brod காஃப்காவின் வாழ்க்கை வரலாற்று நூலில் வியாக்கியானம் தந்திருக்கிறார். Max Brodஇன் கூற்றுப்படி ஒரு முழுமுற்றான  உலகத்தில் காஃப்காவுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால் இந்த முழுமை புரிந்து கொள்ளப்படாத அளவுக்கு மனிதனும் கடவுளும் ஒரு முடிவற்ற தவறான புரிந்து கொள்ளலில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

காஃப்காவுக்கு யூத மதத்தில் முழுமையான நம்பிக்கை இருந்தது என்பதையும் மதக்கூட்டங்களில் இறுதிவரை அவர் பங்கேற்றுக் கொண்டார் என்ற தகவலையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டிய அவசியம் இருக்கிறது. எனினும் யூத மதத்தின் மீதாக தனக்கிருந்த நம்பிக்கை குறித்தும் காப்ஃகாவுக்கு ஐயங்கள் தோன்றிக் கொண்டிருந்தானிருந்தன என்பது அவர் மேக்ஸ் பிராடுக்கு எழுதிய கடிதத்திலிருந்து தெரிகிறது.

எக்சிஸ்டென்ஷியலிஸ்டுகள் காஃப்காவை தமக்கு உகந்த வகையில் விளக்கமளித்துப் புரிந்து கொண்டனர். தனி மனிதன் தனக்கு உவப்பில்லாத ஒரு உலகில் யதேச்சைத்தன்மையுடன் தள்ளப் பட்டிருக்கிறான் என்கிற கருத்து ஓரளவுக்கு The Trialமற்றும் The Castle நாவல்களில் வெளிப்பட்டாலும், இந்த நாவல்களின் அர்த்தப்பாடுகள் இங்கு முடிந்து விடுவதில்லை. சர்ரியலிஸ்டுகளும் தம் பங்குக்கான விளக்கத்தைத் தந்தனர். சர்ரியலிஸ்டுகள் கொடுத்த விளக்கங்களுக்கும் காஃப்காவின் எழுத்துக்களுக்கும் எந்த உறவும் இருக்கவில்லை.

மார்க்சிஸ்டுகளும் தங்களுக்கு ஏற்றவாறு காஃப்காவை விளக்கம் தந்து பயன்படுத்திக் கொண்டனர். நிறுவனங்களின் மனித விரோதத்தன்மை பற்றிக் கூறும்போது ஒற்றை எழுத்து மட்டுமே பெயராகக் கொண்ட காஃப்காவின் நாயகர்களை வதைத்த அதிகார வர்க்கம் பற்றிய சாடல்களாக மார்க்சிஸ்டுகள் காஃகாவின் புதினங்களை அர்த்தப்படுத்திக் கொண்டனர். தன் மீது சுமத்தப்பட்ட குற்றம் இன்னதென்று அறியாமல், நிரூபணம் ஆகாமல் கத்தியால் குத்தப்பட்டு ஒரு நாய்போல இறந்துபோகிறான் Joseph.K.. இவன் ஒரு நிஜமான மனிதனின் அரூப வடிவமாக இருப்பவன். Joseph.K.வுக்கு ஏற்பட்டது போன்ற விதிவசமான நடப்புகள் எந்த சாதாரண மனிதனுக்கும் ஏற்படலாம். அதிகாரவர்க்கத்தின் மீதான கிண்டல்களாகவும் காஃப்காவின் நாவல்கள் பார்க்கப்பட்டன. The Castleநாவலில் இடம் பெறும் கோட்டையின் அதிகாரிகள் தங்களது கோப்புகளுக்குத் தேவையற்ற முக்கியத்துவம் தருகிறார்களே ஒழிய அந்தக் கோப்புகளில் என்ன தகவல்கள் இருக்கின்றன என்று அவர்களுக்கே தெரிவதில்லை. யாரால் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன  என்றும் எப்பொழுது என்றும் எவருக்கும் தெளிவாகத் தெரிவதில்லை.

காஃப்காவின் அப்பா, காஃப்காவின் காதலிகள், காஃப்காவின் உடல்நலக் கோளாறு, காஃப்காவின் எழுத்து ஆகிய நான்கு அம்சங்களும் ஒன்றுக்குள் ஒன்றாய்ப் பிணைந்தவை. இருப்பினும் இதில் நடுநாயகமாக நிற்பவர் அவரின் தந்தை. அவருடைய தந்தை காஃப்காவுக்கு ஒரு சர்வாதிகாரியாகவே தோற்றமளித்தார். வெல்ல முடியாத வலிமைமிக்க வெண்கல மனிதன் ஒருவனைப் பற்றியும் காஃப்கா தனது டையரியில் குறிப்பிடுகிறார். அவருடைய தந்தையின் மற்றொரு வடிவமாக இந்த வெண்கல மனிதனைக் கூறலாம்.  எழுத்து இல்லை என்றால் அவரது இருப்புக்கே அர்த்தமில்லை என்று நினைத்தவர் காஃப்கா. ஆனால் அவருடைய  அப்பா காஃப்காவை எழுதக் கூடாது என்று சொன்னவர். காஃப்காவின் அப்பாவுக்கும் காஃப்காவின் நாவலில் இடம் பெறும் பலரின் விதிகளைத் ஒரு கோப்பின் இறுதியில் இடும் கையெழுத்தில் வைத்திருக்கிற, மனிதமையற்ற அதிகாரிகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் காணப்படுகின்றன. காஃப்காவின் புனைகதைகளில் இடம் பெறும் உதவியாளர்கள் மற்றும் தகவலாளர்கள் படைப்பில் முழுமையடையாது கந்தவர்களை ஒத்திருப்பதாக அபிப்பிராயப்படுகிறார் வால்ட்டர் பெஞ்சமின் என்ற விமர்சகர்.

Felice Bauer, Julie Wohryzeck, Milena Jeseneska, Grete Bloch, Dora Dymant ஆகிய பெண்கள் காஃப்காவின் வாழ்க்கையில் மிக நெருக்கமாக இருந்தவர்கள். இவர்களில் இருவர்-Felice Bauer, Milena Jeseneska-Pollock-காஃப்காவைத் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு நெருங்கி வந்திருக்கின்றனர். திருமண ஒப்பந்தம்  செய்யப்பட்டு பிறகு அந்த ஒப்பந்தம் இரண்டு முறை முறிந்து போயிற்று. Grete Bloch என்ற பெண் Milenaவின் போலந்துத் தோழியாவார். இவ்விருவரும் நாஜிகளின் சித்திரவதை முகாம்களில் இறந்து போனார்கள். இதில் Milena ஒரு எழுத்தாளர். Dora Dymant காஃப்கா நோயின் பிடியில் கிடந்த இறுதி வருடங்களில் அர்ப்பணிப் புடன் அவரைக் கவனித்துக் கொண்டவர். இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன் நோராவைத் திருமணம் செய்து கொள்ள அந்தப் பெண்ணின் தந்தையிடம் காஃப்பாக அனுமதி கேட்டதாகவும் அறிகிறோம். தன் தந்தையைப் கண்டு பயப்பட்டதைப் போலவே காஃப்கா திருமணம் பற்றியும் பயப்பட்டார். திருமணம் என்கிற நிறுவனம் அவருடைய எழுத்துச் சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டு விடும் என்று அஞ்சினார்.

எழுதுவது என்பதே ”இயற்கையான வகையில் வயோதிகத்தை அடைவதாகும்” என்று காஃப்கா தனது டயரிகளில் குறிப்பிடுகிறார். ஒருவகையில் தன் அப்பாவை ஜெயிக்க வேண்டுமானால் காஃப்கா கல்யாணம் செய்து கொண்டு தான் சுதந்திரமானவன், தன்னால் தனியாக ஒரு குடும்பத்தை இயக்க முடியும் என்பதை நிரூபிக்க வேண்டும். ஆனால் கல்யாணம் என்கிற ஏற்பாட்டிற்கு ஒத்துப்போவ தென்பது அவரது அப்பாவைப் போலவே காஃப்காவும்  ஆகிவிடுவதற்கு சமமாகிவிடும்.

காஃப்காவின் எழுத்து வாழ்க்கையில் குறுக்கிட்டு இறுதிவரை துன்புறுத்தியது அவரது காசநோய். அவரைப் பொறுத்தவரை இரவு என்பது எழுதுவதற்காகவே ஒதுக்கப்பட்ட பிரத்தியேகக் காலம். மேலும் சர்வசகஜமாக கல்யாணம் செய்து கொண்டு பிள்ளைகளைப் பெற்று, குடும்பம் அமைத்துக் கொள்வதை, ஏதோ பிறப்புரிமை மாதிரி பலர் செய்து கொண்டிருக்கும் காரணத்தால் தான் பின்பற்ற வேண்டாம் என்றும் நினைத்தார். மேலும் அவர் ஒரு தந்தையாக ஆவது அவருக்கு ஒரு பீதியூட்டும் செயலாகப்பட்டது. எழுதுவதற்கு அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட உக்கிரத்தனிமையுடன் கல்யாணம்-குடும்பம் என்கிற நிறுவனம் என்றைக்கும் ஒத்துப்போகாது என்று காஃப்கா நம்பினார். இரவில் மட்டும் எழுதிக்கொண்டு, தீவிரத் தனிமையில் இருந்து கொண்டு, மிக லேசான சப்தங்களைக் கூடப் பொறுத்துக் கொள்ள இயலாத காஃப்காவை மணந்து கொள்வது தனது கடமையுடன் பிணைக்கப்பட்ட ஒரு சமய பிக்குவை கல்யாணம் செய்து கொள்வதற்குச் சமமாகிவிடும் என Feliceக்கு எழுதிய கடிதம் ஒன்றில் குறிப்பிடுகிறார். [Letters to Felice].  ஒவ்வொரு படைப்பாளியிலும் ஒருவித கவிஞனும்  ஒரு பலிகடாவும் இருக்கிறான் என்று நவீன ஆங்கில நாவலாசிரியரான Graham Greene குறிப்பிட்டார்.  இந்தப் படைப்பாளன்-பலிகடா தீராத Obession கொண்டவனாய் இருக்கிறான்.  காப்ஃகாவைப் பொறுத்தவரை இந்த Obession,  குறைபாடு, தோல்வி மற்றும் பாவம் செய்த உணர்வு ஆகியவற்றின் தொகுப்பாக அவரை அலைக்கழித் திருக்கிறது. காஃப்கா தன் மெலிந்த உடல் அமைப்பைப் பற்றி எப்போதும் தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்தார். இதையும் தன் அப்பாவுடன் அவர் ஒப்புமைப் படுத்தி தன்னைப் பலவீனனாக உணர்ந்தார். ஒரே இரவில் எழுதி முடிக்கப்பட்ட கதைதான் The Judgement (1912). ஆஸ்கார் பொலாக் என்ற மற்றொரு நண்பருக்கு எழுதிய கடிதத்தில் காஃப்கா எழுதுகிறார்:

””நமக்கு அவசியமான புத்தகங்கள், நம் மீது ஒரு துரதிர்ஷ்டத்தினைப் போலவோ, நம்மை விட நாம் அதிகம் நேசிக்கும் ஒருவரின் மரணத்தைப் போலவோ, தற்கொலையின் விளிம்பில் நாம் இருப்பதைப் போலவோ, மனித சஞ்சாரமே இல்லாத ஒரு         தூரத்துக் காட்டில் இருப்பதைப் போலவோ நம் மீது இயங்க வேண்டும்; நமக்குள் உறைந்து கிடக்கும் ஒரு சமுத்திரத்தினை வெட்டிப் பிளக்கக் கூடிய ஒரு கோடறி போலவோ பயன்பட வேண்டும்.”"

Metamorphosis, The Hunger Artist, Letter to an Academy, Investigations of a Dog, Josephine the Singer or The Mouse people ஆகிய கதைகளில் விலங்குத்தன்மை, அல்லது விலங்குகள் பற்றிய அணுகுமுறைகள் முழுமையாக இடம் பெறுகின்றன.  இந்த விலங்குத்தன்மை காஃப்காவின் எழுத்துக்களில் தலையாய முக்கியத்துவம் பெறுகிறது. ஒரு மனிதன் தன்னை விலங்காகவோ பூச்சியாகவோ பார்க்க வேண்டிய கட்டாயம் எப்போது வருகிறது? Milena  வுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் காஃப்கா எழுதுகிறார்:

”நான் காட்டில் வாழ்ந்திராத காட்டு விலங்கு. . . என் பயத்தை மிஞ்சியும் கூட உன் இருப்பிற்குள் வந்தேன். நீ எவ்வளவு நல்லவளாக இருந்தாய். நான் உன் காலடியில் கிடந்து உன் கைகளுக்குள் என் முகத்தை வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாக உணர்ந்தேன். பெருமிதப்பட்டேன். சுதந்திரமாய், சக்திவாய்ந்து,  இயல்பாய் இருந்தேன். . . ஆனால் இது எல்லாவற்றுக்கும் அடியில் நான் ஒரு விலங்காகவே இருந்தேன். நான் காட்டுக்குச் சொந்தமானவன். நான் இங்கே வாழ்ந்ததெல்லாம் உன் கருணை என்னும் சூர்ய ஒளியில். . .ஆனால் அது நீடிக்காமல் போய் விட்டது.”

Letter to an Academy என்ற சிறுகதைகயில் ஒரு மனிதக் குரங்கு விஞ்ஞானிகளின் குழு ஒன்றுக்கு உரையாற்றுகிறது–விலங்கு உலகிலிருந்து மனித உலகத்திற்கு வந்த பாதையைப் பற்றி. அது பிடிக்கப்படும் நாள் வரை பலவிதமான வெளியேறும் வழிகள் இருந்ததாகவும் திடீரென இப்போது ஒரு கூண்டிலிருப்பதால் எந்த வழியும் தெரியவில்லை என்கிறது அந்தக் குரங்கு. இப்போது அதற்கு வேண்டியது ”சுதந்திரம்” அல்ல. மாறாக வெளியேறுவதற்கான ஒரு வழி மாத்திரமே. தன் கூண்டுக்கு வெளியே மனிதர்கள் நடந்து செல்வதைப் பார்த்த பிறகு மனிதர்களைப் போல் நடந்து கொள்வது நல்லதென அதற்குத் தோன்றுகிறது. மனிதரின் அங்கஅசைவுகளை பிரயத்தனத்துடன் கற்றுக் கொண்டு இறுதியில் பேச்சையும் கற்றுக் கொள்கிறது.

எழுதுவதற்கான உந்தம் குறித்தும் காஃப்கா அவரது காதலிகளில் ஒருத்தியான ஃபெலிஸ்-க்கு எழுதும்போது குறிப்பிடுகிறார்: எழுதுதல் என்பது விநோதமானது, மர்மமானது, ஆபத்தானது. அது கொலைகாரர்களின் வரிசையிலிருந்து தாவித் தப்புவது. மெய்யாக நடப்பதை நிஜமாகப் பார்ப்பது. ஒரு வித உயர்நிலை நுட்பக் கவனம். இந்த கவனம் எவ்வளவு உயர்வாய் இருக்கிறதோ அந்த அளவு குறிப்பிட்ட வரிசையின் பிடியிலிருந்து தப்பி சுதந்திரமாய் இருக்கலாம்.

The strange, mysterious, perhaps dangerous, perhaps saving comfort that there is writing: it is the leap out of murderers’ row; it is a seeing of what is really taking place. This occurs by a higher type of observation, a higher, not a keener type, and the higher it is and the less within  reach of the row, the more independent it becomes, the more obedient to its own laws of motion, the more incalculabe, the more joyful, the ascendant its course.

(Letters to Felice)

பெரும்பாலானவர்கள் படிக்கக் கூடிய காஃப்காவின் புதினங்களை மொழிபெயர்த்தவர்கள் Edwin Muirமற்றும் Willa Muirஆகிய ஆங்கிலேயத் தம்பதிகள். எட்வின் ம்யூர் அவரது தனிப்பட்ட திறன்களிலேயே ஒரு நவீன ஆங்கிலக் கவிஞராவார். இந்தத் தம்பதிகள் அவர்கள் பார்த்ததுக் கொண்டிருந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு ஐரோப்பாவுக்கு சென்று ஜெர்மன் மொழி கற்றுக் கொண்டு முழுநேர மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டவர்கள். ஆங்கிலம் பேசும் உலகிற்கு காஃப்காவை அறிமுகம் செய்தவர்கள். இருப்பினும் இவர்கள் செய்திருக்கும் மொழிபெயர்ப்பின் குறைகள் சமீபமாக சுட்டிக் காட்டப் பட்டுள்ளன.

Mark Harmann என்பவர் ”கோட்டை” நாவலை முழுமையாக புதிய மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இவர் அடிப்படையாகக் கொண்டு மொழிபெயர்த்த மூலஜெர்மன் வடிவம் 1982ஆம் ஆண்டு ஜெமன்இயல்வாதியான  மால்கம் பாஸ்லி என்பவர் காஃப்காவின் கையெழுத்துப் பிரதிகளை எடிட் செய்து வெளியிட்டது. ம்யூர் தம்பதிகள் அடிப்படையாக எடுத்துக் கொண்டது காஃப்காவின் நண்பர் மேக்ஸ் பிராட் 1924ஆம் ஆண்டு எடிட் செய்து வெளியிட்டது.

காஃப்காவின் மொழி தெளிவானது அலங்காரங்கள் அற்றது. ஆஸ்திய-ஜெர்மானிய சட்டவியல் பிரயோகங்களைக் கொண்டது. ஓரளவு தட்டையாகவும் பல இடங்களில் சலிப்பேற்படுத்தும் வகையிலும் அமைந்திருப்பது. எனவே மொழிரீதியான வானவேடிக்கைகளுக்காக காஃப்காவைப் படிப்பவர்கள் ஏமாறுவது உறுதி.

*****

நன்றி: மீட்சி காலண்டிதழ்